இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை.. மாநில அரசு அதிரடி..
அளவுக்கு அதிகமாக ஹாரனை ஒலித்து, ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 லட்ச ரூபாய் அபராதமும் கட்ட நேரிடும்.
அளவுக்கு அதிகமாக ஹாரனை ஒலித்து, ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 லட்ச ரூபாய் அபராதமும் கட்ட நேரிடும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில தலைநகர் மும்பை, இந்தியாவின் வர்த்தக தலைநகர் என வர்ணிக்கப்படுகிறது. அங்கு ஒரு சில வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் ஹாரனை ஒலித்து, ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே மும்பை நகரில் உள்ள 110 பகுதிகளை சைலண்ட் ஜோன் (Silent Zone) என மகாராஷ்டிரா அரசு வரையறை செய்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ள பகுதிகள், சைலண்ட் ஜோனில் சேர்க்கப்பட்டுள்ளன.

சைலண்ட் ஜோன் என குறிப்பிடப்பட்ட பகுதிகளில், ஹாரனை ஒலிக்க கூடாது. அதை மீறி ஹாரனை ஒலித்து, ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் ரூ.1 லட்சம் அபராதம் கட்ட நேரிடும். அத்துடன் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையையும் அனுபவிக்க நேரிடும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.

மும்பை மாநகரானது, தொழில், கமர்ஷியல், குடியிருப்பு, அமைதி (Silent Zone) என மொத்தம் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில், இவ்வளவு டெசிபல் ஒலி அளவுதான் இருக்க வேண்டும் எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தொழில் பகுதிகளில், பகல் நேரங்களில் 75 டெசிபலும், இரவு நேரங்களில் 70 டெசிபலும் இருக்கலாம். அதே நேரத்தில் கமர்ஷியல் பகுதிகளில், பகல் நேரங்களில் 65 டெசிபலும், இரவு நேரங்களில் 60 டெசிபலும் மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் குடியிருப்பு பகுதிகளில், பகல் நேரங்களில் 55 டெசிபலும், இரவு நேரங்களில் 45 டெசிபலும் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் சைலண்ட் ஜோன்களில், பகல் நேரங்களில் 50 டெசிபலும், இரவு நேரங்களில் 40 டெசிபலும் மட்டுமே இருக்க வேண்டும்.

குறிப்பாக சைலண்ட் ஜோன்களில் அளவுக்கு அதிகமாக ஹாரனை ஒலிப்பவர்கள் குறித்த, 100 என்ற போலீஸ் ஹெல்ப்லைன் நம்பரில், புகார் அளிக்கலாம் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இதுதவிர [email protected] என்ற இணையதளத்திலும் புகாரை பதிவு செய்யலாம்.

புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருகின்றன. எனவே ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை லவுட் ஸ்பீக்கர்கள் பயன்படுத்தவும், பட்டாசுகள் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








