சாலை விபத்துக்களால் இந்தியாவின் ஜிடிபி-யில் எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது தெரியுமா? மத்திய அமைச்சர் கவலை
சாலை விபத்துக்கள் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் இழப்பு குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகில் சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்களில், இந்தியாவின் பங்கு 11 சதவீதமாக உள்ளதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி கவலை தெரிவித்துள்ளார். மேலும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் பலனாக சாலை விபத்துக்கள் கணிசமாக குறைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலக வங்கி ஏற்பாடு செய்திருந்த சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி ஒன்றில், நிதின் கட்காரி பங்கேற்றார். அப்போது சாலை விபத்துக்கள் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.14 சதவீதம் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன.

இதில், சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். மேலும் சுமார் 3 லட்சம் பேர் படுகாயமடைகின்றனர். இதுகுறித்து நிதின் கட்காரி கூறுகையில், உலகளாவிய சாலை விபத்து மரணங்களில் 11 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது. சாலை விபத்துக்கள் காரணமாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.14 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது'' என்றார்.
புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? விரிவாக அலசும் வீடியோ!
அத்துடன் சாலை விபத்துக்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக ஏராளமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் நிதின் கட்காரி குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்தியாவின் சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு சதவீதம் ஏற்கனவே 20 சதவீதம் வரை குறைந்து விட்டது. இதற்காக நாங்கள் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறோம்'' என்றார்.

மேலும் அரசாங்கம் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் காரணமாக சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு விகிதம் இன்னும் குறையும் என தான் நம்புவதாகவும் நிதின் கட்காரி கூறியுள்ளார். அத்துடன் இந்தியாவில் சாலை விபத்துக்களை குறைப்பதில், திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கணிசமான பங்களிப்பை செய்துள்ளதாகவும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு கடுமையான அபராதங்களை விதிப்பதற்கான ஏற்பாடுகள் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. அபராத தொகைகள் மிகவும் கடுமையாக உள்ளதால் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு வாகன ஓட்டிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆனால் அந்த எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாமல், இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அபராதங்களை கடுமையாக்குவது, சாலைகளின் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுடன், விபத்துக்களை குறைப்பதற்காக இன்னும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதில், வாகனங்களில் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை கட்டாயமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதன்படி ஏபிஎஸ், ஏர்பேக் போன்ற முக்கியமான பாதுகாப்பு வசதிகள் வாகனங்களில் இருக்க வேண்டும் என்பது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை கட்டாயமாக்குவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








