சாலை விபத்துக்களில் அதிக உயிர்களை பறிகொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு.. அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள்
இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்கள் குறித்த அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகம் மிக மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்கள் குறித்த அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகம் மிக மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், சாலை விபத்துக்களின் காரணமாக நிகழும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் அதை உறுதி செய்கின்றன.

கடந்த 2014ம் ஆண்டு இந்திய சாலைகளில் ஏற்பட்ட விபத்துக்களின் காரணமாக 12,330 பாதசாரிகள் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கையானது 2017ம் ஆண்டில் 66 சதவீதம் அதிகரித்து 20,457ஆக உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 56 பாதசாரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்துக்களின் காரணமாக நாட்டிலேயே அதிக அளவிலான பாதசாரிகள் உயிரிழந்தது தமிழ்நாட்டில்தான். 2017ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் 3,507 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்திற்கு அடுத்தபடியாக அதிகப்படியான பாதசாரிகளை பறிகொடுத்திருப்பது மகாராஷ்டிர மாநிலம். அங்கு 2017ம் ஆண்டில் 1,831 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். இந்த வரிசையில் ஆந்திர மாநிலம் 3வது இடத்தில் உள்ளது. அங்கு 2017ம் ஆண்டில், 1,379 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே சைக்கிள் மற்றும் டூவீலர்களில் பயணிப்பவர்கள் உயிரிழப்பதும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்திய சாலைகளில் கடந்த 2017ம் ஆண்டு மட்டும், சைக்கிள்களில் பயணித்த 3,559 பேரும், டூவீலர்களில் பயணித்த 48,746 பேரும் விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதாவது 2017ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் சராசரியாக நாள்தோறும் சைக்கிள்களில் பயணித்த 10 பேரும், இரு சக்கர வாகனங்களில் பயணித்த 133 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பதை இந்த புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

நாட்டிலேயே சாலை விபத்துக்களின் காரணமாக அதிகப்படியான இரு சக்கர வாகன ஓட்டிகளை பறிகொடுக்கும் மாநிலமும் தமிழ்நாடுதான். இங்கு 2017ம் ஆண்டில் மட்டும் 6,329 இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேச மாநிலத்தில் 5,699 இரு சக்கர வாகன ஓட்டிகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,659 இரு சக்கர வாகன ஓட்டிகளும், 2017ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்துக்களில் சம்பந்தமே இல்லாமல் பாதிக்கப்படக்கூடியவர்களாக பாதசாரிகள் உள்ளனர். நாட்டின் முக்கியமான நகரங்களில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு என தனியாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நடைபாதைகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகின்றன. சில சமயங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து சாலையோர கடைகள் அமைக்கப்படுகின்றன. எனவே சாலைகளில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பாதசாரிகள் ஆளாக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம். இந்தியாவில் ஏபிஎஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் இதுதான்.


Click it and Unblock the Notifications