UAE-இல் 1 கிலோ தங்கத்தை பரிசாக தட்டிச்சென்ற இந்திய இளைஞர்!! இறந்த தந்தைக்கு அர்ப்பணிப்பதாக பெருமிதம்!
22 வயதான இளம் ஓட்டுனர் ஒருவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிர்ஷ்ட பம்பர் பரிசு கிடைத்துள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அக்ஷய் எரியாகடன் அரவிந்தன். 22 வயது இளைஞரான இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கேஸ் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். 2018இல் UAEக்கு வேலைக்காக சென்ற இவரை நம்பி தான் இவரது குடும்பமே உள்ளது.
இவரது குடும்பத்தில் அவரது தாய், சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி உள்ளிட்டோர் உள்ளனர். அக்ஷயின் தந்தை கடந்த 2020இல் புற்றுநோயால் காலமானார். குடும்பத்தை விட்டு, UAE-இல் ஓட்டுனராக பணியாற்றும் அக்ஷய் எரியாகடன் அரவிந்தனுக்கு மஹ்சூஸின் வாராந்திர அதிர்ஷ்ட குலுக்கலில் 1 கிலோ தங்கம் பரிசாக கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அக்ஷய்க்கு இத்தகைய பம்பர் பரிசு கிடைத்துள்ளது. அத்துடன் மிக முக்கிய நிகழ்வாக, தந்தை இறந்து முதல் ஆண்டு நிறைவு நாளில் இந்த அதிர்ஷ்ட குலுக்கல் பரிசை பெற்றிருப்பதாகவும், ஆதலால் இதனை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகவும் அக்ஷய் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அக்ஷய், "இத்தனை வருடங்களாக தனக்கு தூண் போல் இருந்த தந்தை இல்லாமல் வாழ்வது மிகவும் கடினமானதாக உள்ளது" என்றார். 1 கிலோ தங்கம் என்பது உண்மையில் அக்ஷய் போன்ற ஒரு சாமானிய நபருக்கு மிக பெரிய பரிசே ஆகும். இந்த பரிசு பொருளினால் தனது நிதி சுமைகளும், பொறுப்புகளும் வெகுவாக குறையும் என அக்ஷய் நம்பிக்கை கொண்டுள்ளார்.
1 கிலோ தங்கம் மெஹ்சூஸ் அதிர்ஷ்ட குலுக்கலில் கிடைக்க பெறும் மெகா பரிசு தொகையாகும். இந்த மெகா பரிசு மட்டுமின்றி, வேறு சில அதிர்ஷ்ட பரிசுகளையும் இந்தியாவை சேர்ந்த இம்ரான் மற்றும் ரிஜு என்ற இருவர் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் 1 மில்லியன் திர்ஹம் தொகையினை வென்றுள்ளனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.2,06,34,490 ஆகும்.

இதில், இம்ரான் ஐக்கிய அரபு அமீரகத்தில் விற்பனை திட்ட மேலதிகாரியாகவும், ரிஜு வளைகுடா பகுதியில் மோட்டார் மெக்கானிக்காகவும் பணியாற்றி வருகின்றனர். மெஹ்சூஸின் அதிர்ஷ்ட குலுக்கலில் 1 கிலோ தங்கம் மெகா பரிசாகவும், 1 மில்லியன் திர்ஹம் முதல் பரிசாகவும் விளங்குகிறது. இரண்டாவது பரிசாக 1 மில்லியன் திர்ஹம் கிட்டத்தட்ட 43 பேருக்கு தலா 23,255 திர்ஹம் (ரூ.4,79,855) என பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்கள் இவ்வாறு மெகா பரிசுகளை வெல்வது இது முதல்முறையல்ல. கடந்த காலங்களில், ரேஞ்ச் ரோவர் மற்றும் மெக்லாரன் 570எஸ் ஸ்பைடர் உள்ளிட்ட லக்சரி கார்களை வென்ற இந்தியர்களை பற்றியும் நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம். இதில் உதாரண நிகழ்வை பற்றி இனி தொடர்ந்து பார்ப்போம்.

ஐக்கிய அரபு அமீரக பதிவு கொள்கைக்கு இணங்க, காலாவதியான ஐடி பதிவுகளை கொண்ட வாடிக்கையாளர்கள் சேவை துண்டிப்பை தவிர்ப்பதற்காக தங்கள் மொபைல் எண்களின் பதிவை புதுப்பிக்குமாறு EITC எனப்படும் அமீரக ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டின் இறுதியில் அழைப்பு விடுத்தது. மேலும் இந்த மறு பதிவிற்கான காலக்கெடுவாக 2019 ஜனவரி 31ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டது.

இதனை ஏற்று UAE-இல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களை மறுபதிவு செய்ய, பல்விர் என்ற இந்தியாவை சேர்ந்த வாடிக்கையாளரும் மறுபதிவு செய்திருக்கிறார். இதில் 2019 ஜன.31ஆம் தேதிக்குள் ஐடி-யை புதுப்பித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டது. மேலும் இதில் முதல் பரிசாக விலைமிக்க மெக்லாரன் 570எஸ் ஸ்பைடர் என்ற ஸ்போர்ட்ஸ் கார் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த லக்சரி ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவை சேர்ந்த பல்விருக்கு கிடைத்தது. இவை எல்லாம், அதிர்ஷ்டத்தில் கிடைத்த பரிசுகள் என்றாலும், சில இந்தியர்கள் தங்களது திறமைகளால் ஏகப்பட்ட பரிசுகளை கோடி ரூபாய் மதிப்பில் பெற்றுள்ளனர். இவ்வாறு UAE நமது இந்தியர்களுக்கு எப்போதுமே பரிசு பொருட்களை அள்ளி தரும் வளம்பெற்ற நாடாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications








