வெயிலுக்கு போர்த்தப்பட்டிருந்த கார் கவரால் தீயில் கருகிய சொகுசுக் கார்கள்!
கார்கள் மீது வெயில்படாமலிருக்க போர்த்தப்பட்டிருந்த தார்பாலின் அதிக உஷ்ணம் காரணமாக தீப்பிடித்ததில் 15 கார்கள் கருகின. அது குறித்த தகவல்களை காணலாம்.
இந்த வருட கோடை காலம் முழுதாக துவங்கும் முன்பே வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு என பாரபட்சமில்லாமல் வெயில் தன் வேலையை காட்டி வருகிறது. இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த 15 கார்கள் தீயில் கருகியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை நகரில் உள்ள வித்யவிஹார் எனும் 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்தில், நிறுத்தப்பட்டிருந்த 15 ஆடம்பரக் கார்கள் கடும் வெயில் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கருகியுள்ளன.

அதிகாலை நடந்த இந்த விபத்துக்கு காரணம், கார் கவர் தான் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வெயில் காரணமாக காரின் பெயிண்டிங் பாதிப்படையாமல் தடுக்க கார்களை மறைத்தவாறு கார் பார்க்கிங் தார்பாலின் கொண்டு போர்த்தப்பட்டுள்ளது.

அதிக வெயிலின் காரணமாக தார்பாலின் கவர், வெயிலை உள்ளே கிரகித்து அதிக வெப்பத்தை உருவாக்கி அதன் காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த வீரர்களால் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி பிஎம்டபிள்யூ, லேண்ட்ரோவர் டிஸ்கவரி, ஹோண்டா அகார்டு, டொயோட்டா இன்னோவா, வேகன் ஆர் உள்ளிட்ட விலை உயர்ந்த கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. இதில் எந்த காரில் முதலில் தீ ஏற்பட்டது என்பதனை கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்த விபத்து தொடர்பாக தீயை அணைத்த தீயணைப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி பட்டீல் கூறுகையில், காரில் உள்ள லெதர் சீட்கள், எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் எளிதில் தீப்பிடிக்கக் கூடியவை, வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் உஷ்ணம் வெளியேராமல் தடுக்கப்பட்டதால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீ தடுப்பு / அணைப்பு சாதனங்கள் பொருத்தப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தீயணைப்பு துறை சார்பில் குடியிருப்பு நிர்வாகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தார்பாலின் கொண்டு கார்கள் போர்த்தப்பட்டதாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே வெயில் காலத்தில் கார் கவர்கள் உபயோகிப்பதில் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications








