ஒரே நாளில் இத்தனை பேர் மீது வழக்கா!! சென்னையில் வாகன ஓட்டிகளை விரட்டி விரட்டி பிடிக்கும் போலீஸார்!
சென்னையில் விதிகளை மீறி நம்பர் ப்ளேட் வைத்துள்ளவர் சுமார் 2343 பேர் மீது நேற்று (அக்.26) ஒரே நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதியும், முறைக்கேடுகளை தவிர்க்கவும் மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் பல்வேறு விதமான புதிய விதிகளை நாட்டில் அமல்படுத்தியும், செயல்படுத்தியும் வருகின்றன. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான விதிமுறைகளில் அரசு சற்று கூடுதல் கவனத்துடனே செயல்படுகிறது.

ஏனெனில் விபத்தில் இருந்து பயணிகளை முழுமையாக பாதுகாக்கக்கூடிய 2-வீலர்ஸ் எதுவும் தற்போதைக்கு விற்பனையில் இல்லை. அதுமட்டுமில்லாமல் நான்கு சக்கர வாகனங்களை காட்டிலும் இருசக்கர வாகனங்கள் திருடு போவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு திருடு போகும் இருசக்கர வாகனங்கள் தான் பெரும்பாலும் திருட்டு, கொலை உள்ளிட்ட சம்பவங்களில் பயன்படுத்தப்படுவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஒவ்வொரு வாகனங்களையும் அதன் உரிமையாளர்களுடன் அடையாளப்படுத்துவது முக்கியமாகும். இந்த விஷயத்தில் வாகனத்தின் முன் & பின்பக்கத்தில் பொருத்தப்படும் நம்பர் ப்ளேட்கள் முக்கியமான பங்காற்றுகின்றன. இதன் மூலம், குற்ற சம்பவங்களில் வாகனத்தின் உரிமையாளர் அல்லாமல் வேறொருவர் ஈடுப்பட்டு இருந்தாலும் அவரை போலீஸாரால் நெருங்க முடிகிறது.

ஆனால் இந்த சாலைவிதியினை முறையாக அனைத்து வாகன ஓட்டிகளும் பின்பற்றுகிறார்களா என்றால், இல்லை என்பது தான் பதில். ஏனெனில் நம் மாநில தலைநகர் சென்னையில் நேற்று (அக்.26) ஒரே நாளில் கிட்டத்தட்ட 2,343 பேர் மீது வாகன நம்பர் ப்ளேட் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 2,343 பேரில், மோட்டார் வாகன சட்டத்தின்படி நம்பர் ப்ளேட் வைக்காதவர்கள், அதில் பிற வசனங்கள், படங்கள், அனுமதிக்கப்படாத சின்னங்கள் வைத்திருந்தவர்கள் அடங்குவர். வாகனங்களையும், அவற்றின் வாகன ஓட்டிகளையும் தீவிரமாக கண்காணிக்க சென்னை போலீஸார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று துவங்கி அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தணிக்கை நாளை அக்.28ஆம் தேதியில் தான் முடிவடையும். எனவே சென்னையில் வசிப்போர் சாலையில் வாகனத்தில் கிளம்புவதற்கு முன், எடுத்து செல்ல வேண்டியவையும், அணிந்து செல்ல வேண்டியவையும் சரியாக உள்ளனவா என்பதை ஒருமுறை சரி பார்த்து கொள்ளுங்கள்.

இல்லையென்றால் வீணாக அபராதத்திற்கு உள்ளாக நேரிடும். நம்பர்-ப்ளேட் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட இந்த 2,343 பேருக்கு எந்த அளவில் அபராதங்கள் விதிக்கப்பட்டன என்பது குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை. முன்னதாக சமீபத்தில், இருசக்கர வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் புதிய விதியினை ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டு இருந்தது.

குறிப்பாக இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாக இந்த புதிய விதி விளங்குகிறது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், நான்கு அல்லது அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்தும்போது அதிகப்பட்சமாகவே மணிக்கு 40கிமீ வேகத்தில் தான் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் 4 (அ) அதற்கு கீழ் வயதுடைய சிறுவர் & சிறுமியர் கூட ஹெட்ல்மெட் கட்டாயம் அணிந்திருத்தால் வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டி மற்றும் பயணி என இருவரும் ஹெல்மெட் அணித்திருத்தல் வேண்டும் என சட்டம் கூறுகிறது. மேலும் சிறுவர்/ சிறுமியர் இருசக்கர வாகனத்துடன் இணைத்து கட்டப்பட்டிருப்ப்தையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டுமாம்.

சிறுவர்கள் அல்லது குழந்தைகளை உடன் அழைத்து செல்வதற்கு ஆக்ஸஸரீகள் தற்சமயம் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. முன்னதாக இதேபோன்று கேரள அரசாங்கம் 2-வீலர்ஸில் பயணிக்கும்போது குடை பயன்படுத்தக் கூடாது என்ற புதிய விதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. சரியாக மழைக்காலம் வெளுத்துவாங்க துவங்கி இருக்கும் தற்போதைய சூழலில் இந்த புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளதால், இது கேரள வாகன ஓட்டிகள் இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயணத்தின்போது குடை பிடித்தப்படி செல்வது காற்றின் வேகம் மற்றும் மழையின் அளவு உள்ளிட்டவற்றை பொறுத்து சில சமயங்களில் விபத்திலும் சென்று முடியலாம். இதனை கருத்தில் கொண்டே கேரள அரசாங்கம் இவ்வாறான விதியினை கொண்டுவந்துள்ளது. இதை எத்தனை பேர் முறையாக பின்பற்றவுள்ளனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நம் தமிழகத்திலும் இவ்வாறான சட்டங்கள் தேவையா என்பதை கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








