பீகார் வேற லெவலுக்கு மாற போவது உறுதி... கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்கும் மத்திய அரசு!!
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய அரசின் 2024-25 பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறை சம்பந்தமாக பெரியதாக எந்த அறிவிப்பும் இல்லை. எந்த துறை தொடர்பான அறிவிப்பும் இல்லாவிடினும், குறைந்தப்பட்சம் இந்திய இரயில்வே துறை தொடர்பான அறிவிப்புகள் பொது பட்ஜெட்டில் கட்டயமாக இருக்கும். ஆனால், இந்த முறை இரயில்வே துறை தொடர்பான அறிவிப்புகளையும் பட்ஜெட்டில் பார்க்க முடியவில்லை. இருப்பினும், சாலை மேம்பாடுகள் குறித்த சில முக்கியமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. அவை என்னென்ன என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2024-25ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். 2019இல் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட நம் தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 7வது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலமாக முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முறியடித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 5 முறை முழு பட்ஜெட்டையும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்து இருந்தார். 2024-25 பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகள், சமூக நீதி, நகர்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருந்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆட்டோமொபைல் துறை தொடர்பாக எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியாக, பீகார் மாநிலத்தில் 3 புதிய அதிவேக சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. பீகாரில் ஏற்கனவே இரு விரைவுச் சாலை திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவை இல்லாமல், புதியதாக 3 திட்டங்கள் துவங்கப்பட உள்ளன. அதுமட்டுமின்றி, மேலும் பல சாலைகள் திட்டங்களும் பீகார் மாநிலத்திற்காக கொண்டுவரப்படுகின்றன.

அதில் ஒன்றாக, கங்கை ஆற்றின் மேல் இருவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக மொத்தம் சுமார் ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மேலும், பீகாரின் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதி உதவிகளையும் மத்திய அரசு உருவாக்கிக் கொடுக்க உள்ளதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக, பீகார் மாநிலத்தில் நிறைய விமான நிலையங்கள், மருத்து கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளன.
பீகார் மாநிலத்தில் தற்போதைக்கு வெறும் 2 சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே உள்ளன. தலைநகர் பாட்னாவில் ஒன்றும், காயாவில் ஒன்றும் உள்ளது. உள்நாட்டு விமான நிலையம் என்று பார்த்தால், தார்பாங்காவில் மட்டுமே ஒன்று உள்ளது. 'புர்வோதயா' என்கிற பெயரிலான திட்டத்தின் கீழ் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்கள் பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட உள்ளன.

பீகாரை போன்று, ஆந்திர பிரதேசம் மாநிலத்தை மேம்படுத்துவதிலும் மத்திய அரசு அடுத்த 1 வருடத்தில் தீவிரமாக ஈடுப்பட உள்ளதையும் 2024-25 பட்ஜெட்டின் மூலமாக அறிய முடிகிறது. ஆந்திராவில் சாலை மேம்பாடு உள்பட பல்வேறு திட்டங்களுக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நம் தமிழ்நாட்டிற்கென பெரியதாக எந்த திட்டமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றாலும், சென்னை - விசாகப்பட்டினம் இடையே அதிவிரைவு சாலை அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு நம் தமிழ் மக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.
இந்த அறிவிப்புகளுடன், 25 முக்கியமான கனிமங்களுக்கு சுங்க வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை உற்பத்தி செய்ய பயன்படும் லித்தியமும் அடங்குகிறது. இதனால், இவி பேட்டரி உற்பத்தி செலவு குறையும் என்பதினால், எலக்ட்ரிக் வாகனங்களின் விலையும் இதன் மூலமாக குறைவதற்கு வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமொபைல் துறைக்காக முக்கியமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது சற்று வருத்தம் அளிக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டிற்காகவும் பெரியதாக எந்த அறிவிப்பும் இல்லை. இருப்பினும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி செலவை குறைக்கும் திட்டம் உண்மையில் வரவேற்கத்தக்கது ஆகும். ஏனெனில், எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி செலவில் பேட்டரிகள் மிக முக்கியமானவைகளாக விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications









