வந்தது யார் கார்னு தெரியாம வேலையை காட்டிய பெட்ரோல் பங்க்! உடனே இழுத்து மூடி 'சீல்' வைத்த அதிகாரிகள்!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price) மிகவும் அதிகமாக இருப்பதால், வாகன உரிமையாளர்கள் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இது போதாது என்று, பெட்ரோல் பங்க்குகளில் நிறைய மோசடி சம்பவங்கள் (Petrol Bunk Frauds) நடைபெற்று வருவதாகவும் வாகன உரிமையாளர்கள் நீண்ட காலமாகவே புகார் தெரிவித்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக அளவு மற்றும் தரப்பில் மோசடி நடைபெற்று வருகிறது என்பது வாடிக்கையாளர்கள் பலரின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த சூழலில், தண்ணீர் கலக்கப்பட்ட டீசலை வாகனங்களுக்கு நிரப்பியதாக எழுந்துள்ள புகாரில் பெட்ரோல் பங்க் ஒன்று தற்போது சிக்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

பொதுவாக பிரதமர், முதல் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் போன்ற உயர் பொறுப்புகளை வகிப்பவர்கள் பயணம் செய்யும் வாகனங்களுக்கு முன்பும், பின்பும் ஏராளமான வாகனங்கள் பயணம் செய்யும். இதை கான்வாய் (Convoy) என்பார்கள். உயர் பொறுப்புகளை வகிப்பவர்களின் கான்வாய் பயணம் செய்வதை பார்ப்பதே பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
அப்படி முதல் அமைச்சரின் கான்வாயில் இணைப்பதற்காக சென்று கொண்டிருந்த 19 கார்கள், தண்ணீர் கலப்பட்ட டீசல் நிரப்பியது தொடர்பான புகாரால், நடுவழியிலேயே நின்றுள்ளன. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் மத்திய பிரதேச (Madhya Pradesh) மாநிலத்தில், நேற்று இரவு (ஜூன் 26) நடைபெற்றுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவை (BJP) சேர்ந்த மோகன் யாதவ் (Mohan Yadav) முதல் அமைச்சராக (Chief Minister) உள்ளார். இவரது கான்வாய் பயன்பாட்டிற்காக 19 கார்கள் நேற்று இந்தூரில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தன. வழியில் ரட்லம் (Ratlam) என்ற பகுதியில், அந்த கார்களுக்கு டீசல் நிரப்பப்பட்டது.
ஆனால் அங்கு டீசல் நிரப்பி விட்டு புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே கார்கள் நடுவழியில் பழுதாகி நிற்க தொடங்கின. இதில், ஒரு சில கார்கள் பெட்ரோல் பங்க்கிலேயே பழுதாகி விட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், டீசல் உடன் தண்ணீர் கலந்திருந்த காரணத்தால்தான், கார்கள் பழுதாகியிருப்பது தெரிய வந்துள்ளது. எனினும் இது குறித்த விசாரணை இன்னும் முழுமையாகவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கில் எடுக்கப்பட்ட மாதிரியை அதிகாரிகள் ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த முடிவு வெளியாகும்போதுதான், விரிவான தகவல்கள் தெரிய வரும். இருப்பினும் பிரச்னை ஏற்பட்ட காரணத்தால், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் உடனடியாக 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதல் அமைச்சர் மோகன் யாதவின் பயன்பாட்டிற்காக மாற்று வாகனங்களை ஏற்பாடு செய்யும் பணிகளும் உடனடியாக செய்யப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிய வாகனங்கள் திடீரென பழுதாகி நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். பெட்ரோல் பங்க் நிர்வாகம் மீதும் தவறு உறுதி செய்யப்பட்டால், மிக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.


Click it and Unblock the Notifications








