ரோட்ல என்ன இது வித்தியாசமா? கண்ணுல பாத்ததும் ஊரே தெகச்சு போயிருச்சு! போலீஸ்காரங்க ஒருத்தர் கூடவா பாக்கல?
சாலை மார்க்கமாக கார்களில் தொலை தூர பயணங்களை மேற்கொள்வது அலாதியானது. அதுவும் உடன் நண்பர்கள் வந்தால், அந்த பயணத்தின் இனிமை அதிகரிக்கும். ஆனால் தொலை தூர பயணங்களை மேற்கொள்பவர்கள், அந்த பயணம் சொகுசாக இருக்க வேண்டும் என்பதற்காக, நல்ல கண்டிஷனில் உள்ள கார்களைதான், பயணங்களுக்கு தேர்வு செய்வார்கள். அதுதான் சரியானதும் கூட. இல்லாவிட்டால் அந்த பயணம் இனிமையானதாக இருக்காது. ஏனெனில் உடல் சோர்வு மற்றும் நடுவழியில் பழுது போன்ற பிரச்னைகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். எனவே நல்ல கண்டிஷனில் உள்ள சௌகரியமான கார்கள்தான், தொலை தூர பயணங்களுக்கு ஏற்றவை.
ஆனால் இங்கே ஒரு குழு, சாதாரண மாருதி 800 (Maruti 800) காரில், தொலை தூர பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அதுவும் அந்த கார் நல்ல கண்டிஷனில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மிகவும் அவசியமான டோர்கள், விண்ட்ஷீல்டு, பானெட் மற்றும் பம்பர்கள் போன்றவை கூட, அந்த காரில் இல்லை.

அவ்வளவு ஏன்? இருக்கை கூட இல்லை. அதையெல்லாம் அகற்றியுள்ளனர். இது தொடர்பான வீடியோ (Video) எக்ஸ்ப்ரீமெண்ட் கிங் (Experiment King) என்ற யூடியூப் சேனலில் (YouTube Channel) பதிவிடப்பட்டுள்ளது. இந்த சேனலில், தண்ணீர் நிரப்ப கூடிய டேங்கருக்கு உள்ளே அமர்ந்து, லாரியில் பயணம் செய்வது போன்ற சவாலான காரியங்களை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில்தான் தற்போது மிகவும் மோசமான கண்டிஷனில் உள்ள மாருதி 800 காரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொலை தூர பயணத்தின் வீடியோவை பதிவிட்டுள்ளனர். கடந்த காலங்களில் இவர்கள் நிறைய கார்களில் தொலை தூர பயணங்களை மேற்கொண்டுள்ளனர். தற்போது ஒரு சவாலுக்காக இந்த ஆபத்தான பயணத்தை செய்து முடித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கப்பட்ட இந்த பயணம் பஞ்சாப் மாநிலத்திற்கு சென்று விட்டு, மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே முடிவடைந்துள்ளது. வெறும் 24 மணி நேரத்தில் 1,117 கிலோ மீட்டர் தொலைவை அவர்கள் கடந்துள்ளனர். இந்த பயணத்தின்போது, அவர்கள் பயணித்த மாருதி 800 காரை பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.
ஏனெனில் அந்த காரில் டோர் போன்ற விஷயங்கள் மட்டுமல்லாது, நம்பர் பிளேட் கூட இல்லை. ஆனாலும் கூட காவல் துறை அதிகாரிகள் யாரும் இந்த மாருதி 800 காரை நிறுத்தவில்லை என்பது ஆச்சரியத்தின் உச்சம்! ஆனால் இது போன்ற பயணங்கள் மிகவும் ஆபத்தானவை என நாங்கள் கருதுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இது போன்ற பயணங்கள் ஆபத்தானவை என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஏனெனில் டோர்கள், விண்டுஷீல்டு போன்றவை எல்லாம் இல்லாமல் பயணம் செய்வது நல்லதல்ல. அதுவும் வட இந்திய மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி கொண்டுள்ளது.
இது போன்ற சமயங்களில் பனி காரணமாக, சாலையில் வாகனங்களை தெளிவாக காண கூட முடியாது. இதன் காரணமாக ஏகப்பட்ட சாலை விபத்துக்கள் நடைபெற்று வரும் ஒரு சமயத்தில் மிகவும் மோசமான கண்டிஷனில் உள்ள ஒரு காரில் தொலை தூர பயணத்தை மேற்கொள்வது நல்லது கிடையாது என்பதுதான் எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








