பார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...
21 வயது இளம்பெண் ஒருவர் பகுதி நேர ஆட்டோ ஓட்டுனராக மாறியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 21 வயதேயான இளம்பெண் ஒருவர் பத்திரிக்கைகளில் தற்போது தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். தனது தந்தைக்கு உதவி செய்வதற்காக, பல்வேறு தடைகளை கடந்து அவர் ஆட்டோ ஓட்டுனராக உருவெடுத்திருப்பதுதான் இதற்கு காரணம். தற்போது ஆட்டோ ஓட்டுனராக உருவெடுத்திருக்கும் இளம்பெண்ணின் பெயர் பன்ஜித் கவுர்.

இவர் ஜம்மு-காஷ்மீரின் உதாம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பள்ளி பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்தார். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், அவர் வேலையிழந்தார். எனவே தந்தைக்கு உதவி செய்வதற்காக, பன்ஜித் கவுர் தற்போது ஆட்டோ ஓட்டுனராக மாறியுள்ளார்.

இதுகுறித்து பன்ஜித் கவுர் கூறுகையில், ''எனது தந்தை பள்ளி பேருந்து ஓட்டுனர் ஆவார். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் அவர் வேலையை இழந்தார். இதன்பின் அவர் ஆட்டோ ஓட்ட தொடங்கினார். ஆனால் அவரால் போதுமான அளவிற்கு வருமானம் ஈட்ட முடியவில்லை. எனவே நான் களமிறங்கி விட்டேன்'' என்றார்.

ஆட்டோ ஓட்டுனராக மாறியிருந்தாலும் பன்ஜித் கவுர் தொடர்ந்து படித்து கொண்டுதான் உள்ளார். பாதுகாப்பு படையில் இணைய வேண்டும் என்பது அவரது விருப்பம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் இரண்டாம் ஆண்டு மாணவி. பகுதி நேரமாகதான் தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறேன்'' என்றார்.

மேலும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு பெண்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் பன்ஜித் கவுர் கூறியுள்ளார். இதுகுறித்து பன்ஜித் கவுரின் தந்தை சர்தார் கோரக் சிங் கூறுகையில், ''பெண்களால் அனைத்து துறைகளிலும் நிபுணத்துவம் பெற முடியும். அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தொழிலை தேர்வு செய்யலாம்.

ஊரடங்கால் நான் வேலையிழந்த பிறகு, ஆட்டோ ஓட்ட கற்றுதரும்படி எனது மகள்கள் என்னிடம் கேட்டனர். நான் அவர்களுக்கு ஆதரவாக இருந்தேன்'' என்றார். இதுகுறித்து உதாம்பூர் உதவி வட்டார போக்குவரத்து அலுவலர் ரச்சனா ஷர்மா கூறுகையில், ''தனது குடும்பத்திற்காக ஆட்டோ ஓட்டும் பன்ஜித் கவுர் போன்ற பெண்கள் இந்த சமுதாயத்திற்கு ஒரு முன்னுதாரணம்.

நான் உதாம்பூருக்கு உதவி வட்டார போக்குவரத்து அலுவலராக இடமாறுதலாகி வந்தபோது, 'பெண்களாலும் வாகனம் ஓட்ட முடியும்' என்ற திட்டத்தை ஆரம்பித்தேன். இந்த திட்டத்தின் கீழ் தற்போது பல பெண்கள் வாகனம் ஓட்ட பழகியுள்ளனர்'' என்றார். குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு பெண்கள் அவ்வளவாக வாகனங்களை இயக்க மாட்டார்கள் என்பது உண்மைதான்.

ஆனால் தற்போது சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை இயக்கும் பெண்களை அதிகம் பார்க்க முடிகிறது. அத்துடன் பேருந்து போன்ற கனரக வாகனங்களையும் பெண்கள் அதிகமாக இயக்க தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை உண்மையிலேயே நல்லதொரு முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








