புதிய கார் வாங்க பழைய ஃபெராரி காரை கொளுத்திய இளைஞர்!
"எத்தனை பெரிய மனிதனுக்கு, எத்தனை சிறிய மனமிருக்கு" என்ற, தத்துவார்த்தமான வார்த்தைகள் இந்த வாலிபருக்கு பொருத்தமானதாக இருக்கும். ஆம், சுவிட்சர்லாந்து நாட்டில், இன்ஸ்யூரன்ஸ் பெறுவதற்காக, தனது ஃபெராரி காரை வாலிபர் ஒருவர் கமுக்கமாக கொளுத்தியுள்ளார்.
அந்த பணத்தில் புதிய கார் வாங்க அவர் திட்டமிட்டதும் போலீசாரின் புலனாய்வில் உறுதியானது. இதையடுத்து, இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்.

அப்பாவின் பரிசு
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெரும் கோடீஸ்வரரின் மகன்தான் அந்த வாலிபர். 20வயதுதான் ஆகிறது. அந்த வாலிபருக்கு அவரது அப்பா தன்னுடைய ஃபொரரி 458 இட்டாலியா காரை பரிசாக வழங்கி பயன்படுத்த கொடுத்துள்ளார். அந்த கோடீஸ்வரரிடம் லம்போர்கினி உள்பட 14 விலையுயர்ந்த கார்கள் இருக்கின்றன. எனவே, அதில் ஒரு காரை மகனிடம் வழங்கியுள்ளார்.

புது மோகம்
ஆனால், அந்த ஃபெராரி கார் அவருக்கு ஓட்டி போரடித்துவிட்டது. எனவே, புதிய காரை வாங்குவதற்கு ஷோரூமை அணுகியுள்ளார். மேலும், தனது பழைய ஃபெராரி காருக்கும் மதிப்பு போட்டுள்ளார். அவரிடம் இருந்த ஃபெராரி காருக்கு குறைவான மதிப்பு கிடைத்துள்ளது. எனவே, அந்த மதிப்பில் புதிய காரை வாங்குவது இயலாத காரியமாகியுள்ளது.

ஐடியா கொடுத்த டீலர்
கையை பிசைந்து நின்ற அந்த வாலிபரிடம், புதிய காரை விற்கும் நோக்கில், டீலரில் இருந்தவர்கள் ஒரு நூதன ஐடியாவை கொடுத்துள்ளனர். அதாவது, இப்போது இருக்கும் ஃபெராரி 458 இட்டாலியா காரை யாருக்கும் தெரியாமல் கொளுத்தி விடுங்கள். போலீசாரிடம் கார் திருடுபோய் விட்டாதாக கதை கட்டிவிடலாம் என்று நினைத்துவிட்டனர். அதன் பிறகு இன்ஸ்யூரன்ஸ் க்ளெய்ம் செய்து புதிய கா் வாங்கிவிடலாம். மேலும், இன்ஸ்யூரன்ஸ் மூலம் கிடைக்கும் தொகை அந்த காரின் மதிப்பைவிட அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

சின்ன புத்தி
புது கார் மோகத்தில், டீலர் கூறிய ஐடியாவை செயல்படுத்த அந்த வாலிபர் முடிவு செய்தார். இதற்காக, டீலர் பணியாளர் உள்பட மூன்று பேருடன் சேர்ந்து காரை எரிக்க முடிவு செய்தார். அவர்களுக்கு 15,000 டாலர் கூலியும் பேசப்பட்டது. அதன்படி, உள் நாட்டில் காரை எரித்தால் பிரச்னை வரும் என்று எண்ணி நாட்டின் எல்லையை கடந்து ஜெர்மனியிலுள்ள ஆள் ஆரவமற்ற பகுதியில் வைத்து காரை எரித்துவிட்டனர்.

அம்பலம்...
கார் எரிந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த சிசிடிவி காட்சிகள் மூலமாக, அந்த வாலிபரே தனது சொந்த காரை எரித்ததை கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து, நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரியவந்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதில், அந்த வாலிபருக்கு 22 மாதங்கள் ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. உதவியவர்களுக்கும் 14 முதல் 16 மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

தயக்கம்
தனது அப்பாவிடம் புதிய கார் வாங்குவது குறித்த தெரிவிக்க அச்சமும், தயக்கமும் இருந்ததாகவும், அதனால்தான் டீலரின் யோசனைப்படி காரை எரித்ததாகவும் அந்த வாலிபர் கூறியிருக்கிறார். இப்போது இருந்த காரும் போனதோடு, சிறை தண்டனையை பரிசாக பெற்று அனுபவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications








