விமானத்தை நான்-ஸ்டாப்பா அதிகப்பட்சமா இவ்வளவு நேரத்திற்கு இயக்கலாமா!! பயணிகளின் நிலைமை தான் கொஞ்சம் கஷ்டம்!
அறிவியல் கூற்றுப்படி, தற்போதைய தொழிற்நுட்பங்களின் உதவியுடன் ஒரு விமானத்தை அதிகப்பட்சமாக எவ்வளவு தொலைவிற்கு இயக்க முடியும்? அதற்கு என்னென்ன காரணிகள் ஒத்துவர வேண்டும்? என்ற பலரது மனதில் இருக்கும் கேள்விகளுக்கான பதில்களை இனி விரிவாக பார்க்கலாம்.

நாளுக்கு நாள் விமான போக்குவரத்தின் பயன்பாடு நம்மிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் அருகில் உள்ள முக்கிய மாநகரத்திற்கு கூட விமானத்தில் செல்லவே பலரும் விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம், போக்குவரத்து நேரம் மிகவும் குறைவு.

உதாரணத்திற்கு சென்னையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இரயில் சென்றோமேயானால் 2 நாட்கள் வரையில் கூட ஆகும். ஆனால் அதுவே விமானத்தில் 2.30 மணிநேரத்தில் இருந்து 3 மணிநேரத்திற்கு உள்ளாக சென்றுவிடலாம். ஆனால், அதேநேரம் இரயில்களை போல விமானத்தாலும் பல மணிநேரங்களுக்கு இயங்க முடியும்.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், விமானத்தை எங்கேயும் நிறுத்தாமல் தொடர்ந்து 21 மணிநேரங்களுக்கு இயக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் தற்சமயம் அவ்வளவு நேரத்திற்கு எந்த விமானமும் இயக்கப்படுவதில்லை. அதிகப்பட்சமாக சிங்கப்பூரில் இருந்து நியூயார்க்கிற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று சென்று வருகிறது.

நான்-ஸ்டாப் விமானமான அது ஏறக்குறைய 18 மணிநேரங்கள் தொடர்ச்சியாக இயக்கப்படுகிறது. 15,353கிமீ என்பது அது கடக்கும் தொலைவாகும். இதேபோன்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து குவைத்தார் தலைநகர் டோகாவிற்கு குவைத்தார் ஏர்வேஸின் நான்-ஸ்டாப் விமானம் ஒன்று கிட்டத்தட்ட 17 மணிநேரங்கள் 45 நிமிடங்களுக்கு இயக்கப்படுகிறது.

ஆனால் விரைவில் இவற்றை காட்டிலும் நீண்ட தூர நான்-ஸ்டாப் விமானம் சிட்னி - லண்டன் இடையே இயக்கப்பட உள்ளது. இதன் மொத்த பயண நேரம் 21 மணிநேரங்கள் ஆகும். இது கடக்கவுள்ள தொலைவு கிட்டத்தட்ட 17 ஆயிரம் கிமீ-கள். இவ்வாறு 21 மணிநேரங்களுக்கு இயங்கும் அளவிற்கு விமானங்கள் தயாராகிவிட்டன என்றாலும், அவ்வளவு நேர விமான பயணத்திற்கு மனிதர்கள் தயாராகிவிட்டனரா என்ற கேள்வி மனதிற்குள் எழுகிறது.

ஏனெனில் ரயில்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் இரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஆனால் நான்-ஸ்டாப் விமானம் என்றால் ஒரு இடத்தில் இருந்து டேக்-ஆஃப் செய்யப்பட்டால், அடுத்து தான் செல்ல வேண்டிய இடத்தில் தான் லேண்டிங் ஆகும். அத்தகைய பயணம் சுமார் 21 மணிநேரங்களுக்கு இருந்தால், பயணிகளும், விமான பணிக்குழுவும் அவ்வளவு நேரத்திற்கு ஒரு மூடப்பட்ட பகுதிக்குள் அடைந்து கிடக்க வேண்டும்.

30,000 -40,000 அடி உயரத்தில் தரையில் இருப்பதை காட்டிலும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும் என்று படித்திருக்கிறோம். பயணிகளின் நிலை இதுவென்றால், விமானிகளின் நிலைமை அதனை காட்டிலும் கடினமானதாக இருக்கும். இவ்வாறு 21 மணிநேரங்களுக்கு, ஏறக்குறைய 17 ஆயிரம் கிமீ தொலைவிற்கு இயக்கப்படும் விமானத்திற்கு 4 விமானிகள் தேவை என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

இருவர் பணி செய்யும்போது, இருவர் தூங்கி கொள்ளலாம். இப்போதைக்கு 4 விமானிகளுடன் சிங்கப்பூர்-நியூயார்க் வரையில் இயங்கும் நான்-ஸ்டாப் விமானம் உள்பட மிகவும் சில விமான பயணங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், அப்போதும் ரிஸ்க் இல்லையா? என கேட்டால், இருக்கதான் செய்யும்.

தற்சமயம் நீண்ட தொலைவிற்கு இயங்கும் விமானங்களின் விமானிகளுக்கே பயணத்தை முடித்த பின் உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், 21 மணிநேர விமான சேவை பயன்பாட்டிற்கு வந்தால் அத்தகைய பாதிப்புகள் அதிகமாகக்கூடும் என கூறப்படுகிறது. 21 மணிநேரங்கள் என்பது விமானம் பயணிக்கும் நேரமாகும். அதுவே, விமானிகள் 23 மணிநேரம் வரையில் பணியாற்ற வேண்டியதாக இருக்கும்.

விமானங்களில் பயன்படுத்தப்படும் தொழிற்நுட்பங்கள் காலத்திற்கு ஏற்ப பரிணாம வளர்ச்சியை கண்டுவந்த போதிலும், மனிதனின் உடல் & உளவியல் சார்ந்த விஷயங்கள் வ்ரைட் சகோதரர்கள் காலத்தில் இருந்தே இன்னும் மாறாமல் உள்ளது. ஆதலால் நீண்ட தொலைத்தூர விமான பயணங்களை மேற்கொள்வதினால் பயணிகளின் உடல் மற்றும் மனதளவில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சில பல மாற்றங்களை ஏர்லைன் நிறுவனங்கள் கொண்டுவருவது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications








