பொது சாலையில் இரண்டு பெண்கள் செய்த காரியம்... வீடியோவை பார்த்து ஷாக் ஆன உத்தர பிரதேச போலீஸ்...
பொது சாலையில் பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் மீது காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளில் இரண்டு பெண்கள் ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் பகுதியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தற்போது வைரலாக பரவி வரும் அந்த ஸ்டண்ட் வீடியோவை காவல் துறையினரும் பார்த்துள்ளனர்.

இதன்பின் அபாயகரமான முறையில் மோட்டார்சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களுக்கும் 11 ஆயிரம் ரூபாயை அவர்கள் அபராதமாக விதித்துள்ளனர். இந்த சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களும் ஒரே நிற டீ-சர்ட்டை அணிந்திருந்ததை வீடியோவில் காண முடிகிறது. இதில், ஒருவர் மோட்டார்சைக்கிளை ஓட்டி கொண்டிருக்க, மற்றொருவர் அவரது தோள்பட்டையின் மீது அமர்ந்திருந்தார்.

இந்த இரண்டு பெண்களும் ஸ்டண்ட் செய்தபோது, சாலை காலியாகதான் இருந்தது. எனினும் ஒரு சிலர் நடந்து சென்று கொண்டிருப்பதை காண முடிகிறது. அத்துடன் சில வாகனங்களும் அப்போது அவ்வழியாக வந்தன. இத்தகைய அபாயகரமான ஸ்டண்ட்களை பொது சாலையில் மேற்கொள்வது என்பது மிகவும் ஆபத்தானது.

அத்துடன் அந்த இரண்டு பெண்களும் பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் அணியவில்லை. தலை கவசத்தை கூட அவர்கள் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொது சாலைகளில் கார், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

பொது சாலையில் சாகசத்தில் ஈடுபடும் ஒருவரால், மற்ற வாகன ஓட்டிகளின் கவனம் சிதறக்கூடும். இதன் காரணமாக சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது தவிர சாகசங்கள் செய்யும்போது ஏதாவது தவறு ஏற்பட்டால், அது பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் வாகனங்களில் ஸ்டண்ட் செய்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், பாதுகாப்பான காலி இடத்தை கண்டறிந்து அங்கு பயிற்சி மேற்கொள்ளலாம். அத்துடன் நீங்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பதும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் மிகவும் முக்கியம்.

இளைஞர்கள் எப்போதும் இந்த விஷயத்தில் அனுபவம் உடைய நிபுணர்களின் உதவியை பெறுவது நல்லது. அதேபோல் இதற்கென உள்ள அகாடமிகளில் சேர்ந்தும் இளைஞர்கள் பயிற்சி பெறலாம். அதை விட்டு விட்டு பொது சாலைகளை தேர்வு செய்யாதீர்கள். உயிரிழப்பு நிகழக்கூடிய அளவிற்கான விபத்துக்களை பொது சாலைகள் ஏற்படுத்தி விடும்.
ஆனால் இளைஞர்கள் சிலர் இதையெல்லாம் மனதில் கொள்ளாமல், பொது சாலைகளில் தொடர்ந்து அபாயகரமான சாகசங்களை செய்து கொண்டுதான் உள்ளனர். சமீப காலமாக பெண்கள் ஒரு சிலரும் பொது சாலைகளில் ஸ்டண்ட் செய்யும் வீடியோக்கள் வைரலாகி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








