14 பிரபல வாகன டீலர்களின் வர்த்தக சான்று ரத்து.. போக்குவரத்துத்துறையின் அதிரடிக்கான காரணம் தெரியுமா?
நாட்டில் இயங்கும் 14 பிரபல வாகன டீலர்களின் வர்த்தக சான்றை ரத்து செய்திருப்பதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் மிக முக்கியமான பிரச்னைகளில் தலையாய ஒன்றாக மாசுபடுதல் உருவெடுத்துள்ளது. இதற்கு இந்தியாவில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை மட்டுமே முக்கிய காரணம் என்று கூறி விட முடியாது.
தேவையற்றவை எனக் கூறிக் கொண்டு எரிக்கப்படும் விவசாய கழிவுகள் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஏசி உள்ளிட்டவற்றாலும் காற்று மாசடைகின்றது.

அதேசமயம், இவற்றினால் ஏற்படும் மாசினைவிட பல மடங்கு அதிக மாசினை உருவாக்குபவையாக பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்கள் இருக்கின்றன. அதிலும், பழைய வாகனங்கள் அதிகப்படியான மாசினை உருவாக்குவது கவலைக் குறியதாக இருக்கின்றது.

இதன்காரணமாகவே, அண்மைக் காலங்களாக எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு ஓர் நிரந்தர முடிவு கட்டுகின்ற வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், நாட்டில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான திட்டங்களும் வரையறுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசு குறித்த தகவலை பியூசி பரிசோதனைமூலம் அளவெடுத்து, அவற்றின் ஆயிட்காலத்தை அரசு நிர்ணயித்து வருகின்றது.

இந்நிலையில், மாசுகுறித்து அளவிடும் மையத்தை நிறுவாத காரணத்திற்காக 14 பிரபல வாகன டீலர்களின் வர்த்தக சான்றிதழை போக்குவரத்துத்துறை ரத்து செய்துள்ளது.
போக்குவரத்துத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு அந்த டீலர்களால் வாகனத்தை விற்கவோ அல்லது ஏற்றுமதி செய்யாவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, "டீலர்ஷிப் மையம் அமைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று பியுசி பரிசோதனை மையம். இது செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே டீலர்ஷிப்பிற்கான சான்று வழங்கப்படும். இல்லையெனில், அவர்களால் வாகனங்களை விற்க முடியாது" என்றார்.

மேலும் பேசிய அவர், "வாகனங்களை விற்பனைச் செய்யும் ஒவ்வொரு டீலரும், அந்த வாகனம் எந்த அளவிற்கு மாசினை ஏற்படுத்தும் என்பதனை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். ஆகையால், இதுகுறித்த தகவல் அந்தந்த டீலர்களுக்கு ஏற்கனவே அறிவிப்பாக வைக்கப்பட்டுள்ளது. எனவே, இதை தவறிய நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அவர்களின் வர்த்தக சான்று தற்காலிக ரத்து செய்யப்பட்டு வருகின்றது" என கூறினார்.

தொடர்ந்து, "குறிப்பிட்ட காலத்திற்குள் பியூசி பரிசோதனை மையம் வேலை செய்யும் நிலையில்தான் இருக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீண்டும் செயல்பட அனுமதிப்பதற்கான மறு பரிசீலனை செய்யப்படும்" என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








