அதிர்ச்சி சம்பவம்... பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு காரை காவல் துறை அதிகாரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?
பறிமுதல் செய்யப்பட்ட காரை விற்பனை செய்த 4 காவல் துறை அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலம் மங்களூரில், காவல் துறையை சேர்ந்த 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரான இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கபல் ராஜ் ஆகியோர், ஒரு மோசடி வழக்கு தொடர்பான விசாரணையின்போது, விலை உயர்ந்த சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக மூன்று சொகுசு கார்களை அவர்கள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதில் ஒன்றை அவர்கள் விற்பனை செய்து விட்டனர். மோசடி வழக்கு தொடர்பான விசாரணையின்போது, கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர்களான டாமி மேத்யூ மற்றும் ராஜன் ஆகியோரிடம் இருந்து, சொகுசு கார்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில், ஒரு பிஎம்டபிள்யூ காரும், ஒரு போர்ஷே காரும், ஒரு ஜாகுவார் காரும் அடங்கும். ஆனால் ஜாகுவார் காரை காவல் துறையினர் விற்பனை செய்து விட்டனர். ஆனால் இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் 2 கார்களை மட்டுமே பறிமுதல் செய்ததாக காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் விற்பனை செய்தது ஜாகுவார் எக்ஸ்எஃப் கார் ஆகும்.

புதிதாக வாங்கும்போது இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையே 55 லட்ச ரூபாய் வருகிறது. ஆனால் வெறும் 14 லட்ச ரூபாயை இந்த காருக்கு காவல் துறை அதிகாரிகள் விலையாக நிர்ணயம் செய்துள்ளனர். பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு இந்த கார் விற்பனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜாகுவாரை போல், போர்ஷே காரையும் விற்பனை செய்து விட காவல் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. மேலே குறிப்பிட்ட 2 தொழில் அதிபர்களும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போதுதான் இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், முதலில் காவல் துறையை சேர்ந்த 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பின்னர் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 2 பேர் என ஒட்டுமொத்தமாக 4 காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக டிவி9 கன்னடா செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், கடும் வெயிலிலும், மழையிலும் நிறுத்தி வைக்கப்பட்டு வீணடிக்கப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
ஆனால் இங்கே வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பறிமுதல் செய்யப்பட்ட காரை காவல் துறை அதிகாரிகளே விற்பனை செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில், காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








