அரபு நாடுகளின் தலையில் இடியை இறக்க போகும் இந்தியா... பக்காவா ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தும் மோடி!
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைக்க இந்தியா முயன்று வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2023-24ம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா இலக்காக வைத்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தற்போது தெரிவித்துள்ளார். அதே சமயம் 100 சதவீதம் எத்தனாலில் இயங்க கூடிய வாகனங்கள்தான் உச்சபட்ச இலக்கு எனவும் அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''நமது பெட்ரோலிய தயாரிப்புகளில், வரும் 2023-24ம் ஆண்டிற்குள், 20 சதவீத எத்தனால் கலக்கப்பட வேண்டும். ஆனால் 100 சதவீத எத்தனாலில் இயங்க கூடிய வாகனங்கள்தான் நமது உச்சபட்ச இலக்கு'' என்றார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அமைச்சர் பியூஷ் கோயல் இதனை தெரிவித்தார்.

பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை படிப்படியாக அதிகரிப்பதற்கு இந்தியா தற்போது தீவிர முயற்சி செய்து வருகிறது. எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவிற்கு பல்வேறு விதங்களில் நன்மை கிடைக்கும். இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு குறையும் என்பது முதல் நன்மை.

வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை அதிகளவு இறக்குமதி செய்வதால், இந்தியாவின் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம், வெளிநாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதியின் மூலமாகதான் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க ஆரம்பத்தில் இருந்தே ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பது இதில் ஒன்று. இரண்டாவதாக பெட்ரோலுடன் எத்தனாலை அதிகளவு கலப்பதன் மூலமாக இந்திய விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

ஏனெனில் கரும்பு, மக்காசோளம் மற்றும் உருளைகிழங்கு போன்ற விவசாய பயிர்களில் இருந்துதான் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர பெட்ரோலுடன் எத்தனாலை கலந்து எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாடு குறையும் என்பது மூன்றாவது நன்மை. உலகில் வாகனங்களால் காற்று அதிகம் மாசடைந்த நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியாவிற்கு எத்தனால் வரப்பிரசாதம்தான்.

ஆனால் அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவது ஏற்கனவே அதிகரித்து விட்ட நிலையில், இந்தியா தற்போதுதான் ஆரம்ப நிலையில் இருக்கிறது. இந்தியாவில் இதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டிருந்தாலும் கூட, தற்போதுதான் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை குறைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அரசின் தீவிரமான கொள்கையே இதற்கு காரணம். இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும், கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு மற்றும் காற்று மாசுபாடு ஆகிய இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காண ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








