ஒரு வந்தே பாரத் ரயிலை தயாரிக்க இவ்வளவு கோடி செலவாகுமா? டெண்டர் விஷயத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!
மத்திய அரசு 100 வந்தே பாரத் ரயிலை தயாரிப்பதற்காக ரூபாய் 30,000 கோடிக்கு வழங்கிய டென்டரை தற்போது ரத்து செய்துள்ளது. ரயிலை தயாரிப்பதற்கான செலவு தொகை அதிகமாக கோரப்பட்டதால் இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வந்தே பாரத் ரயிலை தயாரிப்பதற்கான செலவு தற்போது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு வந்தே பாரத் ரயிலை தயாரிக்க எவ்வளவு செலவாகும்? மத்திய அரசு இதற்காக எவ்வளவு செலவு செய்ய தயாராக இருக்கிறது? என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய அரசு ரயில்வே நிர்வாகம் மூலம் தற்போது இந்தியாவில் வந்தே பாரத் ரயிலை தயாரிப்பதற்காக அல்ஸ்தம் இந்தியா என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஒன்று வைத்துக் கொண்டது. அதன்படி 100 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரூபாய் 30,000 கோடியை இந்த ஒப்பந்தமாக போட்டிருந்தது. இந்நிலையில் அல்ஸ்தம் நிறுவனம் டெண்டரில் ஒரு ரயிலை தயாரிக்க ரூபாய் 150.9 கோடி தேவை என குறிப்பிட்டு இருந்தது.

இந்த டெண்டரில் மொத்தமே இரண்டு நிறுவனங்கள் தான் கலந்து கொண்டன. அதில் அல்ஸ்தம் இந்தியா நிறுவனம் வழங்கிய டெண்டர் தான் இருப்பதிலேயே குறைந்த விலை டெண்டராக இருக்கிறது. ஆனால் இந்திய ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில்வே தயாரிக்க அதிகபட்சமாக ரூபாய் 140 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்திருந்தது. தற்போது 10.9 கோடி ரூபாய் அதிகம் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதற்காக ரூபாய் 30,000 கோடிக்கு 100 வந்தே பாரத் ரயிலை வாங்குவதற்காக விடப்பட்ட டெண்டரை இந்திய ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் டெண்டர் விலை குறையும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் விலை குறையவில்லை அல்ஸ்தம் நிறுவனம் ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ரூபாய் 145 கோடிக்கு வந்தே பாரத் ரயிலை தயாரித்து வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த விலையும் ரயில்வே நிர்வாகத்திற்கு கட்டுபடியாகவில்லை. ரயில்வே நிர்வாகம் ஒரு ரயிலுக்கு 140 கோடி ரூபாய் தான் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் இன்று இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் கட்டுமானம் செய்வது கடினம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ரயிலின் சேஸிஸ் பகுதி முழுவதும் அலுமினியத்தால் உருவாக்கப்பட வேண்டும் என்பதால் விலை அதிகமாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த டென்டரில் அல்ஸ்தம் இந்தியா நிறுவனத்திற்கு போட்டியாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் ரயில் என்ற நிறுவனம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேதா சர்வோ டிரைவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த டெண்டரில் பங்கேற்றது. ஆனால் அந்நிறுவனம் ஒரு வந்தே பாரத் ரயில் ரூபாய் 170 கோடி தேவை என டெண்டரில் கோரியிருந்தது அதை ஒப்பிடும்போது அல்ஸ்தம் இந்தியா நிறுவனத்தின் டெண்டர் குறைவான விலையில் இருப்பதால் அந்நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்திய ரயில்வே நிர்வாகத்தின் ஒப்பந்தப்படி இந்த ரூபாய் 145 கோடி என்ற கட்டணம் ரயிலை தயாரிப்பதற்கான செலவு மட்டுமல்லாமல் ரயிலை பராமரிப்பதற்கான செலவும் உள்ளடங்குகிறது. இந்த ரயிலில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதை உடனடியாக அந்த ரயிலை கட்டமைத்த நிறுவனம்தான் பராமரித்து வழங்க வேண்டும். அதற்கான செலவையும் அந்நிறுவனம் தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறையை தற்போது இந்த ஒப்பந்தத்தில் வைத்துள்ளது.
இதன் காரணமாகவே பல்வேறு நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க தவிர்த்து விட்டன. தற்போது இரண்டு நிறுவனங்கள்தான் வந்தே பாரத் ரயில் தயாரிக்க முன்வந்துள்ளதால் இதில் ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு ரெண்டரை வழங்க வேண்டிய கட்டாயத்தில் ரயில்வே நிர்வாகம் இருக்கிறது. பெரும்பாலும் அல்ஸ்தம் இந்தியா நிறுவனத்துக்கு தான் இந்த டெண்டர் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படியாக டெண்டரை பெறும் நிறுவனம் ரயில்களை தயாரித்து வழங்கியவுடன், மத்திய அரசிடம் இருந்து ரூபாய் 13,000 கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் படிப்படியாக பராமரிப்பு காலத்திற்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் இவ்வளவு கட்டணம் என்ற ரீதியில் கட்டணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயிலை இந்தியா முழுவதும் செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்துவரும் நிலையில், தற்போது அந்த ரயிலை தயாரிப்பதற்கான செலவு அதிகரித்துள்ளதாக வெளியாகி உள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலப்பொருட்களின் விலை ஏற்றம் இந்த ரயில் தயாரிப்பு செலவுக்கான விலை ஏற்றத்திற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications









