ரோட்ல ஒரு பழைய வண்டி கூட கண்ணுல பட கூடாது! அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்! கொத்து கொத்தா தூக்க ஆரம்பிச்சுட்டாங்க
இந்தியாவில் நிலவி கொண்டுள்ள காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னைக்கு, வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணங்களாக உள்ளன. குறிப்பாக பழைய பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) வாகனங்கள்தான், காற்றின் தரத்தில் மிகவும் கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. ஆனால் வயதான பழைய வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. எனினும் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து கொண்டே வருவதால், பழைய வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது.
குறிப்பாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தற்போது காற்று மாசுபாடு பிரச்னை கையை மீறி சென்று கொண்டுள்ளது. டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா காலகட்டத்தை போல், பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறியுள்ளன.

டெல்லியின் ஒரு சில பகுதியில் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் (AQI - Air Quality Index) 500 என்ற அபாய கட்டத்தை கடந்து சென்று கொண்டுள்ளது. மிகவும் ஆரோக்கியமாக உள்ளவர்களை கூட இந்த காற்று மாசுபாடு பாதித்து விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே உடனடியாக காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதன் ஒரு பகுதியாக டெல்லி அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி கடந்த அக்டோபர் 1ம் தேதியில் இருந்து நவம்பர் 15ம் தேதி வரை, 2,234 வயதான பழைய வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இயக்குவதற்கான வயது வரம்பை கடந்து விட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 10 வருடங்களை கடந்தும் பயன்பாட்டில் இருந்த டீசலில் இயங்க கூடிய 260 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 15 வருடங்களை கடந்தும் பயன்பாட்டில் இருந்த 1,156 பெட்ரோல் டூவீலர்கள், 818 பெட்ரோல் மூன்று மற்றும் 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆக மொத்தம் 2,234 பழைய வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்து, டெல்லி மாநில அரசு அதிரடி காட்டியுள்ளது. இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் வரும் காலங்களிலும் தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை எல்லாம் தவிர, காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வர இன்னும் பல்வேறு நடவடிக்கைகளையும் டெல்லி அரசு எடுத்து வருகிறது.
டெல்லி சாலைகளில் தற்போது பிஎஸ் 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் 4 டீசல் வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி இயக்கியது மற்றும் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் சுமார் 5,400 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 6 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் காற்று மாசுபாடு பிரச்னை கட்டுக்குள் வராவிட்டால், விதிமுறைகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீதான நடவடிக்கைகள் இன்னும் கடுமையாக்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதால் மட்டும் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை குறைந்து விடுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இது குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றத்தை வழங்கலாம். எனவே அரசின் நடவடிக்கைகளுக்கு வாகன உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்.


Click it and Unblock the Notifications








