ஓட்ட, ஒடஞ்ச அரசு பேருந்துகளுக்கு குட்-பை சொல்லும் நேரம் வந்தாச்சு!! எல்லாம் மத்திய அரசின் செயல்...
வாகனங்களின் தரமும், அவை வெளிப்படுத்தும் காற்று மாசுவின் அளவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது ஒழுங்குப்படுத்துகின்றன. இதனாலேயே தரம் மற்றும் என்ஜின் வெளிப்படுத்தும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு ஆனது பழைய வாகனங்கள் மற்றும் தற்போதைய மாடர்ன் வாகனங்களுக்கு இடையே பெரிய அளவில் வித்தியாசப்படுகிறது.
இருப்பினும் பழைய வாகனங்களை சிலர் தொடர்ந்து பயன்படுத்தி கொண்டுதான் இருக்கின்றனர். அதனை முற்றிலும் தடுக்கும் விதமாக கடந்த 2021ஆம் ஆண்டில் வாகன அழிப்பு கொள்கையில் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டுவந்தது. 2021-22 யூனியன் பட்ஜெட்டின் போது கொண்டுவரப்பட்ட இந்த கட்டுப்பாடுகளின்படி, மக்கள் சொந்தமாக பயன்படுத்தும் வாகனங்கள் அவற்றின் வயது 20-ஐ எட்டிய பின் தர சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். சோதனையில் எதிர்மறையான முடிவுகளை பெறும் வாகனங்கள் ஸ்க்ராப், அதாவது அழிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஸ்க்ராப் செய்யப்பட வேண்டிய வாகனங்களை முறையாக பதிவு செய்து அழித்தால், சில சலுகைகளை அரசாங்கத்திடம் இருந்து பெற முடியும். மக்களின் சொந்த பயன்பாட்டு வாகனங்களுக்கு தான் வயது வரம்பு 20 ஆகும். அதுவே கமர்ஷியல் வாகனங்களுக்கு 15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கமர்ஷியல் வாகனங்களில் மத்திய & மாநில அரசாங்கங்களின் அரசாங்க பயன்பாட்டு வாகனங்களும், அரசு பேருந்துகளும் கூட அடங்குகின்றன.
இந்த நிலையில், புதிய ஸ்க்ராப் கொள்கையின்படி, வருகிற 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 15 வருடங்களுக்கு பழமையான அனைத்து மத்திய & மாநில அரசு வாகனங்களும் அவற்றின் ஆர்டிஓ பதிவு ரத்து செய்யப்பட்டு ஸ்க்ராப் செய்யப்பட உள்ளதாக சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளில் நாட்டின் பாதுகாப்பு பணிகளுக்காக பிரத்யேகமாக பாதுகாப்பு கவசங்களுடன் உருவாக்கப்பட்ட வாகனங்கள் உட்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், மத்திய அரசின் புதிய ஸ்க்ராப் கொள்கையின்படி பழைய வாகனங்களை அழிக்கும் வாடிக்கையாளர்கள் குறிப்பிடத்தக்க சலுகையினை தங்களது புதிய வாகன பதிவின் போது பெறலாம். அந்த சலுகை ஆனது, புதிய வாகனத்திற்கான சாலை வரியில் 25% வரையில் தள்ளுபடியை பெறலாம் என்பதாகும். மக்கள் தங்களது பழைய வாகனங்களை ஒரு மூலையில் ஓரங்கட்டிவிடாமல் முறையாக அவற்றை அழிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய புதிய ஸ்க்ராப் கொள்கையினை 2021-22 யூனியன் பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது.
அந்த கொள்கை கட்டுப்பாடுகள் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பின்னர் வருகிற 2023 ஏப்ரல் மாதம் முதல் முழுமையாக அமலுக்கு வர உள்ளன. இதற்காக நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் 150கிமீ தொலைவிற்கு உள்ளாக குறைந்தப்பட்சம் ஒரு ஆட்டோமொபைல் ஸ்க்ராப்பிங் மையத்தை ஆவது உருவாக்கும் திட்டத்தில் உள்ளதாக கடந்த 2022ஆம் ஆண்டில் மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருந்தார்.

இதன் மூலமாக நாட்டில் தேவையற்ற வாகன குப்பை கிடங்குகள் உருவாகுவது தடுக்கப்படும் என்பது மட்டுமின்றி, மொத்த தெற்காசியாவில் இந்தியா ஓர் வாகன ஸ்க்ராப்பிங் மையமாக உருவெடுக்கும் என்றும் மத்திய அரசு நம்பிக்கையாக உள்ளது. 2021ஆம் ஆண்டில் இந்த தேசிய வாகன அழிப்பு கொள்கையினை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தேசிய வாகன கொள்கையின்படி, 15 வருடங்களுக்கும் மேல் பழமையான அரசு பேருந்துகளும் அழிக்கப்பட உள்ளது உண்மையில் சிறந்த விஷயமாகும்.
ஏனெனில் பழுதடைந்த & பழைய அரசு பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்வது நாடு முழுவதும் பரவலாக கிராம புறங்களில் பிரச்சனையாக உள்ளது. இத்தகைய பிரச்சனைகள் சில சமயங்களில் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. அத்தகைய சம்பவங்களை இந்த புதிய தேசிய வாகன அழிப்பு கொள்கை தவிர்க்கும் என்பது உறுதி. ஆனால் அதேநேரம் இந்த புதிய கொள்கையினால் இனி ஒவ்வொரு வருடமும் அரசு வாகனங்களுக்கான நிதி அதிகரிக்கும் என்பதும் உண்மையே.


Click it and Unblock the Notifications








