கேரள பாஜக எம்பி சுரேஷ் கோபி இல்லாமல் இது நடந்திருக்காது - கோடிகளை வாரி இறைக்கும் மத்திய அரசு!!
சாலை உள்கட்டமைப்புகளின் தரம் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் வலிமை ஆகும். இதன் காரணமாகவே நாட்டின் நெடுஞ்சாலைகளையும், விரைவுச்சாலைகளையும் விரிவுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. சென்னை- பெங்களூர் விரைவுச்சாலை ஆனது தென்னிந்தியாவின் முக்கியமான வழித்தடமாக அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, தென்னிந்தியாவில் மேலும் பல நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கேரளாவில் மட்டும் 21 தேசிய நெடுஞ்சாலை பணிகள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
அக்டோபர் 1ஆம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிடுகிறார். அதில், கேரளாவில் சுமார் 747கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு மொத்தம் 21 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அதிகாரிகளுடனான கலந்துரையாடலுக்கு பிறகு இவ்வாறான ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறைக்கான துணை அமைச்சர் அஜய் தம்பா மற்றும் மத்திய சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான துணை அமைச்சரும், கேரளாவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினருமான நடிகர் சுரேஷ் கோபி மற்றும் மற்ற முக்கிய அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
ஏற்கனவே கூறியதுபோல், கேரளாவில் மட்டுமின்றி நாடு முழுவதுமே நெடுஞ்சாலைகளை விரிவுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ரூ.1,464 கோடி மதிப்பீட்டில் 105கிமீ தொலைவிற்கு 12 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
தற்போது கேரளாவில் செயல்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலை பணிகள் முக்கியமாக கேரளாவையும், தமிழ்நாட்டையும் சாலை வழியாக மேலும் இணைப்பதற்காக என மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விபத்துகளுக்கு காரணமாக சாலையில் இருக்கும் பிளாக் ஸ்பாட்களை குறைப்பதுடன், போக்குவரத்துக்கான செலவுகளை குறைப்பதும் முக்கிய நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புதிய நெடுஞ்சாலைகள் மூலமாக கேரளாவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இது கேரள மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் எனவும் கூறுகிறது. கேரளாவின் முக்கியமான சுற்றுலா தளங்களுள் ஒன்றான மூணாரை இன்னும் எளியதாக அணுகக்கூடிய வகையில் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

குறிப்பாக, மூணாருக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டு வரும் உயர்நிலை மேம்பாலத்தினால் மழைக்காலங்களில் 27கிமீ தொலைவிற்கு சுற்றிக் கொண்டு செல்வது தவிர்க்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவிக்கிறது. மேலும், கேரள- தமிழ்நாட்டு வணிக வழித்தடத்தில் மூணார் இடையேயான சாலைகளும் முக்கியமானதாக இருக்கின்றன. ஆதலால், மூணார் சாலைகளை வலுப்படுத்துவது கேரள தயாரிப்புகளின் ஏற்றுமதியையும் வலுப்படுத்தும் என மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.
கேரளாவில் 198கிமீ-க்கு செயல்படுத்தப்படும் 8 முக்கிய சாலை திட்டங்களுக்கான மதிப்பீடு ரூ.4,043 கோடி ஆகும். திருவனந்தபுரம் பைபாஸ், தலச்சேரி- மஹி பைபாஸ் மற்றும் குதிரன் சுரங்கப்பாதை உள்ளிட்டவை கேரளாவில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியமான நெடுஞ்சாலை பணிகள் ஆகும். மேலும், 3 முக்கியமான பசுமை தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் கேரளாவில் திட்டமிடப்பட்டு உள்ளது.
அரபிக்கடல் கடற்கரையை ஒட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்-66இல் 16 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான மொத்த மதிப்பீட்டு தொகை ரூ.5748 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையப்படுத்துதலுக்கான செலவில் 25%-ஐ வழங்குவதாக கேரள மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஆண்டில் ராஜ்ய சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போது தெரிவித்து இருந்தார் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு கேரள மாநிலத்தை சுற்றிலும் நிறைய தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை, இந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்றாற்போல், மலையாள நடிகர் சுரேஷ் கோபி மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக தமிழ்நாட்டிற்கு என்னென்ன நன்மைகள் வந்து சேர உள்ளன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








