நமக்கே தெரியாம லட்சக்கணக்கில் அபராதம் வருமா? வாகனங்களை தூக்க ஆரம்பித்த போலீஸ்... அதிர்ச்சியில் உரிமையாளர்கள்
இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை அதிகாரிகள் கையால் எழுதிய ரசீது வழங்கி அபராதம் விதித்து வந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி வருகிறது. அதற்கு பதிலாக தற்போது இ-சலான்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய முறை எப்படி செயல்படுகிறது? என்பது இன்னும் நிறைய பேருக்கு தெரிவதில்லை. அவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம். இந்த புதிய முறையில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதற்காக சாலையில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை காவல் துறை அதிகாரிகள் பொருத்தியுள்ளனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை, இந்த சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கும். இதில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண் கண்டறியப்பட்டு, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்து இ-சலான்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் நிறைய வாகன உரிமையாளர்கள் இ-சலான்களுக்கான அபராதத்தை செலுத்துவதில்லை.

அப்படி இ-சலான்களுக்கான அபராத தொகையை செலுத்தாமல் உள்ள வாகன உரிமையாளர்கள் மீது காவல் துறை அதிகாரிகள் தற்போது அதிரடி நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். ஹரியானா (Haryana) மாநிலம் குருகிராம் (Gurugram) காவல் துறை அதிகாரிகள்தான் இந்த அதிரடி நடவடிக்கையில் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கின்றனர்.
குருகிராம் நகரில் ஒவ்வொரு நாளும் ஒட்டுமொத்தமாக சுமார் 4,500 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில், 3,000 வாகனங்களுக்கு வழங்கப்படுவது இ-சலான்கள் ஆகும். எஞ்சிய 1,500 வாகனங்களுக்கு பழைய முறைப்படி காவல் துறை அதிகாரிகள் ரசீது வழங்கி அபராதம் விதித்து வருகின்றனர்.

இதில் இ-சலான் பெறும் வாகன உரிமையாளர்கள் பலரும் அபராத தொகையை முறையாக செலுத்துவதில்லை. எனவே அபராத தொகையை செலுத்தாத வாகனங்களை எல்லாம் அதிரடியாக பறிமுதல் செய்யும் நடவடிக்கையை குருகிராம் காவல் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதன்படி கடந்த 10 நாட்களில் மட்டும் 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் 13 ஆட்டோக்கள் மற்றும் 6 பைக்குகள் அடங்கும். இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் அனைவரும் தொடர்ச்சியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் ஆவர். இந்த வாகனங்கள் ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு வாகனத்தின் மீதும் குறைந்தபட்சம் 100 இ-சலான்கள் நிலுவையில் உள்ளன.
இவை சராசரியான எண்கள் ஆகும். துல்லியமாக சொல்வதென்றால், ஒரு ஆட்டோவின் மீது 289 இ-சலான்களும், மற்றொரு ஆட்டோவின் மீது 269 இ-சலான்களும் நிலுவையில் உள்ளன. அதே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பைக்குகளில் ஒன்றின் மீது 195 இ-சலான்கள் நிலுவையில் இருக்கின்றன. நீண்ட நாட்களாக அபராத தொகையை செலுத்தாத காரணத்தால்தான், வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாலையில் காவல் துறை அதிகாரிகள் யாரும் இல்லை என்பதற்காக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். ஏனெனில் சிசிடிவி கேமராக்கள் உங்களை கண்காணித்து கொண்டிருக்கும். யாரும் இல்லை என்பதற்காக நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி கொண்டே இருந்தால், ஒட்டுமொத்தமாக நீங்கள் செலுத்த வேண்டிய அபராத தொகை 1 லட்ச ரூபாயை கூட கடக்கலாம்.
சில சமயங்களில் வாகனங்களின் மதிப்பை விட அதிக தொகையை செலுத்த வேண்டிய சூழல் கூட ஏற்படும். பெங்களூர் போன்ற நகரங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. எனவே போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்குங்கள். இது அபராதம் செலுத்துவதில் இருந்து மட்டுமல்லாது, சாலை விபத்துக்களில் இருந்தும் கூட உங்களை பாதுகாக்கும்.
ஒருவேளை போக்குவரத்து விதிமுறைகளை மீறி விட்டு, அபராத தொகையை செலுத்தாமல் இருந்தால், வாகனங்களை விற்பனை செய்யும்போது சிக்கல் ஏற்படலாம். ஏனெனில் இ-சலான்கள் நிலுவையில் இருந்தால், ஆர்டிஓ அலுவலகத்தில் என்ஓசி (NOC - No Objection Certificate) எனப்படும் தடையில்லா சான்றிதழ் பெற முடியாமல் போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








