எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
பெண்ட்லீ (Bentley) கார்களை நேரில் காண்பதே நம்மில் பெரும்பாலானோருக்கு கனவாக இருக்கும் சூழலில், புனேவில் விலையுயர்ந்த பெண்ட்லீ கார் ஒன்று கேட்பாரற்று சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புனே ஆட்டோமோட்டிவ்ஸ் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
என்னதான் விலையுயர்ந்த வாகனங்களாக இருப்பினும், அவையும் ஓர் இயந்திரமே ஆகும். அதாவது, அவற்றிற்கும் ஆயுட்காலம் என்பது உள்ளது. அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பினும், ஆயுட்காலம் முடிந்துவிட்டால் அவற்றை பயன்படுத்த முடியாது. இதனால், பயன்படுத்தவே முடியாத நிலையை எட்டும் முன்னரே வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய வாகனத்தை கஸ்டமர்கள் பெற்றுவிடுகின்றனர்.

இந்த எக்ஸ்சேஞ்ச் முறையில், புதிய வாகனத்தை சற்று குறைவான விலையில் வாங்க முடியும். அதேநேரம், பழைய வாகனத்தையும் ஓரங்கட்ட முடிகிறது. இருப்பினும், சில வாடிக்கையாளர்கள் தங்களது பழைய வாகனங்களின் மீது பெரியதாக கவனத்துடன் இருப்பதில்லை. இதனால், பயன்படுத்த முடியாமல் போகும் பழைய வாகனங்களை சிலரது வீடுகளிலும், சாலைகளிலும் ஓரங்கட்டப்பட்டு இருப்பதை காண முடியும்.
விலையுயர்ந்த பைக்/ காரை வாங்குபவர்கள் பெரும்பாலும் இவ்வாறு அஜாக்கிரதையாக இருப்பதில்லை. இருப்பினும் அவர்களில் சிலரும், அதிக தொகையில் வாங்கிய பழைய வாகனங்களை ஒருக்கட்டத்திற்கு மேல் கண்டுக்கொள்வது இல்லை. மும்பை, டெல்லி போன்ற மாநகரங்களில் மேம்பாலங்களுக்கு அடியில் விலையுயர்ந்த லம்போர்கினி கார், டுகாட்டி பைக்குகள் நிறுத்தப்பட்டு இருப்பதை பற்றி இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

அந்த வரிசையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் சாலையோரத்தில் கேட்பாரற்று அனாதையாக ஒரு விலையுயர்ந்த பெண்ட்லீ கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பறவைகளின் எச்சங்களுடன், மிகவும் தூசி படிந்து கிடக்கும் இந்த கார் ஆனது பெண்ட்லீ அர்னேஜ் ஆர் என்கிற லக்சரி சலூன் ஆகும். இதன் விலை பல கோடி ரூபாய்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புனேவில் காலேவாடி பிம்ப்ரி என்கிற மேம்பாலத்திற்கு அருகே, சேவா விகாஸ் என்கிற வங்கிக்கு வெளியே இந்த பழைய பெண்ட்லீ கார் நீண்ட வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த பெண்ட்லீ கார் ஓரங்கட்டப்பட்டுள்ளது என்பதற்கு சரியாக காரணம் தெரியவில்லை. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் இந்த பெண்ட்லீ காரில் விழுந்துள்ள இலைகள் மிகவும் காய்ந்த நிலையில் இருப்பதை காணலாம்.

பறவைகளின் எச்சங்கள் காரின் மீது விழுந்து, காய்ந்துப்போய் எளிதில் அகற்ற முடியாத அளவிற்கு உள்ளதை வீடியோவின் வாயிலாக அறிய முடிகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இந்த பெண்ட்லீ அர்னேஜ் ஆர் கார் நிச்சயமாக பல வருடங்களாக இதே இடத்தில் நின்றுக் கொண்டிருக்கிறது. காரின் நம்பர் பிளேட்டை வைத்து ஆன்லைனில் ஆராய்ந்து பார்த்ததில், இது 2008ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பெண்ட்லீ அர்னேஜ் ஆர் லக்சரி சலூன் கார் ஆகும்.
வெயில், மழை, காற்று என அனைத்தையும் தாங்கிக் கொண்டு நிற்பதால், இந்த பெண்ட்லீ காரின் க்ரோம் பளபளப்புகள் அனைத்தும் கலையிழந்து காட்சியளிக்கின்றன. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், காரின் உட்பக்கத்தை காண முடியவில்லை. நிச்சயமாக, காருக்கு உள்ளேயும் தூசிகள் படிந்திருக்கும். அர்னேஜ் ஆர் கார்களை 1998ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் ஆண்டு வரையில் பெண்ட்லீ நிறுவனம் உற்பத்தி செய்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வங்கிக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருப்பதால், இது வாடிக்கையாளரிடம் இருந்து வங்கி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட காராக இருக்கலாம். அதாவது, கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த வங்கியின் மூலமாக இந்த கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கலாம். பொதுவாக, இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் சில காலத்திற்கு பின் ஏலத்தில் விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த காரை அவ்வாறு எதுவும் செய்யாமல் ஏன் நிறுத்தி வைத்துள்ளனர் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









