சுதந்திர தினம் 2024 ஸ்பெஷல்.. இந்தியன் ரயில்வேஸை பற்றிய இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா?
ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இருக்கின்றது. இந்த ரயிலை வருகின்ற ஆகஸ்டு 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இந்தியா திட்டமிட்டு இருக்கின்றது. இப்போது பயன்பாட்டில் இருக்கும் வந்தே பாரத் ரயிலைக் காட்டிலும் பலமடங்கு அதிக சிறப்புகளைத் தாங்கிய ரயிலாக வந்தே பாரத் ஸ்லீப்பர் இருக்கும் என ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தே பாரத் ஸ்லீப்பரின் உட்பக்கத்தை வெளிக்காட்டக் கூடிய படங்களை இந்தியன் ரயில்வேஸ் வெளியிட்டது.
மிகுந்த பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் தயார் செய்யப்பட்டிருப்பதை இந்த படங்கள் உறுதி செய்தன. இந்த அளவிற்கு முன்னேறி இருக்கும் இந்தியன் ரயில்வேஸ் கடந்து வந்த பாதை பற்றிய சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

குறிப்பாக, சுதந்திரத்திற்கு முன் மற்றும் பிந்தைய இந்தியன் ரயில்வேஸின் வளர்ச்சியைப் பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். ஆகஸ்டு 15, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு சுவாரஷ்யமான தகவல்களை நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகின்றோம். இதன் அடிப்படையிலேயே இந்தியன் ரயில்வேஸ் பற்றிய தகவலையும் இங்கே பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவிற்கான முதல் ரயில் பாதை 1832 ஆம் ஆண்டில் மெட்ராஸில் முன்மொழியப்பட்டது. ஆனால், இந்தியன் ரயில்வேஸ் அதன் முதல் பயணிகள் ரயில் சேவையை 1853 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. பம்பாய் - தானே ஆகிய இரு பகுதிகளுக்கு இடையிலேயே முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இதன் வாயிலாகவே இந்தியன் ரயில்வேஸ்-ம் அதன் பயணத்தை நாட்டில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, அடுத்த இரண்டு தசாப்தங்களுக்குள் மிகப் பெரிய வளர்ச்சியாக, டெல்லி, பம்பாய், கல்கத்தா மற்றும் மெட்ராஸ் (சென்னை) போன்ற முக்கிய நகரங்களில் தன்னுடைய விரிவான ரயில் போக்குவரத்து சேவையை அது தொடங்கியது.
இந்த அனைத்து ரயில் பாதைகளும் ஒன்றோடொன்றாகவும் அது இணைத்தது. நீராவி எஞ்சின் கொண்ட ரயில்களே அப்போது பயன்படுத்தப்பட்டன. நூற்றாண்டின் இறுதியில், மலை ரயில் பாதைகள் உட்பட 54,000 கிலோமீட்டர் பாதைகளை இந்தியன் ரயில்வேஸ் சேர்த்தது. இந்தியான் ரயில்வேஸ் கண்ட மாபெரும் வளர்ச்சி இதுவாகும்.
இதையடுத்தே, இந்த துறையை நிர்வகிக்க 1901 ஆம் ஆண்டில் ரயில்வே வாரியம் நிறுவப்பட்டது. இது ரயில்வேயின் வரலாற்றில் ஓர் சிறப்புமிக்க நிகழ்வாகும். இந்த துறை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது தொடங்கப்பட்டு இருந்தாலும், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் ரயில்வே துறை மிக முக்கியமான வளர்ச்சிகளை எல்லாம் கண்டிருக்கின்றது.
மிக முக்கியமாக, 1947 ஆம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் 40 சதவீத ரயில்வே நெட்வொர்க்கை இந்தியா இழக்க நேரிட்ட போதும் அது துவண்டு போகவில்லை. ஏனெனில், இதற்கு பின்னரே 1950ஆம் ஆண்டில் நீராவி எஞ்சின்களுக்கு பதிலாக மின்சார மயமாக்கலை நோக்கி இந்தியன் ரயில்வேஸ் நகர தொடங்கியது.
தொடர்ந்து, 1980 களில் நீராவி எஞ்சின்கள் படிப்படியாக அகற்றப்பட்டன. இப்படியே தற்போது ஆன்லைனில் ரயில் பயணங்களுக்கான முன்பதிவை செய்யும் அளவிற்கு இந்தியன் ரயில்வேஸ் வளர்ச்சியடைந்திருக்கின்றது. இதன் வளர்ச்சி பயணம் இதோடு முடியவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்னும் அது தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது.
முதன் முதலில் இயக்கப்பட்ட பயணிகள் ரயில் அப்போதைய பம்பாயின் போரி பந்தர் தொடங்கி தானே வரை இயக்கப்பட்டது. இது 34 கிமீ இடைவெளிக் கொண்ட ரயில் பாதை ஆகும். 14 பெட்டிகள் மற்றும் 3 நீராவி எஞ்சின் கொண்ட ரயிலே இந்த பாதையில் இயக்கப்பட்டது.
இந்த ரயிலில் சுமார் 400 பேர் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், தனியார் நிறுவனங்களே இந்த ரயில் சேவைகளை அப்போது இயக்கின. சுமார் எட்டு ரயில்வே கம்பெனிகளே ரயில் சேவையை இந்தியாவில் நடத்தின. கிழக்கிந்திய ரயில்வே, கிரேட் இந்தியா தீபகற்ப நிறுவனம், மெட்ராஸ் ரயில்வே, பாம்பே பரோடா மற்றும் மத்திய இந்திய ரயில்வே உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்த நிலையிலேயே முதல் எலெக்ட்ரிக் ரயில் தன்னுடைய பயணத்தை 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி அதன் பயணத்தைத் தொடங்கியது. பாம்பாய்-குர்லா இடையேதான் முதல் மின்சார ரயில் இயக்கப்பட்டது. மேலும், 1985 ஆம் ஆண்டில் முழுமையாக நீராவி எஞ்சின்கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் மற்றும் டீசலில் இயங்கும் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த மாதிரியான வளர்ச்சிக்கு முன்னதாகவே, அதாவது, 1929 ஆம் ஆண்டிலேயே இந்தியன் ரயில்வேஸ், அதன் நெட்வொர்க்கை 66 ஆயிரம் கிமீட்டராக அதிகரித்துவிட்டது. மேலும், ஆண்டுக்கு 620 மில்லியன் பயணிகள் மற்றும் 90 மில்லியன் டன் சரக்குகளை அது கையாண்டது. இன்று கார்கள் உட்பட வாகனங்கள் பல ரயில்கள் வாயிலாகவே அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
வாகன தயாரிப்பு ஆலையிலேயே ரயில்களுக்கான வழித் தடத்தை உருவாக்கி மாருதி சுஸுகி அதன் தயாரிப்புகளை இந்திய முழுவதுக்கும் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஆரம்பத்தில் ஆறு மண்டலங்களாக இருந்த இந்தியன் ரயில்வேஸ் தற்போது 18 மண்டலங்களாக பிரிந்து மிகப் பெரிய வலையமைப்பாக உருவெடுத்திருக்கின்றது.
இன்றைய தேதி நிலவரப்படி, வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்தியன் ரயில்வேஸ் பல்வேறு தொழில்நுட்பங்களை உள்வாங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக பயணிகளின் ரயில் பயண அனுபவம் பலமடங்கு மேம்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, வந்தே பாரத் ரயிலின் வருகை ரயில் பயணிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த ரயிலையே தற்போது அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றது இந்தியன் ரயில்வேஸ். அதாவது, வந்தே பாரத் ரயிலின் ஸ்லீப்பர் வெர்ஷனை விரைவில் அது பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்திலேயே இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
மிகவும் ஆடம்பரமான பயண அனுபவத்தை வழங்கும் வகையிலேயே இந்த ரயில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. அதிக சொகுசான மெத்தைகள், சுலபமாக ஏறி-இறங்குவதற்கான படி மற்றும் குளிர்சாதன வசதி உள்ளிட்ட ஏராளமான சிறப்புகளை இந்த ரயில் தாங்கியிருக்கின்றது. எனவே இதன் வருகை மீது இந்திய ரயில் பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியன் ரயில்வேஸ் தன்னுடைய வருமானத்தை இரட்டிப்பாக்கும் விதமாக சில தனித்துவமான முன்முயற்சிகளை மேற்கொண்டு வருக்கின்றது. அந்தவகையில, ரயிலை வாடகைக்கு விடுதல், லாப நோக்கத்துடன் குறிப்பிட்ட ரயிலை தனியாருக்கு வழங்குதல் போன்றவற்றை அது மேற்கொண்டு வருகின்றது. இதுதவிர, பயணிகளுக்கு சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் விதமான பணிகளையும் அது மேற்கொண்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








