சினிமா ஹீரோக்களை விஞ்சிட்டாரு! ரயில் விபத்தை தடுக்க ஏழை சிறுவன் செய்த காரியம்! நாடே மனசார பாராட்டுது!
இந்தியாவில் என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டாலும் கூட, ரயில் விபத்துக்களை (Train Accident) இன்னும் முழுமையாக குறைக்க முடியவில்லை. அவ்வப்போது ரயில் விபத்துக்கள் நடைபெற்று கொண்டுதான் உள்ளன. இதில் ஒரு சில ரயில் விபத்துக்களில் மனித உயிர்கள் கொத்து கொத்தாக மடிவது பெரும் சோகம்.
ஒடிசா (Odisha) மாநிலத்தில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கோர ரயில் விபத்தில் சுமார் 300 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் ஆயிரக்கணக்கான பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த ரயில் விபத்து சம்பவம், இந்தியா மட்டுமல்லாது, உலகையே கவலையில் ஆழ்த்தியது.

இந்த வரிசையில் மேற்கு வங்க (West Bengal) மாநிலத்தில் மற்றொரு ரயில் விபத்து நடைபெறவிருந்தது. ஆனால் 12 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் சாமர்த்தியமாக செயல்பட்ட காரணத்தால், அந்த ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
கடந்த செப்டம்பர் 21ம் தேதி, கஞ்சன்ஜூங்கா எக்ஸ்பிரஸ் (Kanchanjunga Express) ரயில், அஸ்ஸாம் மாநிலம் சில்ச்சார் நோக்கி சென்று கொண்டிருந்தது. வழியில் மேற்கு வங்க மாநிலம் மால்டாவிற்கு அருகே வந்தபோது, ரயில் தண்டவாளம் சேதமடைந்திருந்தது. ரயிலின் லோகோ பைலட்டிற்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அந்த பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தண்டவாளம் சேதமடைந்திருந்ததை பார்த்து விட்டான். அந்த நேரத்தில் ரயில் நெருங்கி வந்து கொண்டிருந்தது. உடனடியாக சமயோசிதமாக செயல்பட்ட அந்த சிறுவன், தான் அணிந்திருந்த சிகப்பு நிற டீ-ஷர்ட்டை கழற்றி, ரயிலை நிறுத்தும்படி சிக்னல் கொடுத்தான்.
இதை கவனித்த ரயிலின் லோகோ பைலட் (Loco Pilot) எமர்ஜென்ஸி பிரேக்கை பிடித்து சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தினார். இதனால் ரயிலின் உள்ளே இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர். அவர்களை காப்பாற்றிய பெருமை எல்லாம், 12 வயது மட்டுமே நிரம்பிய அந்த சிறுவனையே சேரும்.
அவனது பெயர் முர்ஷிலின் ஷேக் (Mursalin Seikh) என்பதாகும். இவர் ரயில் விபத்து நடைபெறவிருந்த பகுதிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். இவரது குடும்ப பின்னணி எளிமையானது. சாதாரண புலம்பெயர்ந்த தொழிலாளியின் மகன்தான் முர்ஷிலின் ஷேக். ஆனால் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரை காப்பாற்றியதன் மூலம் அவர் தற்போது ஹீரோவாக மாறியுள்ளார்.
ரயில்வே மற்றும் மேற்கு வங்க மாநில அரசு ஆகியவை சார்பில், முர்ஷிலின் ஷேக் கௌரவிக்கப்பட்டுள்ளார். ரயில்வே தரப்பில் அந்த சிறுவனுக்கு பாராட்டு சான்றிதழும், பண பரிசும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மால்டா ஜில்லா பரிஷத் உறுப்பினரான பலிகுல் இஸ்லாம், முர்ஷிலின் ஷேக்கின் கல்வி செலவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறிய வயதாக இருந்தாலும், முர்ஷிலின் ஷேக் தற்போது அனைவருக்கும் முன் மாதிரியாக மாறியுள்ளார். தைரியமாக இருப்பதற்கும், சேவை செய்வதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதையும் அவர் நிரூபித்துள்ளார். இதற்காக டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளமும், முர்ஷிலின் ஷேக்கை மனதார பாராட்டுகிறது.
ரயில்வே தண்டவாளங்கள் பல்வேறு வகைகளில் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மழை போன்ற இயற்கை காரணங்களால் தண்டவாளங்கள் சேதம் அடையலாம். தீவிரவாதிகளின் சதி செயல்களால் கூட, தண்டவாளங்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது ரயிலை தடம் புரள செய்யும் என்பதால், இந்திய ரயில்வே தண்டவாளங்களை தொடர்ச்சியாக கண்காணிக்கிறது.
ஆனால் தீவிர கண்காணிப்பையும் மீறி சில சமயங்களில் தண்டவாளம் சேதம் அடைந்திருப்பது, ரயில்வே துறைக்கு தெரியாமல் போய் விடுகிறது. எனவே தண்டவாளம் சேதம் அடைந்திருப்பதை நீங்கள் பார்த்தால், உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பது அவசியம். ஒருவேளை ரயில் நெருங்கி விட்டால், சிறுவன் முர்ஷிலின் ஷேக் போல், சூழ்நிலைக்கு ஏற்ப சமயோசிதமாக செயல்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications