சத்தமே இல்லாமல் பொருத்தப்பட்ட ஹை-டெக் கேமராக்கள்! இது என்ன செய்யும்னு தெரிஞ்சா சின்ன தப்பு கூட பண்ண மாட்டீங்க
சத்தமே இல்லாமல் சாலையில் ஹை-டெக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொல்கத்தா போக்குவரத்து காவல் துறையினர் தற்போது டிஸ்ப்ளே போர்டு உடன் 11 ஸ்பீடு கேமராக்களை பொருத்தியுள்ளனர். கொல்கத்தா நகரின் முக்கியமான சாலைகளில் இந்த ஸ்பீடு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் வரும் எச்சரிக்கையை பொறுத்து வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து கொண்டால், அபராத நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும்.

இல்லாவிட்டால் அவரது வாகனத்தின் பதிவு எண் அடிப்படையில், எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும். இதில், எந்த இடம்? வாகன ஓட்டி எவ்வளவு வேகத்தில் சென்றார்? போன்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், அபராதம் பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் பயணிப்பது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''வாகன ஓட்டிகள் வேக வரம்பை கடந்தால், தற்போது உள்ள டிஸ்ப்ளே போர்டுகள் வெள்ளை எச்சரிக்கை விளக்கை மட்டுமே எரிய செய்யும். ஆனால் புதிய டிஸ்ப்ளே போர்டுகள், 'அபாயம்' மற்றும் 'மெதுவாக செல்லவும்' போன்ற குறியீடுகளை வாகன ஓட்டிகளுக்கு காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணத்திற்கு ஒரு பகுதியில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வைத்து கொள்வோம். வாகன ஓட்டி இதற்கு ஏற்ப மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்தால், 'நன்றி' என காட்டும். அதே நேரத்தில் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்தால், 'வேகத்தை குறைக்கவும்' என காட்டும்.

மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தை கடந்து விட்டால், 'அபாயம்' என காட்டும். எந்த சாலையில் பயணம் செய்கின்றனரோ, அங்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வேக வரம்பு தெரிவதில்லை என வாகன ஓட்டிகள் நிறைய பேர் புகார்களை தெரிவித்துள்ளனர். ஆனால் டிஸ்ப்ளே போர்டு உடன் கூடிய இந்த கேமராக்கள் வாகன ஓட்டிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.

அதாவது அவை வேகத்தை கணக்கிட்டு எச்சரிக்கை செய்வதால், வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து கொள்ள முடியும்'' என்றனர். வெவ்வேறு லேன்களில் பயணிக்கும் பல்வேறு வாகனங்களின் வேகத்தை கண்டறியும் திறன் இந்த கேமராக்களுக்கு உள்ளது. மேலும் இரவு நேரம் உள்பட அனைத்து விதமான வானிலை நிலவும் சமயங்களிலும் இந்த கேமராக்கள் திறம்பட செயல்படும்.

தற்போது இந்தியா முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை குறைப்பதற்கு இப்படி பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை காவல் துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் மூலம் காவல் துறை அதிகாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையேயான வாக்குவாதம் போன்ற பிரச்னைகளும் தவிர்க்கப்படுகிறது.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் சார்பில் இப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அரசாங்கம் என்னதான் முயற்சி செய்தாலும், வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே விபத்துக்களை குறைக்க முடியும். எனவே போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முழுமையாக பின்பற்றுங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








