சாலை விபத்துகள் ஏற்பட 5 முக்கிய காரணங்கள் இதுதான்... வீடியோ தொகுப்பில் சமூகநலனை தெரிவித்த போலீசார்
சாலை விபத்துகள் ஏற்பட 5 முக்கிய காரணங்கள் இதுதான்... வீடியோ தொகுப்பில் சமூகநலனை தெரிவித்த போலீசார்..!!
இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளை ஒரே வீடியோவாக தொகுத்து கொல்கத்தா நகர காவல்துறை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளது.
அந்த வீடியோவில் சாலை விபத்துகள் எதனால் ஏற்படுகின்றன என்றும் சாலை விபத்து நடப்பதற்கான 5 முக்கிய காரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

பொறுப்பற்ற டிரைவிங்
சாலையில் சமூக பொறுப்பின்றி வாகனங்களை ஓட்டுவதால் தான் பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவை தான் பெரும்பாலான விபத்துகளுக்கு தலையாய காரணமாக உள்ளது.

குறிப்பாக அதிவேகத்தில் செல்பவர்கள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவது கிடையாது. இதனால் அவர்களுக்கும், மற்ற வாகன ஓட்டிகளும் பிரச்சனை ஏற்படுகிறது.

சாலையில் கண்மூடித்தனமாக யாராவது வாகனம் ஓட்டுவதை நீங்கள் பார்த்தால், வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட்டு, உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
நம்மை நான்கு பேர் கவனிக்கிறார்கள் என்ற எண்ணம் வாகன ஓட்டிகளுக்கு வந்தால் போதும், குறைந்தபட்சம் சாலை பயன்பாட்டிலாவது மாற்றத்தை உருவாக்க முடியும்.

அதிவேக டிரைவிங்
இந்தியாவின் நகரப்பகுதிகளுக்கான சாலையில் மணிக்கு 60 கி.மீ வேகத்திற்குள் தான் செல்ல வேண்டும். ஏன் என்றால்? நம் நாட்டில் நகர சாலைகள் பெரும்பாலும் மக்கள் தொகை நிறைந்தவையே.
போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள வீடியோ:
இதை உணராமல், காலியான சாலையை பார்த்தால் பலர் வாகனத்தை அதிகப்பட்ச வேகத்திற்கு முடுக்கி விருட்டென செல்வார்கள். இந்த செய்கை நம் நாட்டு போக்குவரத்து விதிகளின் படி குற்றம்.

நகர பகுதிகளுக்குள் செல்லும் போது, வேகக்கட்டுப்பாட்டுடன் வாகனம் ஓட்டுவது நலம். காரணம், அதில் உங்களது உயிருக்கான பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது என்பதை நினைவில் கொள்க.
Recommended Video


சாலை தாண்டுதல்
சாலையில் வாகனங்கள் இயக்கத்தில் இருக்கும் போதே, அவற்றுக்கு இடையிடையே சென்று அப்புறமாக உள்ள சாலையை சென்று சேர்வது நம்மில் பலரது வழக்கமாக இருக்கும்.

பரபரப்பான சாலைகளில் பாதசாரிகள் பாதையை கடக்க, ஜீப்ரா கிராஸிங் என்ற முறை பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதைக்குறித்து போதிய விழிப்புணர்வு பல பேரிடம் இல்லை.

வாகனங்கள் பறந்துக்கொண்டு இருக்கும் சாலையில், அவற்றுக்கு இடையூறாக பாத சாரிகள் சாலையை கடப்பதாலும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

அவசரமாக போகவேண்டும் என்று சிலர் செய்யும் இதுபோன்ற தவறால், சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் இடையூறை சந்திக்கும். சாலையை தாண்டும் போது கவனத்துடன் செயல்படாவிட்டால் அவ்வளவு தான். உயிருக்கே உலைவைத்து விடும்.

போக்குவரத்து சிக்னல்
சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டும் ஒருசிலரால் டிராஃபிக் ஏற்படுவது அதிகரித்து வருகிறது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து சிக்னலை முறையாக பின்பற்றாமல் சென்றால், அது மற்றொரு டிராஃபிக் நிறுத்தத்திற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இது பல வாகன ஓட்டிகளுக்கு புரிவதில்லை.

போக்குவரத்து நிறுத்தத்தில் சிவப்பு விளக்கு விழுந்தால், வாகனத்தை நிறுத்தித்தான் ஆகவேண்டும். இந்த விதியை எங்கும் மாற்ற முடியாது. இதை பின்பற்றாமலும் இருக்க முடியாது.

டிராஃபிக் சிக்னலை மதிக்காமல் செல்வது என்பது சமூக பொறுப்பின்றி செய்யும் முக்கிய குற்றமாகும். வீடு போய் நிம்மதியாக சேரவேண்டுமென்றால், சாலையில் நிம்மதியாக நாம் வண்டி ஓட்ட வேண்டும்.

ராங் டேர்ன்
சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் வாகனத்தை எந்த வித எச்சரிக்கையும் இல்லாமல், திடீரென்று திருப்புவது அன்றாடம் பலரும் பார்க்கும் நிகழ்வு தான்.
இப்படி செய்வதாலும் அதிக சாலை விபத்துகள் மற்றும் உயிரழப்புகள் ஏற்படுகின்றன. இப்படி ஒருவர் செய்யும் தவறு சாலையில் செல்லும் பலரையும் பாதிக்கத்தான் செய்கிறது.

போக்குவரத்து விதிகள் என்பது நமது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது தான். அதை உணர்ந்து சாலையில் வாகனங்களை செலுத்த வேண்டும் என்பது நிதர்சனம். இதை மீறி நடப்பது யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே.
பாதுகாப்பான பைக் பயணத்துக்கு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய 10 ஆக்சஸெரீகள்!

புரட்சியாளர் சே குவேராவின் மோட்டார் சைக்கிள் ஸ்டோரி உங்களுக்குத் தெரியுமா? டாக்டரான அவர், தனது நண்பருடன் ஊர் ஊராக மோட்டார் சைக்கிளில் சுற்றிய போதுதான் கியூபா நாட்டில் மக்கள் படும் துயரங்களை கண்கூடாகப் பார்த்தார்.

அதன் பிறகு தான் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவின் விடுதலைக்காகப் போராடி அந்நாட்டு மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார் சே குவேரா. ஒரு வகையில் கியூபாவின் புரட்சி, வரலாற்றுப் பக்கங்களுக்கு வரக் காரணம் சேவின் மோட்டார் சைக்கிளும்தான்.

எனவே, வெறும் உயிரற்ற பொருள்தானே என பைக்குகளை நாம் அலட்சியப்படுத்த முடியாது. சே குவேரா வரலாற்று நாயகன். அதனால் அவரது மோட்டார் சைக்கிள் இன்றளவும் பேசப்படுகிறது. ஆனால், சே குவேராவைப் போலவே பல புரட்சிகளையும், சாதனைகளையும் படைக்கத் துடிக்கும் எத்தனையோ இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள்களே எமனின் வாகனமாக மாறிவிடுகிறது.

அலட்சியப் போக்கும், அதிவேகப் பயணஙகளும்தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம். எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் பைக் ஓட்டினால் நீ்ங்களும் இந்த சமூகத்துக்கு நீண்ட காலம் சேவையாற்றி வரலாறு படைக்கலாம்.
இதோ பாதுகாப்பான டிரைவிங்குக்கு 10 யோசனைகள்....

1. ஹெல்மெட்...
இது உங்கள் உயிர் காக்கும் ஆபத்பாந்தவன். ஹெல்மெட் அணிந்தால் அசௌகரியமாக இருக்கும். முடி கொடுக்கும். வியர்வை வரும் என மடத்தனமான பல காரணங்கள் கூறப்படுகிறது. உங்களது வாழ்வைப் பாதுகாக்கப் போகும் அதிமுக்கியமான அஸ்திரம் ஹெல்மெட். எனவே, பைக் ஓட்டும்போது எப்போதும் அதை அணிந்து செல்லுங்கள்.

2. கிளவ்ஸ்
கிளவ்ஸ், அதாவது கையுறைகள்... தரமான கையுறைகளை பைக் ஓட்டும் போது கட்டாயம் அணிய வேண்டும். விபத்துகள் நேர்ந்தால், கைகளைத்தான் முதலில் ஊன்றி சாலையில் விழுவோம். இது நம்மை அறியாமல் நடக்கும் அனிச்சை செயல். அதனால் கைகளில் காயம், சிராய்ப்பு ஏற்படாமல் தடுக்க இதுபோன்ற கையுறைகளை அணிந்து கொள்ளலாம்.

3. மோட்டார் சைக்கிள் ஜாக்கெட்
மோட்டார் சைக்கிள் ஜாக்கெட் (ஓவர்கோட் போன்ற மேல்சட்டை) அணிவது முக்கியம். அதன் விலை சற்று கூடுதல் என்றாலும் பாதுகாப்புக்காக அதை கண்டிப்பாக அணிய வேண்டும். அதில் இருக்கும் தடிமனான பேட்கள், எலும்புகள், தோள்பட்டை அடிபடாமல் பாதுகாக்கும்.

4. பாடி ஆர்மர்...
கிட்டத்தட்ட மோட்டார் சைக்கிள் ஜாக்கெட் போன்றதுதான் இதுவும். அதில் உள்ள அனைத்து அம்சங்களும் இதிலும் உள்ளன. பிறகு எதற்காக இதைத் தனியாக வாங்க வேண்டும் என்கிறீர்களா? கடும் வெயிலிலும், கோடையிலும் நீங்கள் சாதாரண ஜாக்கெட்டை அணிந்து செல்ல முடியாது, வியர்த்து விடும். அத்தகைய வானிலையில் காற்றோட்டமாக பயணிக்கக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் பாடி ஆர்மர். இதைப் பயன்படுத்துவதும் பாதுகாப்புக்கு மிக உகந்தது.

5. எல்போ கார்ட்ஸ்...
முழங்கைகளைப் பாதுகாப்பதற்காக இதை அணிய வேண்டும். விபத்தின்போது முழங்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இது காக்கும்.

6. ரைடிங் ட்ரவுஸர்ஸ்..
உடலின் மேல்பகுதிக்கு எவ்வாறு பாடி ஆர்மர், ஜாக்கெட் ஆகியவற்றை அணிந்து பாதுகாக்கிறோமோ, அதைபோல் உடலின் கீழ் பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். அதற்காக வந்தவைதான் ரைடிங் ட்ரவுஸர்கள். இவை கால்கள், முட்டி, தொடை, இடுப்பு ஆகிய இடங்களில் அடிபடாமல் பாதுகாக்கும்.

7. முழங்கால் பாதுகாப்பு கவசம்
முழங்கையைப் போல முட்டிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது அவசியம். அந்த இடத்தில் அடிபட்டால் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதைக் கருத்தில்கொண்டு தரமான knee guards (நீ கார்ட்ஸ்) அணிய வேண்டும்.

08. ரைடிங் ஷூ
விபத்து நேர்ந்தால் பாதங்களில் அடிபட அதிக வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க தரமான பூட்ஸ்களை அணியலாம். பைக் இயக்கும்போது அணிவதற்கான பிரத்யேக பூட்ஸ்களும் சந்தையில் உள்ளன. அவற்றை அணிவது கூடுதல் பாதுகாப்பு.

09. ஹைட்ரோ பேக்
நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும்போது நீரிழப்பு ஏற்பட்டு நீங்கள் சோர்வடையலாம். அந்தத் தருணங்களில் ஒவ்வொரு முறையும் ஹெல்மெட்டைக் கழற்றி தண்ணீர் அருந்துவது கடினம். அந்தச் சூழலைக் கையாள அறிமுகப்படுத்தப்பட்டவைதான் ஹைட்ரேசன் பேக்-கள். தோளின் பின்பக்கம் மாட்டிக் கொள்ளக்கூடிய இந்த பேக்-களில் உள்ள குடிநீர் பாட்டில்களில் இருந்து நேரடியாகக் குழாய் மூலம் பைக் ஓட்டும்போதே நீங்கள் தண்ணீர் அருந்தலாம்.

10. ஒளிரும் ஜாக்கெட்
ஒளிரும் வண்ணங்களிலான ஒவர் கோட்டை நீங்கள் அணிவதுதான் கூடுதலான பாதுகாப்பு வழங்கும். இருட்டான சாலையில் வாகனத்தை ஓட்டும்போது எதிரே வருபவர்களுக்கு உங்களை அடையாளம் காட்டுவதற்கு அந்த ஒளிரும் ஜாக்கெட்டுகள் உதவும். மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வண்டி ஓட்டினால், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி நீடித்திருக்கும்.


Click it and Unblock the Notifications








