தேர்தலை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு மரங்களை வெட்ட தமிழக அரசு தாராளம்-மத்திய அமைச்சர் பாராட்டு!
லோக்சபா தேர்தல் நெருங்குவதால் தேசிய நெடுஞ்சாலை பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட காரணங்களால், நெடுஞ்சாலை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால் தேசிய நெடுஞ்சாலை பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட காரணங்களால், தேசிய நெடுஞ்சாலை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த பிரச்னைகளை களைய தமிழக அரசு நல்ல முறையில் உதவி வருவதாக மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் தற்போது 20 மாநிலங்களில் சுமார் 700 தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், குறிப்பிட்ட 280 தேசிய நெடுஞ்சாலை பணிகளை மட்டும் முன்கூட்டியே நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த 280 தேசிய நெடுஞ்சாலை பணிகளில், 127 திட்டங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் (NHAI), 153 திட்டங்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகமும் மேற்கொண்டு வருகின்றன.

2019ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள்தான், இந்த 280 தேசிய நெடுஞ்சாலை பணிகளையும் முடிப்பதாக இருந்தது. ஆனால் 2019 மார்ச் மாதத்திற்குள்ளாகவே இந்த 280 பணிகளையும் முடிக்க வேண்டும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது உத்தரவிட்டுள்ளார்.

அதாவது 2 மாதத்திற்கு முன்னதாகவே, 280 நெடுஞ்சாலை திட்டங்களையும் நிறைவு செய்ய வேண்டும் எனக்கூறி, பணிகளை முடுக்கி விட்டுள்ளார் அமைச்சர் நிதின் கட்கரி. அமைச்சர் பிறப்பித்த உத்தரவு காரணமாக, 280 நெடுஞ்சாலை பணிகளும் சூடுபிடித்துள்ளன.

2019 லோக்சபா தேர்தல்தலை தவிர இதற்கு வேறு ஒன்றும் காரணமாக இருக்க முடியாது. மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. மத்திய அரசு விரைவில் தனது 5 ஆண்டு பதவி காலத்தை நிறைவு செய்ய உள்ளது.

எனவே வரும் 2019ம் ஆண்டு மே மாதம், லோக்சபா தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கு தற்போதில் இருந்தே பாஜக தயாராகி வருகிறது. இதனால்தான் 280 தேசிய நெடுஞ்சாலை பணிகளையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முடுக்கி விட்டுள்ளார்.

தேர்தல் மே மாதம்தான் என்றாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாள் முதலே நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதாவது ஏப்ரல் மாதமே, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான் மார்ச் மாதம் இலக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ''லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நன்னடத்தை விதிகள் அமலாவதற்கு முன்பாகவே, இந்த 280 நெடுஞ்சாலை பணிகளையும் நிறைவு செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன'' என்றார்.

இதுதவிர மேலும் 100 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் வரும் டிசம்பம் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். அத்துடன் 2018-19ம் ஆண்டில் NHAI வைத்திருந்த கட்டுமான இலக்கானது 5,058 கிலோ மீட்டர்களில் இருந்து 6,000 கிலோ மீட்டர்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் தற்போது நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகள் தொடர்பான விரிவான ஆய்வு பணிகள் நடைபெற்றது. அதற்கு பின்புதான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த தகவல்களை எல்லாம் தெரிவித்தார்.

எனினும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் தாமதம் ஆவதற்கு, சில காரணங்களையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பட்டியலிட்டார். நிலம் கையகப்படுத்துதல், மரங்களை வெட்டுதல், சுற்றுச்சூழல் அனுமதி ஆகிய முக்கிய காரணங்களால்தான் தேசிய நெடுஞ்சாலை பணிகள் தாமதம் ஆகிறதாம்.

ஆனால் இந்த பிரச்னைகளை எல்லாம் களைந்து, தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மஹாராஸ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உதவி செய்துள்ளன. எனவே இந்த மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

எனினும் இதுபோன்ற விஷயங்களில், பீகார் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக இயற்கை வளங்களை அழிப்பதாக மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசுகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பசுமை வழிச்சாலை திட்டமானது, இன்று தமிழகத்தின் மிகப்பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

பசுமை வழிச்சாலை அல்லது 8 வழிச்சாலை என அழைக்கப்படும் இந்த திட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் தமிழக அரசுக்கு, மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications