ரொம்ப பழைய வண்டிகள் மிகவும் அதிகமாக இருக்கும் மாநிலங்கள் இவைதான்... ஒன்றிய அரசின் கையில் லிஸ்ட்!
இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயதுடைய வாகனங்கள் மிகவும் அதிகமாக இருக்கும் மாநிலங்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் இன்னமும் சாலையில் அதிக அளவில் இயங்கி கொண்டிருக்கும் மாநிலங்களாக கர்நாடகா மற்றும் டெல்லி ஆகியவை உருவெடுத்துள்ளன. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அஸ்வினி சௌபே தெரிவித்துள்ள தகவல்களின்படி, இந்த இரண்டு மாநிலங்களிலும் ஒட்டுமொத்தமாக 75 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கும் அதிக வயதுடையவை ஆகும்.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது, 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிக அளவில் இயங்கி கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலை அமைச்சர் அஸ்வினி சௌபே வெளியிட்டார். அமைச்சர் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, கர்நாடக மாநிலத்தில் 39.48 லட்சம் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்டவை.

அதே சமயம் டெல்லியில் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயதுடைய 36.14 லட்சம் வாகனங்கள் இருக்கின்றன. இந்த பட்டியலில் உத்தர பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் 20 வயதை கடந்த வாகனங்களின் எண்ணிக்கை 26.20 லட்சம் ஆகும். இந்த மூன்று மாநிலங்கள் தவிர இன்னும் பல்வேறு மாநிலங்களில் 20 வயதை கடந்த வாகனங்கள் இன்னும் அதிகளவில் இருக்கின்றன.

இதன்படி கேரளாவில் 20.67 லட்சம் வாகனங்களும், தமிழ்நாட்டில் 15.99 லட்சம் வாகனங்களும், பஞ்சாப்பில் 15.32 லட்சம் வாகனங்களும் இயங்கி கொண்டுள்ளன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்தியா முழுவதும் சுமார் 2.15 கோடி வாகனங்கள் 20 வயதை கடந்தவை ஆகும். இது மிகவும் அதிக எண்ணிக்கை என்பதில் சந்தேகமில்லை.

இத்தனைக்கும் இந்த பட்டியலில் ஆந்திரா, தெலங்கானா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் இல்லை. மையப்படுத்தப்பட்ட வாகன் 4 போர்ட்டலில் இந்த மாநிலங்கள் இல்லாத காரணத்தால், பட்டியலில் இருந்து விலக்கப்பட்டதாக அமைச்சர் அஸ்வினி சௌபே தெரிவித்துள்ளார். இந்தியாவில் இவ்வளவு எண்ணிக்கை மிகவும் பழைய வாகனங்கள் இருந்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

குறிப்பாக பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள்தான் சுற்றுச்சூழலை மிக கடுமையாக மாசுபடுத்துகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை ஏற்படுத்தும் தாக்கம் கவலையளிப்பதாக உள்ளது.

இதற்கு பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் பழைய வாகனங்கள் மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. எனவே பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டையும் அவை ஊக்குவித்து வருகின்றன.

இதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதும் இதன் முக்கியமான நோக்கமாக உள்ளது. எனவே வரும் காலங்களில் இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை மிக அதிக அளவில் பார்க்க முடியும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








