லோக்கல் இரயிலில் உணவு இருக்கும் இடத்தை தேடி வரும்!! இந்த பசங்க பெரிய பிஸ்னஸ்மேனாக வருவாங்க... பாருங்க!
மும்பை (Mumbai) லோக்கல் இரயிலில் நடமாடும் உணவகத்தை துவங்க இளைஞர்கள் சிலர் திட்டமிட்டுள்ளனர். 'டேஸ்டி டிக்கெட்' என்ற பெயரில் துவங்கப்படும் இந்த புது தொழிலை விளம்பரப்படுத்தும் விதமாக, லோக்கல் இரயிலுக்குள் பயணிகள் சிலருக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேசையில் அந்த பயணிகளுக்கு உணவு வழங்கப்படும் படங்கள் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளன.
சென்னையை போல், மும்பையின் பொது மக்களின் பிரதான போக்குவரத்தாக லோக்கல் எலக்ட்ரிக் இரயில்கள் விளங்குகின்றன. இன்னும் சொல்லப்போனால், சென்னையை காட்டிலும் மும்பையில் லோக்கல் இரயில்களை நிறைய பேர் தங்களது அன்றாட போக்குவரத்துக்காக நம்பியுள்ளனர். இதனால், மும்பை மாநகரின் இதயம் என்றுகூட லோக்கல் இரயில்களை சொல்லலாம்.

சென்னையில் இயக்கத்தில் இருக்கும் நிறைய லோக்கல் எலக்ட்ரிக் இரயில்கள் மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்டவையே. அந்த அளவிற்கு, தினந்தோறும் பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருக்கும் மும்பை லோக்கல் மின்சார இரயில்களை ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கிலான மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, காலை நேரங்களில் ஒரு சில வழித்தடங்களில் உங்களால் இரயிலுக்கு உள்ளேயே போக முடியாது.
அந்த அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும். இதில் பெரும்பாலானோர் காலையில் சரியாக கூட உணவை உண்ணாமல், அறக்க... பறக்க அலுவலகத்தையும், கல்லூரியையும் நோக்கி பயணிப்பவர்களே. நிறைய இரயில் நிலையங்களில் உணவகங்கள் இருந்தாலும், அங்கு உணவு உண்ண நேரம் இல்லாமல் பலர் அப்படியே இரயிலில் ஏறி சென்று விடுகின்றனர்.

இதனை அறிந்த இளைஞர்கள் சிலர், அத்தகையவர்களை டார்க்கெட் செய்து புதிய தொழிலை ஆரம்பித்துள்ளனர். அதாவது, உணவகங்களை லோக்கல் எலக்ட்ரிக் இரயிலுக்கு உள்ளேயே கொண்டுவந்துள்ளனர். லோக்கல் மின்சார இரயிலுக்குள் பிஸ்கேட், கொய்யாப் பழத்தை விற்பது போல், கையில் சிறிய மேசை உடன் இரயில் பெட்டிக்குள் நுழையும் இவர்கள், பயணிகளை அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தை விட்டு எழுப்பாமலேயே உணவை வழங்குகின்றனர்.
லோக்கல் இரயிலுக்குள் உணவுகளை விற்பது ஒன்றும் புதுசு அல்ல. ஆனால், இந்த இளைஞர்கள் மேசையில் உணவுகளை வழங்குவதால், குலுங்கும் இரயிலிலும் பயணிகளால் சவுகரியமாக அமர்ந்து உணவு அருந்த முடிகிறது. இதன் காரணமாகவே இந்த இளைஞர்களின் தொழில் அவர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் வேகமாக சூடு பிடித்துள்ளது.

பிஸியான மும்பை லோக்கல் இரயிலில் இந்த தொழிலை ஆரம்பித்துள்ள இளைஞர்களின் பெயர் ஆர்யன் கடாரியா மற்றும் சர்தக் சச்தேவா ஆகும். இவர்கள் இந்த தொழிலை இன்னும் முழுமையாக ஆரம்பிக்கவில்லை. விரைவில், பிரம்மாண்டமாக இந்த தொழிலை துவங்கவுள்ளனர். இது தொடர்பான விபரங்கள் அடங்கிய வீடியோவையும் அவர்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
தொழில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படும் நாளில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக உணவுகளை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கு முன்னதாக, மும்பை லோக்கல் இரயில் பயணிகளுக்கு இதுகுறித்து தெரிவிக்கும் விதமாக உணவுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதனை கீழே பதிவிடப்பட்டு உள்ள இன்ஸ்டாகிராமில் வீடியோவில் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லோக்கல் இரயிலில் இவ்வாறு நடமாடும் உணவகத்தை கொண்டுவருவது ஸ்மார்ட்டான யோசனை. இருப்பினும், இந்த தொழில் இரயில் பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், மும்பை லோக்கல் இரயில்கள் எப்போதும் கூட்டமாக இருக்கும். இதனாலேயே, லோக்கல் எலக்ட்ரிக் இரயில்களில் வியாபாரம் பார்க்க இரயில்வே போலீஸார் அனுமதிப்பதில்லை. ஆனால், இந்த இளைஞர்கள் மட்டும் எவ்வாறு அனுமதியை பெற்றனர் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









