3 Second Rule in Highway-ல ஃபாலோ பண்ணுங்க! எமனே வந்தாலும் உங்கள ஒன்னும் பண்ண முடியாது!
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் தரமான மாறி வருகின்றன. இதனால் வாகனங்கள் எல்லாம் வேகமாகச் செல்கிறது. எக்ஸ்பிரஸ் சாலைகளில் எல்லாம் அதிகபட்சம் 120 கி.மீ வேகம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியச் சாலைகளில் அதுவும் குறிப்பாகத் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விபத்தில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாகப் பயணிப்பதால் விபத்து ஏற்பட்டால் மிகப்பெரிய அளவிற்குச் சேதம் ஏற்படுகிறது.

இந்த விபத்துக்களைத் தடுக்க கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல பாதுகாப்பு அம்சங்களை கார்களில் அறிமுகப்படுத்தி வருகின்றன. இதனால் விபத்து ஏற்பட முக்கியமான காரணங்கள் நிகழும் போது விபத்திற்கு முன்னதாகவே டிரைவரை எச்சரிக்கிறது. இதனால் விபத்துக்களைத் தடுக்க முடியும் என்றாலும் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.
இந்த விபத்துக்களைத் தவிர்க்க நாம் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விதி ஒன்று இருக்கிறது. இந்த விதி சட்டப்பூர்வமாக எல்லாம் இல்லை. ஆனால் இந்த விதியை பின்பற்றுவது மூலம் நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என உலக அளவில் நம்பப்படுகிறது.

உலகில் பல நாடுகளில் இது குறித்த முறையான விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற சில நாடுகளில் இந்த விதி குறித்த விழிப்புணர்வு இல்லை. இந்த விதியை நெடுஞ்சாலைகளில் எவ்வளவு வேகமாகப் பயணிக்கும் போதும் வாகன ஓட்டிகள் பின்பற்றினால் பெரும்பாலான விபத்துக்களைத் தவிர்த்து விட முடியும்.
3 செகண்ட் ரூல்ஸ்!: உலகம் முழுவதும் உள்ள எழுதப்படாத விதிப்படி நீங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது உங்கள் வாகனத்திற்குள் உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்திற்கு இடையே 3 செகண்ட் இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பெரும்பாலான விபத்துக்களைத் தவிர்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.

அது என்ன 3 செகண்ட் இடைவெளி என்றால் உங்களுக்கு முன்பு செல்லும் வாகனம் திடீரென பிரேக் அடித்து நிறுத்தினால் கூட உங்கள் வாகனம் அந்த வாகனத்தின் மீது மோத 3 நொடியாவது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் . அந்த அளவிற்கு நீங்கள் உங்கள் வாகனத்தை முன்பக்க வாகனத்திலிருந்து சற்று பின்னால் ஓட்டி வர வேண்டும்.
இந்த இடைவெளி என்பது வேகத்தைப் பொருத்து மாறுபடும். உதாரணமாக நீங்கள் 100 கி.மீ வேகத்தில் வருகிறீர்கள் என்றால் உங்கள் வாகனம் நொடிக்கு 20 மீட்டர் நகர்கிறது என்று அர்த்தம் அப்படி என்றால் நீங்கள் 100 கி.மீ வேகத்தில் செல்லும்போது உங்களுக்கும் உங்களுக்கு முன்பு செல்லும் வாகனத்திற்கும் குறைந்தது 60 மீட்டர் இடைவெளியாவது இருக்கவேண்டும்.
இதுவே நீங்கள் 50 கி.மீ வேகத்தில் செல்கிறீர்கள் என்றால் நொடிக்கு 10 மீட்டர் தான் செல்வீர்கள். அப்படி என்றால் 30 மீட்டர் இடைவெளி வேண்டும். நெடுஞ்சாலைகள் எதிரில் வாகனங்கள் வராது.
அதனால் விபத்து பெரும்பாலும் முன்பு அல்லது பின்பக்கம் வரும் வாகனங்களால் தான் நடைபெறும். அதனால் இந்த விதியை ஒவ்வொரு வாகன ஓட்டியும் பயன்படுத்தினால் இதைத் தடுக்க முடியும்.
முன்பக்கம் செல்லும் வாகனம் திடீரென பிரேக்பிடித்து நிறுத்தினால் கூட ,நீங்கள் உங்கள் வாகனத்தை நிறுத்த 3 நொடி கிடைக்கும். இதனால் வாகனம் விபத்தில் சிக்காமல் பாதுகாக்கப்படும். இந்த 3 செகண்ட் விதியென்பது சாதாரண கார்களுக்கானது தான். எஸ்யூவி ரக கார்களில் இதை 4 செகண்ட் விதியாகப் பின்பற்ற வேண்டும்.
எஸ்யூவி ரக கார்கள் அளவில் பெரியது என்பதால் இந்த விதி, அதே போல லாரி அல்லது டிரக்களில் பயணிக்கிறீர்கள் என்றால் நீங்கள் 6 நொடி ரூல்ஸை பின்பற்ற வேண்டும். லாரிகள் லோடு உடன் இருக்கும் போது பிரேக் திறன் குறைவாகத் தான் இருக்கும். இதனால் விபத்துக்களைத் தவிர்க்க 6 செண்ட் ரூல்ஸை பின்பற்றினால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
இந்திய நெடுஞ்சாலைகளில் பெரும் 80-100 கி.மீ வேகத்தில் பயணிப்பது தான் சிறந்தது. எக்ஸ்பிரஸ் சாலைகளில் 120 கி.மீ வேகம் வரை பயணிக்கலாம் என்றாலும் பாதுகாப்பான பயணம் வேண்டும் என்றால் 100 கி.மீ வேகத்திற்குள் மட்டும் பயணம் செய்யுங்கள் பாதுகாப்பாக இருக்கும் சிலர் 150 கி.மீ வேகத்தில் கூட பயணிக்கிறார்கள். இது சட்டப்படி தவறானது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 3 செகண்ட் ரூல்ஸ் பற்றி இந்தியாவில் போதிய விழிப்புணர்வு இல்லை. இந்த விதியை ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் பின்பற்றினால் நெடுஞ்சாலைகளில் விபத்துகள் குறையும். ஆனால் இது டிராஃபிக் குறைந்த அதிக வேகத்தில் செல்லக்கூடிய நேரத்தில் மட்டும் தான் பம்பர் டூ பம்பர் டிராபிக் இருக்கும் சாலைகளில் இதைப் பின்பற்ற முடியாது.


Click it and Unblock the Notifications









