பட்ஜெட்டில் நாம் எதிர்பார்க்குறது எல்லாம் இருக்குமா? எலக்ட்ரிக் வாகன துறை மத்திய அமைச்சரின் கையில்!!
2024-25ஆம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்சி அமைக்கப்பட்ட பின் பிரதமர் மோடி அரசின் முதல் பட்ஜெட் தாக்கலாக இது விளங்கவுள்ளதால், 2024-25 பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வருவான வரி, எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், ஆட்டோமொபைல் துறை தொடர்பாக பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பபடும் மற்ற அறிவிப்புகளையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியா உள்பட உலகமே எலக்ட்ரிக் வாகனங்களை சார்ந்துதான் எதிர்காலத்தில் இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எரிபொருள் என்ஜின் வாகனங்களில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கிய இந்த மாற்றத்தை முடிந்தவரையில் வேகப்படுத்தும் முயற்சியாக ஃபேம் (FAME) என்கிற திட்டத்தை சில வருடங்களுக்கு முன் மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தின்படி, எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கணிசமான மானியம் கிடைத்து வருகிறது. இதன் மூலமாக, எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் குறைவாக உள்ளன. தற்சமயம் 2ஆம் கட்ட ஃபேம் திட்டம் நடைமுறையில் உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் ஃபேம்-2 திட்டத்தின்படி மானியத்தை பெறும் எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களுக்கான மானிய தொகை சற்று குறைக்கப்பட்டது. இதனால், ஃபேம் திட்டம் முற்றிலுமாக நிறுத்தப்படலாம் என்றெல்லாம் கூட பேச்சுகள் எழுந்தன.
இப்படிப்பட்ட நிலையில், ஃபேம்-3 திட்டம் கண்டிப்பாக வரும் என சமீபத்தில் மத்திய அமைச்சர் எச்டி.குமாரசாமி அறிவித்தது எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இந்த நிலையில், விரைவில் 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிக்கப்பட உள்ளதால், இந்த பட்ஜெட்டில் ஃபேம்-3 திட்டம் குறித்த அறிவிப்பு இருக்கும் என ஒரு தரப்பினரும், இந்த பட்ஜெட்டில் இருக்காது அடுத்த 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம் என ஒரு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

ஃபேம்-2 திட்டத்தினால், 2023ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை இந்தியாவில் சுமார் 48% அதிகரித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களை வழங்குவதோடு, நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்ற பயண சூழலை உருவாக்குவதும் அரசாங்கத்தின் கடமை ஆகும். குறைந்தப்பட்சம், எலக்ட்ரிக் வாகனங்களை விரைவாக சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் வசதிகளை நாடு முழுவதும் கொண்டுவர வேண்டும்.
2024-25 பட்ஜெட்டில் ஃபாஸ்ட் இவி சார்ஜிங் கட்டமைப்பு குறித்த அறிவிப்பு இடம்பெற்றால் அது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை இன்னும் வேகப்படுத்தும். ஆனால் உண்மையில், ஃபாஸ்ட் இவி சார்ஜிங் வசதிகளை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்வதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அவற்றை ஊக்கப்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் புதிய பட்ஜெட்டில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறுவதை ஊக்கப்படுத்துவதை போல, ஹைப்ரீட் வாகனங்களை மக்கள் பயன் படுத்துவதையும் அதிகரிக்க வேண்டும் என்பது ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கருத்தாக உள்ளது. இதற்காக, ஹைப்ரீட் வாகனங்களுக்கான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்து உள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சமீப காலமாக சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதுவே மத்திய அரசை சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் கொஞ்சம் மெதுவாக்கி உள்ளது. கடந்த ஆண்டில் எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கான மானியத்தை குறைத்ததும் அதன் ஒருபகுதியாகவே பார்க்கிறோம். ஆதலால், 2024-25 பட்ஜெட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் இடம்பெறுவது அவசியமாகின்றன.


Click it and Unblock the Notifications








