ஸ்கெட்ச் போட்டுடாங்க! இனி கொஞ்சம் ஏமாந்தா கூட வண்டி போயிரும்! திடீர்னு சாட்டையை எடுத்த போலீஸ்!
இந்தியாவில் வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து விதிமுறைகளை (Traffic Rules) அலட்சியம் செய்கின்றனர். தங்கள் இஷ்டத்திற்கு வாகனங்களை ஓட்டுவதுடன், கண்ட இடங்களில் எல்லாம் வாகனங்களையும் நிறுத்து வருகின்றனர். குறிப்பாக நடைபாதைகளில் (Footpaths) கூட ஒரு சிலர் தங்கள் வாகனங்களை 'பார்க்கிங்' செய்கின்றனர்.
நடைபாதைகள் என்பவை, சாலையின் இரு புறங்களிலும், பாதசாரிகள் நடப்பதற்காக அமைக்கப்படுகின்றன. ஆனால் அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பாதசாரிகள் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய சூழல் இதனால் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சாலை விபத்துக்களும் நிகழ்ந்து வருகின்றன. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில்தான் இந்த பிரச்னை தற்போது மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

முன்பெல்லாம் விதிமுறைகளை மீறி, 'நோ பார்க்கிங்' இடங்களிலும், நடைபாதைகளிலும் நிறுத்தப்படும் வாகனங்களை, போக்குவரத்து காவல் துறையினர் 'டோ' (Tow) செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விடுவார்கள். கயிறு அல்லது சங்கிலியை கட்டி மற்றொரு வாகனத்தின் உதவியுடன் ஒரு வாகனத்தை இழுத்து செல்வதுதான் 'டோ' எனப்படுகிறது. பஞ்சர் அல்லது ரிப்பேர் ஆன வாகனங்களை 'டோ' செய்து கொண்டு செல்வதை நீங்கள் சாலைகளில் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் விதிமுறைகளை மீறும் வாகனங்களை இப்படி 'டோ' செய்து கொண்டு செல்வதை பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினர் தற்போது தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக பெங்களூர் சாலைகளில் வாகனங்கள் இஷ்டத்திற்கு நிறுத்தப்படுகிறது. அங்கு நிறைய நடைபாதைகள் தற்போது வாகன நிறுத்துமிடங்களாக மாறி விட்டன. எனவே நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
வாகனங்களை 'டோ' செய்வது தொடர்பான புதிய கொள்கை உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய கொள்கை அறிமுகம் செய்யப்படும் வரை, நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வெறும் அறிவிப்புடன் நிற்காமல், நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பணிகளையும் பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினர் அதிரடியாக தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக ஐபிசி (IPC - Indian Penal Code) செக்ஸன் 283-ன் கீழ் தற்போது வரை 350க்கும் மேற்பட்ட வழக்குகளை பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். அத்துடன் நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கும், பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் உத்தரவிற்கு பிறகுதான், வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே தற்போது கண்ட கண்ட இடங்களில் எல்லாம் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக அவர்கள் சாட்டையை சுழற்ற தொடங்கியுள்ளனர். சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகள் மத்தியில், பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதன் காரணமாக சாலைகளில் தேவையில்லாமல் நெரிசல் ஏற்படுவதும், விபத்துக்கள் நிகழ்வதும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் நகரை போலவே, இந்தியாவின் மற்ற நகரங்களிலும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்ய கூடியவர்கள் மீதும் காவல் துறையினரின் நடவடிக்கை பாய வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த நேரத்தில் எழ தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








