தொண்டை தண்ணீ வத்த கத்தியும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆளில்லை...இப்ப எவ்வளவு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது?
இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் எலெக்டரிக் வாகன விற்பனைக்கு எவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. இதுவரை எவ்வளவு வாகனங்கள் விற்பனையாகியுள்ளது உள்ளிட்ட தகவல்களைக் காணலாம்.

இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை மெல்ல மெல்லச் சூடுபிடித்து வருகிறது. இதற்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் முக்கியமான காரணம். தற்போது இந்தியாவில் பெட்ரோல்/டீசல் வாகனங்கள் அதிகமாக இருக்கின்றன.

ஆனால் இந்தியா முழுவதும் பயன்படுத்தத் தேவையான பெட்ரோல்/டீசல்களை தயாரிப்பதற்குத் தேவையான கச்சா எண்ணெய் உற்பத்தி இந்தியாவில் இல்லை. இதனால் இந்தியா அரபு நாடுகள் மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைச் செய்து அதை இந்தியாவில் சுத்திகரிப்பு செய்து பெட்ரோல் டீசல்களை தயாரிக்கிறது. இந்தியாவில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பெட்ரோல்/டீசல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

இந்நிலையில் மத்திய கனரக தொழிற்சாலை துறை இணையமைச்சர் கிருஷ்ணன் பால் குஜார் சமீபத்தில் பாராளுமன்றத்தில் தன் துறை குறித்து எம்பி ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்தார். இந்த பதில் குறித்த விரிவான தகவல்களைத் தான் இங்குக் காணப்போகிறோம்.

மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டில் இந்தியாவிற்கான பெட்ரோல் /டீசல் தேவையை அடுத்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைக்க வேண்டும் என முடிவு செய்தது. அதன் அடிப்படையில் இந்திய அரசு Faster Adoption and Manufacturing of Electric Vehicles (FAME)என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அந்த திட்டத்தின்படி இந்தியாவில் மக்கள் பயன்பாட்டிற்கு எலெக்டரிக் மற்றும் ஹைபிரட் வாகனங்களை அதிகம் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டது. இதனால் பெட்ரோல்/டீசல்களின் தேவை குறையும் என எதிர்பார்த்தது.

இந்த FAME திட்டத்தின் முதல் கட்ட திட்டம் கடந்த 2015-2019ம் ஆண்டு வரை நடந்தது. அதன் பின் தற்போது FAME திட்டத்தின் இரண்டாம் கட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஏப்1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகள் அதாவது 2024 மார்ச் மாதம் வரை இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும்.

இந்த இரண்டாம் கட்ட திட்டத்திற்காக மத்திய அரசு ரூ10,000 கோடி பணத்தை ஒதுக்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் கடந்த 2021 மே 12ம் தேதி Production Linked Incentive என்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. அதாவது இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிப்பவர்களுக்கு மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.

இதனால் எலெக்டரிக் பேட்டரிகளின் விலை கணிசமாகக் குறையும். இதனால் எலெட்ரிக் வாகனங்களின் விலையும் பெரும் அளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. எலெக்ட்ரிக் வாகனங்களைப் பெருத்தவரை அதில் பயன்படுத்தப்படும் பேட்டரியின் விலை தான் அதிகம். இந்த திட்டத்திற்காக ரூ25,938 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது போக மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் வாங்க வைக்க வேண்டும் என்பதற்காக அதன் விலையைக் குறைக்கும் நோக்கில் இந்தியாவில் எலெக்டரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், சார்ஜர் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷனிற்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், குறைக்கப்பட்டுள்ளது.

இது போக மத்திய போக்குவரத்துத் துறை இந்தியாவில் பேட்டரி வாகனங்களுக்காகப் பச்சை நிற லைசென்ஸ் பிளேட்டை அறிவித்து அதற்கு இந்தியா முழுவதும் பெர்மிட்டும் வழங்கியுள்ளது. இதுவும் இந்தியாவில் எலெக்டரிக் வாகன விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு எடுத்த முடிவு தான் எனத் தனது பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த பதிலில் முக்கிய தகவலாக இந்தியாவில் எத்தனை எலெக்டரிக் வாகனங்கள் மற்றும் எத்தனை எலெக்ட்ரிக் அல்லாத வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது என்ற தகவல் ஒன்றையும் அறிவித்துள்ளார். அதன் படி தற்போது இந்தியாவில் 13.34 லட்சம் எலெக்டரிக் வாகனங்களும், 27.81 கோடி எலெக்ட்ரிக் அல்லாத வாகனங்களும் பயன்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த 13.34 லட்சம் என்பது முழுமையாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் வாகனம் தான். ஹைபிரிட் வாகனங்கள் இந்த கணக்கில் வராது.


Click it and Unblock the Notifications








