ரூ.2,000 நோட்டுகளை அரசு பேருந்துகளில் இன்றுமுதல் கொடுக்க முடியாது, ஆனா ஆம்னி பேருந்துகளில்...?
நம் நாட்டில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பது ரூ.2,000 நோட்டு வருகிற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு ஆகும். இதுகுறித்த பேச்சு இணையம் தாண்டி, நிஜ உலகிலும் பரவலாக எழுந்துவரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் விதமான மீம்ஸையும் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.
என்ன தான் இவ்வாறான கிண்டல் பேச்சுகள் எழுந்துள்ள போதிலும், ஒருபக்கம் ரூ.2,000 நோட்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு செல்லாது என்ற அறிவிப்புக்கு ஏற்ப நாடு முழுவதும் அனைவரும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, வியாபாரிகள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை மற்றவர்களிடத்தில் மாற்றும் முயற்சியில் இப்போதே இறங்க ஆரம்பித்துவிட்டனர்.

அதேபோன்று, தமிழ்நாட்டு அரசு போக்குவரத்து கழகம் அரசு பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என பேருந்து நடத்துனர்களை அறிவுறுத்தி உள்ளது. மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 பணத்தை வருகிற மே 23ஆம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என மத்திய ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆதலால், மே 23ஆம் தேதி முதல் அரசு பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை நடத்துனர்கள் பெற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அறிக்கை எதுவும் தற்போதுவரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இருந்து வெளிவரவில்லை. வெறுமனே அறிவுரையாகவே வெளிவந்துள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் திருநெல்வேலி மண்டல கணக்கு துறை மேலாண் இயக்குநர் மட்டுமே இதுகுறித்த கடிதம் ஒன்றை தனது மண்டலத்திற்கு கீழ் உள்ள பேருந்து நிலையங்களுக்கு அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் மறுப்பு இன்றி தொடர்ந்து வாங்கப்படும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் வங்கி செல்ல முடியாதவர்களுக்கும், செல்ல நேரம் இல்லாதவர்களுக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும், அரசு பேருந்து கழகத்தின் அறிவுறுத்தலை மறந்துவிட வேண்டாம். ஏனெனில் மாநகர போக்குவரத்து கழகங்களும், அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் தான் செயல்படுகின்றன. ஆதலால், மே 23ஆம் தேதி முதல் மாநகர பேருந்துகளிலும் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படாது. ஆதலால் எல்லாவற்றிற்கும் தயாராக, சரியான சில்லறை உடன் பேருந்துகளில் பயணிக்கவும்.
ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு பேருந்துகளில் மட்டுமில்லாமல், இரயில்களில், விமானங்களில் கூட விரைவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. இருப்பினும் 2016ஆம் ஆண்டில் ஏடிஎம் வாசல்களில் வரிசையில் நின்றதுபோல் சூழ்நிலை ஏற்படாது என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும். ஏனெனில் நம்மில் பலர் ரூ.2,000 நோட்டை நேரில் பார்த்தே பல நாட்களாகி இருக்கும் என நினைக்கிறேன்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ரிசர்வ் வங்கியின் சமீபத்திய இந்த அறிவிப்புக்கு மக்கள் பலர் கவலையடையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், ஏற்கனவே கூறியதுபோல் ரூ.2,000 நோட்டை நம்மில் பெரும்பாலானோர் வைத்தில்லாததே ஆகும். அதுமட்டுமின்றி, டிஜிட்டல் மயமும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். இருப்பினும் மக்களின் அசவுகரியத்தை மனதில் கொண்டு ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டை வாங்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் முடிவு உண்மையில் பாராட்டத்தக்கது.


Click it and Unblock the Notifications