6ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை
பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய தெம்போடு, 6ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது 108 ஆம்புலன்ஸ் சேவை.
கடந்த 2008ம் ஜிவிகே அவசர மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று 108 ஆம்புலன்ஸ் சேவை பட்டி தொட்டியெங்கும் தனது சேவை கரத்தை நீட்டிய மாபெரும் உயிர்காக்கும் திட்டமாக திகழ்கிறது.

அவசர சிகிச்சை தேவைப்படுவோரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் கொண்டு சேர்த்து உயிரை காக்கும் இந்த சேவை தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் இல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் சிறப்பான சேவையை அளித்து வருகிறது.
குறிப்பாக, சாலை விபத்துக்களில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தில் இந்த சேவை மூலம் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. 20 வாகனங்களுடன் துவங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையில் இன்று 629 வாகனங்கள் 32 மாவட்டங்களில் சேவை புரிந்து வருகின்றன.
அதிக கட்டணத்துடன் கூடிய தனியார் சிறப்பு ஆம்புலன்ஸ்களில் மட்டும் இருந்து வந்த செயற்கை சுவாச கருவி, உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை இந்த இலவச சேவை வாகனங்களில் இருக்கின்றன. அனைத்து வசதிகளுடன் கூடிய மினி மருத்துவமனையாகவே வலம் வருகின்றன 108 ஆம்புலன்ஸ்கள்.
கடந்த 2011ம் ஆண்டு முதல் பிறந்த சிசுக்களுக்கு மூச்சு திணறலுக்கான சிகிச்சை அளிக்கும் வசதிகொண்ட இன்குபேட்டர் மற்றும் ஆக்சிஜென் தெரபி உள்ளிட்ட சாதனங்களும் இந்த ஆம்புலன்ஸ்களில் பொருத்தப்பட்டன. ஆங்காங்கே குறைபாடுகள் இருந்தாலும், ஒட்டுமொத்தத்தில் மக்களின் வாழ்வோடு இணைந்த வெற்றிகரமான சேவை திட்டமாக மாறியிருக்கிறது 108 ஆம்புலன்ஸ்.
இந்த ஆம்புலன்ஸ்களில் செவிலியர், மருத்துவ உதவியாளர் பணியில் இருப்பதால் முறையான சிகிச்சை உடனடியாக கிடைக்கவும் வாய்ப்பு இருந்து வருகிறது. மேலும், தொலை தொடர்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால், மருத்துவர்களின் வழிகாட்டுதல்களோடு அவசர மற்றும் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்படுவதால், உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. ஒட்டுமொத்தத்தில் மக்களின் உயிர் காக்கும் தெய்வங்களாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மாறியுள்ளன.
ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவோம்...!!


Click it and Unblock the Notifications








