மாஸ்... ரஷ்ய ராக்கெட் மூலம் விண்ணில் பாயும் இந்திய இளைஞர்களின் செயற்கைகோள்... எதற்காக தெரியுமா?
ரஷ்ய ராக்கெட் மூலமாக இந்திய இளைஞர்களின் செயற்கைகோள் விண்ணில் பாயவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் விண்வெளி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. விண்வெளி பற்றிய செய்திகளை வாசித்தாலே, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடிகளை செலவிட்டு, பெரிய செயற்கைகோள்களை மிக பிரம்மாண்டமான முறையில் லான்ச் செய்வதுதான் முதலில் நம் நினைவிற்கு வரும்.

இந்த பெரிய செயற்கைகோள்கள் ஹை-டெக் தரவுகளை விண்வெளியில் இருந்து பூமிக்கு தருகின்றன. இது மறுக்க முடியாத உண்மை. எனினும் ஒரு சில சுயாதீன விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் (Independent Space Agencies) மிகச்சிறிய அளவில் செயற்கைகோள்களை உருவாக்குகின்றன. பெரிய அளவிலான செயற்கைகோள்களில் கிடைக்கும் அதே ரிசல்ட் இதிலும் கூட கிடைக்கிறது.

இந்த வகையில் இரண்டு இளம் இந்தியர்கள் வெகு விரைவில் மிகச்சிறிய செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பவுள்ளனர். விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் இந்த செயற்கைகோள்கள் விண்வெளியில் ஏவப்படவுள்ளன. இந்த செயற்கைகோள்களின் உதவியுடன் விவசாயிகள் தங்கள் பயிர்களை நன்றாக பராமரிக்க முடியும்.

கிஸ்கிட்இஜ் கண்டெல்வால் மற்றும் அவாய்ஸ் அகமது என்ற இரண்டு இளம் இந்தியர்கள்தான் இந்த சிறிய செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பவுள்ளனர். இதில், கிஸ்கிட்இஜ் கண்டெல்வாலுக்கு 22 வயது மட்டுமே ஆகிறது. இவர் பிலானி பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தின் (BITS - Birla Institute of Technology and Science) முன்னாள் மாணவர்.

அவாய்ஸ் அகமது அவரது க்ளாஸ்மேட் ஆவார். தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நிறுவனம் பிக்ஸல் (Pixxel) என்று அழைக்கப்படுகிறது. பிக்ஸல் நிறுவனத்தை கிஸ்கிட்இஜ் கண்டெல்வாலும், அவாய்ஸ் அகமதுவும் சுமார் 18 மாதங்களுக்கு முன்பாகதான் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயம், வானிலை, காற்றின் தரம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக சிறப்பான தரவு சேகரிப்பிற்கு உதவும் வகையில் உயர்தரமான புகைப்படங்களை எடுக்கும் செயற்கைகோள்களை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முன்னாள் ஊழியர்களும் அவர்களது குழுவில் இருக்கின்றனர்.

அவர்களுடைய அனுபவம் மற்றும் அறிவு ஆகியவற்றின் உதவியுடன் தங்களது திட்டங்களை வெற்றியடைய செய்யும் முனைப்பில் கிஸ்கிட்இஜ் கண்டெல்வாலும், அவாய்ஸ் அகமதுவும் உள்ளனர். அவர்களின் முதல் செயற்கைகோள் ரஷ்யாவின் சோயூஸ் (Soyuz) ராக்கெட் மூலமாக வரும் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் பாயவுள்ளது.

ஒருவரால் எப்படி செயற்கைகோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்த முடியும்? இதில் உள்ள சவால்கள் என்னென்ன? என்பது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு கிஸ்கிட்இஜ் கண்டெல்வால் பதில் அளித்துள்ளார்.

ரைடுஷேரிங்
செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தப்போவது எப்படி? என்ற கேள்விக்கு கிஸ்கிட்இஜ் கண்டெல்வால் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். 'ஒரு பஸ்ஸை நினைத்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் டிக்கெட் எடுக்க வேண்டும். செயற்கைகோள் லான்ச்களும் இதே வழியில்தான் நடைபெறுகின்றன. இவை ரைடு-ஷேர் லான்ச்கள்.

எங்களை போன்று அதிகம் செலவில்லாத சிறிய ரக செயற்கைகோள்களை பலர் உருவாக்கி வருகின்றனர். ஒட்டுமொத்த லான்ச்சிற்கும் நாங்கள் 'புக்' செய்ய மாட்டோம். ரைடு-ஷேர் லான்ச்சைதான் நாங்கள் 'புக்' செய்வோம். சோயூஸ் ராக்கெட் மூலம் எங்கள் செயற்கைகோள் இப்படித்தான் விண்ணில் பாயவுள்ளது' என்றார்.

மைக்ரோசாட்டிலைட்களில் அதிக கவனம் ஏன்?
மைக்ரோசாட்டிலைட்களை உருவாக்குவதில் பிக்ஸல் குழு அதிக கவனம் செலுத்துவது ஏன்? என்ற கேள்விக்கு கிஸ்கிட்இஜ் கண்டெல்வால் அளித்த பதில்: சிறிய செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்கு குறைவான செலவுதான் ஆகும். நாங்கள் மைக்ரோசாட்டிலைட்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துவதற்கு காரணம் இதுதான். வழக்கமாக பெரிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த அதிக செலவு ஆகும்.

அனைவராலும் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடியுமா?
ரைடு-ஷேர் முறையில் அனைவராலும் தங்கள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடியுமா? அவ்வாறு செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்புவதில் உள்ள விதிகள் என்னென்ன? ஒருவருக்கு தேவைப்படும் ஒப்புதல்கள் என்னென்ன? என்ற கேள்விக்கு கிஸ்கிட்இஜ் கண்டெல்வால் அளித்த பதில் பின்வருமாறு:

ராக்கெட்களை லான்ச் செய்வது பற்றி குறிப்பாக பேசும்போது, அது ஒரு குறிப்பிட்ட நாட்டின் ஒழுங்குமுறை அதிகாரிகளை பொறுத்தது. ராக்கெட்களை கட்டமைக்க நீங்கள் சரியான லைசென்ஸை பெற வேண்டும். அத்துடன் தேவையான ஒப்புதல்கள் மற்றும் எரிபொருளையும் பெற வேண்டும். இதன் இறுதியாக ராக்கெட்டை லான்ச் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








