டிரைவர் இல்லாமலேயே இயங்கும் டிராக்டர்! வெறும் ரூ.50 ஆயிரத்தில் விவசாயிகளுக்கு கிடைத்த வரம்!
டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து, விவசாயியின் மகன் ஒருவர் இமாலய சாதனை படைத்துள்ளார்.
டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து, விவசாயியின் மகன் ஒருவர் இமாலய சாதனை படைத்துள்ளார். சமீபத்தில்தான் பிளஸ் 2 முடித்துள்ள அவர், வெறும் ரூ.50 ஆயிரம் பட்ஜெட்டில், அந்த டிராக்டரை வடிவமைத்து விட்டார். இந்திய விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும், அந்த டிராக்டர் குறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பமோரிகலா என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் யோகேஸ் நாகர். டிரைவர் இல்லாமல் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து, இந்தியாவின் பெருமையை உலகளவில் நிலைநாட்டியுள்ளார் இந்த 19 வயதேயாகும் இளம் வில்லேஜ் விஞ்ஞானி!!!

யோகேஸ் நாகரின் தந்தை ராம்பாபு நாகர் ஒரு விவசாயி. இதனால் விவசாய பணிகளுக்கு அவர் டிராக்டரை ஓட்டுவது வழக்கம். ஆனால் டிராக்டரை ஓட்டும்போது, தனக்கு கால் மற்றும் வயிற்றில் வலி ஏற்படுவதாக, மகன் யோகேஸ் நாகரிடம், ராம்பாபு நாகர் தெரிவித்துள்ளார்.

அப்போது யோகேஸ் நாகர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான கோட்டாவில் படித்து கொண்டிருந்தார். ஆனால் தந்தையின் இயலாமையை கண்டு மனம் வெதும்பிய யோகேஸ் நாகர், உடனடியாக பமோரிகலா திரும்பினார்.

இதன்பின் டிராக்டரை ஓட்டும் பொறுப்பை யோகேஸ் நாகரே எடுத்து கொண்டார். சுமார் 2 மாதங்களுக்கு பிறகு, டிரைவர் இல்லாமல் இயங்கும் டிராக்டரை உருவாக்கினால் என்ன? என்ற ஐடியா அவருக்கு தோன்றியது. உடனடியாக செயலில் இறங்கினார்.

டிரைவர் இல்லாமல் இயங்கும் டிராக்டரை தயாரிப்பது குறித்த தனது திட்டத்தை தந்தை ராம்பாபு நாகரிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் சாதாரண ஏழை விவசாயியான ராம்பாபு நாகரால், அப்போதைக்கு 2 ஆயிரம் ரூபாய் பண உதவி மட்டுமே செய்ய முடிந்திருக்கிறது.

இந்த பணத்துடன் தன்னிடம் இருந்த பணத்தையும் சேர்த்து, டிரைவர் இல்லாமல் டிராக்டரை இயக்கும் வகையிலான ரிமோட் கண்ட்ரோல் ஒன்றை யோகேஸ் நாகர் வடிவமைத்து விட்டார். இந்த ரிமோட் கண்ட்ரோலை வைத்து டிராக்டரை சிறிய தூரத்திற்கு மட்டும் முன்னும், பின்னும் இயக்க முடிந்தது.

இதனால் ராம்பாபு நாகர் உற்சாகமடைந்தார். இதன்பின் தனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சுமார் 50 ஆயிரம் ரூபாயை புரட்டி, யோகேஸ் நாகருக்கு கொடுத்தார். டிரைவர் இல்லாமல் டிராக்டரை இயக்கும் தனது திட்டத்திற்கு தேவையான பொருட்களை இதன்மூலமாக யோகேஸ் நாகர் வாங்கி கொண்டார்.

இரவு, பகல் பாராமல் வெளிப்படுத்திய 6 மாத உழைப்பிற்கு பின், தனது திட்டத்தில் வெற்றியும் கண்டுவிட்டார் யோகேஸ் நாகர். ஆம், டிரைவர் இல்லாமல் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து, அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து விட்டார்.

டிரைவர் இல்லாமல் சாலைகளில் வலம் வரும் யோகேஸ் நாகரின் டிராக்டரை கண்டு, பமோரிகலா கிராம மக்கள் திகைத்துபோய் உள்ளனர். ஏதோ விட்டாலாச்சார்யா படத்தை பார்ப்பது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

யோகேஸ் நாகரின் டிரைவர்லெஸ் டிராக்டர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்குகிறது. இந்த ரிமோட் கண்ட்ரோலை வைத்து கொண்டு, சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கூட டிராக்டரை இயக்க முடியும்.

இந்த டிராக்டரை இயக்க நிச்சயமாக டிரைவர் தேவையில்லை. ஸ்டியரிங் வீலை கண்ட்ரோல் செய்ய, ஆக்ஸலரேட்டர் கொடுக்க, கியரை மாற்ற, பிரேக் பிடிக்க என எதற்கும் டிரைவர் தேவையில்லை. 1.5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கொண்டு, ரிமோட் கண்ட்ரோல் மூலமாகவே, இவை அனைத்தையும் செய்ய முடியும்.

யோகேஸ் நாகர் டிராக்டரில் டிரான்ஸ்மிட்டர் ஒன்றை பொருத்தியுள்ளார். டிராக்டருக்கும், ரிமோட் கண்ட்ரோலும் இடையேயான கனெக்டராக அந்த டிரான்ஸ்மிட்டர் செயல்படுகிறது. சரி டிராக்டரில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு தள்ளி இருக்கையில், டிராக்டரின் பாதையில் யாரேனும் குறுக்கே வந்தால் என்ன செய்வது? நமக்கு தெரியாதே? என சந்தேகம் வரலாம்.

இதற்கும் யோகேஸ் நாகர் தீர்வு கண்டுள்ளார். ஆம், யோகேஸ் நாகர் கண்டறிந்த ரிமோட் கண்ட்ரோலில் ஒரு சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. டிராக்டரின் பாதையில் ஏதேனும் தடைகள் வந்தால், அது கண்டறிந்து கூறிவிடும். எனவே அதற்கு ஏற்ப, டிராக்டரை இயக்கி கொள்ளலாம்.

இத்தனைக்கும் யோகேஸ் நாகர் இன்ஜினியர் கிடையாது. பெரிய டெக்னீஷியனும் இல்லை. உண்மையில் சமீபத்தில்தான் பிளஸ் 2 பாஸ் செய்துள்ளார். கோட்டா நகரில் பிஎஸ்சி படித்து கொண்டிருக்கையில்தான் ஊருக்கு சென்று இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். டிரைவர் இல்லாமல் இயங்கும் டிராக்டர் வீடியோவை கீழே காணலாம்.
விவசாயம்தான் நமது நாட்டின் முதுகெலும்பு. அத்தகைய விவசாயிகளுக்கு இந்த டிராக்டர் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், தனது கண்டுபிடிப்பிற்கான ஒப்புதல் மற்றும் நிதியுதவியை எதிர்பார்த்து யோகேஸ் நாகர் காத்து கொண்டிருக்கிறார்.

யோகேஸ் நாகர் இதற்கு முன்பாக மேலும் சில சிறிய சிறிய கண்டுபிடிப்புகளையும் செய்துள்ளார். திருடர்கள் யாரேனும் வீட்டிற்குள் நுழைய முயன்றால், வீட்டின் உரிமையாளருக்கு தகவல் சொல்லும் டிவைஸ், அறை காலியாக இருந்தால் பேன், லைட் உள்ளிட்டவற்றை தானாக அணைக்கும் பவர் சேவர் ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.

இந்த சிறிய சிறிய கண்டுபிடிப்புகள் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக தனது அறிவியல் அறிவை வளர்த்து கொண்டு, இன்று தனது உச்சபட்ச கண்டுபிடிப்பில் வெற்றியடைந்திருக்கிறார் யோகேஸ் நாகர். எதிரிகளிடம் இருந்து நமது நாட்டு பாதுகாப்பு படை வீரர்களை காப்பாற்றும் வகையில், ராணுவத்திற்கு என ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை உருவாக்க வேண்டும் என்பது அவரது கனவாம். அந்த கனவு நிறைவேற நாமும் லோகேஸ் நாகரை வாழ்த்துவோம்!
Source:HISTORY
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications