வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி பணத்தை 'ஸ்வாகா' செய்யும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்...
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பணத்தை 'ஸ்வாகா' செய்து வருகின்றனர்.

இன்றைய சூழலில் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் அனைவருக்கும் அவசியமான ஒன்று. வாகனம் இல்லாமல் ஒருவரால் தனது அன்றாட பணிகளை செய்து முடிக்கவே முடியாது. அந்த அளவிற்கு வாகனங்கள் நம் வாழ்வில் ஒன்றாக கலந்து விட்டன. ஆனால் வாகனங்கள் இயங்க தேவையான பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை வாகன ஓட்டிகளை தலை சுற்ற வைக்கிறது.

இதுபோதாதென்று பெட்ரோல் பங்க்குகளில் நடைபெறும் மோசடிகளின் மூலமாக வேறு வாகன ஓட்டிகளின் பணம் 'ஸ்வாகா' செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

மீட்டர் முறைகேடு
இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் நடந்து வரும் ஒரு பொதுவான மோசடி என இதனை கூறலாம். ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் மீட்டரில் தில்லுமுல்லு செய்கின்றனர். மீட்டரில் முறைகேடு செய்ததாக கடந்த காலங்களில் பல்வேறு பெட்ரோல் பங்க்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பங்க்குகளில், வாகன ஓட்டிகளுக்கு உரிய அளவில் பெட்ரோல், டீசல் வினியோக்கப்படுவதில்லை என்பது போன்ற புகார்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. முறைகேடுகளின் மூலம் குறைவான அளவில் எரிபொருள் வினியோகிக்கும் பங்க்குகள் மீது அரசு அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் ஊழியர்களின் 'டபுள் செக்கிங்'
உங்கள் வாகனத்திற்கு எவ்வளவு ரூபாய்க்கு எரிபொருள் நிரப்ப வேண்டும்? என பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உங்களிடம் கேட்பார்கள். நீங்கள் 1,000 ரூபாய்க்கு நிரப்பும்படி கூறுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். உடனே பெட்ரோல் பங்க் ஊழியர் எரிபொருள் நிரப்ப தொடங்குவார். ஆனால் மீட்டர் 200 ரூபாயை காட்டியதும் அவர் பெட்ரோல் நிரப்புவதை நிறுத்தி விடுவார்.

இதன்பின் எனக்கு சரியாக கேட்கவில்லை. எவ்வளவு ரூபாய்க்கு நிரப்பும்படி கூறினீர்கள்? என்று மீண்டும் ஒரு முறை அவர் உங்களிடம் கேட்பார். இதற்கு நீங்கள் மீண்டும் 1,000 ரூபாய்க்கு என பதில் அளிப்பீர்கள். அந்த சமயத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீட்டரை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு ரீசெட் செய்த பின் எஞ்சிய 800 ரூபாய்க்கு உங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும்.

ஆனால் அவர் மீட்டரை பூஜ்ஜியத்திற்கு ரீசெட் செய்யாமல், மீண்டும் 200 ரூபாயில் இருந்தே எரிபொருள் நிரப்ப தொடங்குவார். மீட்டர் 800 ரூபாய்க்கு வந்ததும் நிறுத்தி விடுவார். எனவே எஞ்சிய 800 ரூபாய்க்கும் எரிபொருள் நிரப்பி விட்டதாக நீங்களும் நினைத்து கொள்வீர்கள். ஆனால் உண்மையில் உங்களுக்கு ஒட்டுமொத்தமாகவே வெறும் 800 ரூபாய்க்கு மட்டுமே எரிபொருள் நிரப்பியிருப்பார்கள்.

ஆனால் உங்களிடம் 1,000 ரூபாயை வசூலித்து கொள்வார்கள். பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உங்கள் கவனம் திசை திரும்பும் நேரத்தை பயன்படுத்தி கொண்டு, மீட்டரை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு ரீசெட் செய்யாமல் விட்டு விடுவார்கள். எனவே இதுபோன்ற சூழல்களில், நீங்கள் கவனமாக இருந்தால் மட்டுமே ஏமாறாமல் தடுக்க முடியும்.

இதுதவிர எரிபொருளில் கலப்படம் செய்வது போன்ற வழிமுறைகள் மூலமாகவும் வாகன ஓட்டிகள் எளிதாக ஏமாற்றப்படுகின்றனர். இதுபோன்று மோசடி நடைபெறும் பெட்ரோல் பங்க்குகளை கண்டறிந்து, அங்கு எரிபொருள் நிரப்புவதை தவிர்த்து விடுங்கள். இது உங்களுடைய பர்சுக்கு மட்டுமல்லாது, உங்கள் வாகனத்திற்கும் நல்லது.

பெட்ரோல் பங்க்குகளில் நடைபெறும் இதுபோன்ற மோசடிகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரியப்படுத்துங்கள். நமது மற்ற வாசகர்கள் ஏமாறாமல் இருக்க உங்கள் அனுபவம் உதவக்கூடும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








