பண மதிப்பிழப்பு நடவடிக்கையை போல் உச்சகட்ட அதிரடி... லட்சக்கணக்கான பழைய வாகனங்கள் பதிவு நீக்கம்!
பழைய வாகனங்களை அதிரடியாக பதிவு நீக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1), 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயதுடைய 1 லட்சத்திற்கும் அதிகமான டீசல் வாகனங்கள் அதிரடியாக பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக டெல்லி மாநில அரசு இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

தற்போது பதிவு நீக்கம் செய்யப்பட்ட டீசல் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. இந்த வாகனங்களை எலெக்ட்ரிக் கிட்கள் பொருத்தி இயக்கலாம். இது முதல் வாய்ப்பு. இல்லாவிட்டால் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகு அந்த வாகனங்களை வேறு மாநிலத்தில் விற்பனை செய்து கொள்ளலாம். டெல்லியில் இயக்க கூடாது.

டெல்லி மாநில அரசு அடுத்த அதிரடியாக வரும் நாட்களில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய பெட்ரோல் வாகனங்களையும் பதிவு நீக்கம் செய்யவுள்ளது. டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். டெல்லியில் பழைய வாகனங்களை வைத்திருப்பவர்கள் மத்தியில் இந்த அதிரடி நடவடிக்கை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் தற்போதைய நிலையில் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயதுடைய பெட்ரோல் வாகனங்களின் எண்ணிக்கை 43 லட்சமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 32 லட்சமாக இருக்கலாம் எனவும், கார்களின் எண்ணிக்கை 11 லட்சமாக இருக்கலாம் எனவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதிவு நீக்கம் செய்யப்பட்ட டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்களை டெல்லி சாலைகளில் இயக்குவது கண்டறியப்பட்டால், அந்த வாகனம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் எனவும், இதன்பின் அந்த வாகனங்கள் ஸ்கிராப்பிற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது சம்பந்தப்பட்ட வாகனம் அழிக்கப்பட்டு விடும்.

இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்த 1,01,247 டீசல் வாகனங்களை டெல்லி அரசு பதிவு நீக்கம் செய்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கும் வகையில் இந்த நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை வேறு மாநிலங்களில் பதிவு செய்வதற்கு தடையில்லா சான்றிதழ் பெற விரும்பும் வாகனங்களின் உரிமையாளர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்'' என்றனர். தற்போது பதிவு நீக்கம் செய்யப்பட்ட டீசல் வாகனங்களில் கார்களின் எண்ணிக்கை சுமார் 87 ஆயிரம் ஆகும். எஞ்சியவை பஸ்கள், டிராக்டர்கள் போன்ற வாகனங்கள் ஆகும்.

இந்தியாவிலேயே காற்று மிக கடுமையாக மாசடைந்த பகுதிகளில் ஒன்றாக டெல்லி உள்ளது. இதற்கு பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றன. எனவே அவற்றின் பயன்பாட்டை குறைப்பதற்காக டெல்லி மாநில அரசு மிக தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகின்றன.

பழைய வாகனங்களை பதிவு நீக்கம் செய்ததும், செய்ய போவதும் கூட இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான். அத்துடன் டெல்லியில் இயக்கப்படும் வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பதும் கூட கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லி மட்டுமல்லாது இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் காற்று மாசுபாடு பிரச்னை அதிகமாக உள்ளது. எனவே தற்போது அனைத்து மாநிலங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் மட்டுமல்லாது, சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் தற்போது உயர்ந்து கொண்டுள்ளது.

எனவே வரும் காலங்களில் இந்திய சாலைகளில் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை மிக அதிகளவில் பார்க்க முடியும். தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








