சிறுதுளி பெருவெள்ளம்... சுற்றுச்சூழலை காக்க நாமும் உதவலாமே...!
வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருவது மனித குலத்திற்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட பல கொடிய நோய்களின் பிடியில் தற்போது நகரத்து மக்கள் சிக்கி அவதியுற்று வருவதற்கு வாகனங்களால் வெளியிடப்படும் நச்சு பொருட்களும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
தூய்மையான போக்குவரத்துக்கான சர்வதேச கவுன்சில் ஆய்வின் படி, 2003ம் ஆண்டில் இந்தியாவில் 50 மி்ல்லியனானக இருந்த வாகனங்கள் எண்ணிக்கை தற்போது 130 மில்லியன் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்கு நைட்ரஜன் ஆக்சைடு என்ற நச்சுக் காற்றின் அளவு வளி மண்டலத்தில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு 40,000 பேர் மரணிக்க நேர்வதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க, வாகன போக்குவரத்து என்பது இன்றைய காலக்கட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. எனவே, வாகன பயன்பாடு மற்றும் பராமரிப்பு முறைகளால் உங்களாலும் சிறிய அளவிலான நன்மைகளை சுற்றுச்சூழலுக்கு செய்ய முடியும். ஒவ்வொருவரும் இதுபோன்று செய்யும் சிறிய நன்மை பெரிய அளவில் பயன்படும். அதுமட்டுமின்றி, சக மனிதர்களுக்கு மட்டும் அல்ல, உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் நன்மையாக கூட அமையலாம். வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியமும் கூட அதில் அடங்கியிருக்கலாம்.

வழிகாட்டு முறைகள்
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை ஏற்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளியாகும் நச்சுப் பொருட்களை குறைப்பதற்கான சில எளிய பராமரிப்பு மற்றும் டிரைவிங் முறைகளை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.

கார் பராமரிப்பு
தயாரிப்பாளரின் பரிந்துரையின்பிட, காரை சிறப்பாக பராமரித்தல் அவசியம். சிறப்பான பராமரிப்பில் இருக்கும் காரிலிருந்து வெளியாகும் புகையிலிருந்து நச்சுத் தன்மை குறைவாக இருக்கும். ஏர் ஃபில்டரை சரியான சமயத்தில் மாற்றிவிடுவது காரின் செயல்திறனை 10 சதவீதம் வரை அதிகரிக்கும். இதேபோன்று, பிரச்னைக்குரிய ஆக்சிஜன் சென்சாரை மாற்றினால் 40 சதவீதம் எஞ்சினின் செயல்திறனை கூட்ட முடியும்.

இதுவும் முக்கியமே...
டயரில் சரியான காற்றழுத்தம் பராமரிக்க வேண்டும். இல்லையெனில், உராய்வுத் தன்மை அதிகரித்து எஞ்சினுக்கு கூடுதல் சுமையையும், சோதனையையும் தந்துவிடும். எஞ்சின் சுமை கூடும்போது கார்பன் புகை வெளியீடு மிக அதிகமாக இருக்கும்.

எரிபொருள் சிக்கனம்
சிறப்பான டிரைவிங் அதிக மைலேஜை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கும். ஏதையோ பிடிக்க போவது போன்று ஆக்சிலேட்டரை கொடுத்து விரட்டுவது, சம்பந்தமில்லாமல் எஞ்சினை ஓட ஓட விரட்டுவது, கியரை சகட்டு மேனிக்கு கூட்டி குறைப்பது போன்ற செயல்கள் நிச்சயம் அதிக அளவில் கார்பன் புகையை வெளிப்படுத்தும். எப்போதும் ஸ்மூத்தாக கார் ஓட்டுவதற்கு பழகிக் கொள்ளுங்கள்.

கூடுதல் சுமை
காரில் அதிக பொருட்களை ஏற்றுவதை தவிர்ப்பதும் நலம். தேவையில்லாத லக்கேஜுகளை காரில் எடுத்துச் செல்வதை தவிர்க்க முயலுங்கள். காரின் கூரையின் மீது பொருத்தியிருக்கும் கேரியரை தேவையில்லையெனில் அகற்றிவிடுங்கள்.

கார் கழுவும்போது...
வீட்டிலேயே காரை கழுவும்போது 200 லிட்டர் அளவுக்கு மட்டுமே தண்ணீரை பயன்படுத்துங்கள். மேலும், கார் கழுவும்போது பயன்படுத்தும் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காதவைகளாக இருத்தல் நலம். இதுபோன்ற ஷாம்பூ, சோப்பாயில் போன்றவை இப்போது மார்க்கெட்டில் கிடைக்கின்றன.

உதவுங்கள்
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சில எளிய வழிகாட்டு முறைகளை கடைபிடித்து, உங்களால் இயன்ற அளவு சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முற்படுங்கள். நண்பர்கள், உறவினர்களிடத்தும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்கான வழிகாட்டு முறைகளையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறி நம்மால் இயன்றதை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








