சாதி கருத்துக்களை வாகனங்களில் எழுத இனி பயப்படணும்... போலீஸ் காட்டிய அதிரடி என்னவென்று தெரியுமா?
சாதிய ரீதியிலான கருத்துக்களை வாகனங்களில் வெளிப்படுத்துவோருக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார், பைக் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களின் நம்பர் பிளேட்களிலும் பதிவு எண் மிக தெளிவாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை இந்தியாவில் அமலில் உள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் செக்ஸன் 177 மற்றும் 1989 மோட்டார் வாகன சட்டத்தின் விதிகள் 50 மற்றும் 51 ஆகியவற்றின்படி, நம்பர் பிளேட்டில் பதிவு எண் தவிர வேறு எதுவும் இருக்க கூடாது.

ஆனால் இந்தியாவில் பெரும்பாலானோர் இந்த விதிமுறையை பின்பற்றுவது கிடையாது. தங்கள் விருப்பம் போல் நம்பர் பிளேட்டை பல்வேறு வகைகளில் டிசைன் செய்து கொள்கின்றனர். ஒரு சில வாகனங்களின் நம்பர் பிளேட்களில், Dad's Gift என்பது போன்ற வாசகங்களை பார்க்க முடிகிறது. இன்னும் சிலர் தங்களுக்கு விருப்பமான நடிகர்களின் படங்களை நம்பர் பிளேட்களில் இடம்பெற செய்கின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களையும் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் காண முடிகிறது. விதிமுறைகள்படி இவை அனைத்தும் தவறு. இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் சாதிய ரீதியிலான கருத்துக்களை வாகனங்களின் நம்பர் பிளேட் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர். இத்தகைய வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களில், நம்பர் பிளேட் விதிகளை மீறிய வாகனங்களுக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் 2 நாள் சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது விதிகளை மீறிய சுமார் 1,500 வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை தரப்பில் செல்லான்கள் வழங்கப்பட்டன.

சாதிய ரீதியிலான கருத்துக்கள் மற்றும் தேவையற்ற வாசகங்களை நம்பர் பிளேட்டில் இடம்பெற செய்திருந்த வாகன ஓட்டிகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சூழலில் நொய்டா போலீசார் தற்போது மீண்டும் நம்பர் பிளேட் விதிமுறை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இம்முறையும் சாதிய ரீதியிலான கருத்துக்கள் மற்றும் தேவையில்லாத வாசகங்கள் இருந்த வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியோரை பிடிக்க தீபாவளி பண்டிகைக்கு சற்று முன்னதாக இந்த சிறப்பு வாகன தணிக்கையை போலீசார் நடத்தியுள்ளனர். நம்பர் பிளேட் மட்டுமல்லாது விண்டு ஷீல்டில் வாசகங்கள் இருந்த வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நொய்டா போலீஸின் தலைவர் வைபவ் சர்மா கூறுகையில், ''வாகனங்களின் நம்பர் பிளேட்களில் சாதி தொடர்பான வாசகங்களை எழுதுவதை ஊக்கப்படுத்த கூடாது. இத்தகைய வாசகங்கள் வாகன ஓட்டிகள் மத்தியில் பாதுகாப்பின்மை போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. எனவே அத்தகை வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார்.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, கார் டிரைவர்கள், பைக் ரைடர்கள் 250க்கும் மேற்பட்டோருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில், கடந்த வெள்ளி கிழமை இந்த சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. வாகனங்களில் சாதிய கருத்துக்களை வெளிப்படுத்திய 113 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில், 100 பேர் மீது நகர பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர தேவையில்லாத வாசகங்களை எழுதிய 91 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், 78 பேர் நகர பகுதியில் பிடிபட்டுள்ளனர். மேலும் நம்பர் பிளேட்டில் எண்களை எழுத்துக்கள் போல் மாற்றிய 50 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 250க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முதல் முறை சிக்குபவர்களுக்கு போலீசார் 300 ரூபாயை அபராதமாக விதித்து வருகின்றனர். அதே சமயத்தில் 2வது முறையாக சிக்கினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை வரும் நாட்களிலும் தொடர்ந்து நடைபெறும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








