5 நண்பர்கள், 5,000 கிமீ... வெப் சீரிஸாக வரும் சுதந்திர தின சாகச பைக் பயணம்... முதல் டீசர் வெளியீடு!
சுதந்திர தினத்திற்காக 5 நண்பர்கள் இணைந்து 5,000 கிலோமீட்டர் தூரம் மேற்கொண்ட சாகச பைக் பயணத்தின் வெப் சீரிஸ் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதன் முன்னோட்டமாக, டீசர் ஒன்றையும் அந்த குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

டெல்லியை சேர்ந்த நிகில் காஷ்யப் மும்பையில் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் பைக்குகளில் சாகசப் பயணங்கள் மேற்கொள்வதில் அலாதி ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில், கடந்த சில சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது, தனது நண்பர்களுடன் சேர்ந்து இவர் நீண்ட தூர சாகச பைக் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

பல்வேறு மொழி, கலாச்சராம், சுற்றுலா தலங்கள், புதிய உணவு வகைகள் பற்றி அறிந்து கொள்ளும் விதத்திலும், ஆங்காங்கே உள்ள பைக் குழுவினரை சந்தித்து உரையாடும் வகையிலும், மிக சுதந்திரமான உணர்வுடன் இந்த பைக் பயணத்தை அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், கடந்த 2016ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு சாகச பைக் பயணத்தை அவர் மேற்கொண்டார் தனது நண்பர்கள் பானு பிரதாப் சிங், ஹர்கிரத் சிங், திவ்யா ராகவ், இனயா ஆகிய 5 பேருடன் இந்த பயணத்தை அவர் அமைத்துக் கொண்டார். 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி இந்திய சுதந்திர தினத்தன்று சிங்கப்பூர் தூதரகத்திலிருந்து தனது பயணத்தை துவங்கினார். ஆனால், அப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, பயணம் ரத்தானது. மீண்டும் 2018ம் ஆண்டு விட்ட இடத்தில் இருந்து இந்த பயணத்தை துவங்கி நிறைவு செய்தனர்.

5 நாடுகள், 5 வாரங்கள், 5 நண்பர்கள், 5,000 கிமீ தூர பயணம் என்ற திட்டத்துடன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, மியான்மர் வழியாக இந்தியாவிற்கு இந்த மிக நீண்ட பைக் பயணத்தை மேற்கொண்டனர். மொத்தம் 21 நாட்கள் நீடித்த இந்த நெடிய சாகச பைக் பயணம் கொல்கத்தாவில் நிறைவு செய்தனர்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் உள்ள உலகின் மிகவும் பழமைவாய்ந்த ஆன்மிக சுற்றுலா தலங்கள், பெருமைவாய்ந்த நெடுஞ்சாலைகள், பலரும் செல்ல தயங்கும் சவாலான இடங்களை தொட்டுவிட்டு, இந்த சாகச பைக் பயணத்தை நிறைவு செய்தனர்.

சிங்கப்பூர் ஃபார்முலா-1 கார் பந்தய களம், மலேசியாவில் வேக வரம்பு இல்லாத அதிவிரைவு சாலைகள், பேட்டாங் பைக் வீக் திருவிழா, மியான்மரில் உள்ள 20 தடங்கள் கொண்ட நெடுஞ்சாலை வழியாக பயணித்துள்ளனர்.

தவிரவும், டோக்கியோவிலிருந்து ஆப்கானிஸ்தான் வரை கொரியா, சீனா, சிங்கப்பூர், இந்தியா, பாகிஸ்தான் வழியாக நீண்டு செல்லும் ஆசிய நெடுஞ்சாலை 1 மற்றும் 2 ஆகிய சாலைகளில் 1,300 கிமீ தூரம் பயணித்துள்ளனர். இந்த பயணத்திற்காக கேடிஎம் 390 ட்யூக் பைக்குகளை நிகில் காஷ்யப் குழுவினர் பயன்படுத்தி உள்ளனர்.

இந்தநிலையில், 74-வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டத்திற்கு நம் நாடு தயாராகி வரும் இவ்வேளையில், 2016ம் ஆண்டு மற்றும் 2018ம் ஆண்டு மேற்கொண்ட பைக் பயணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ கோப்புகளை வைத்து புதிய வெப் சீரிஸ் ஒன்றை வெளியிட நிகில் காஷ்யப் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முன்னோட்டமாக, டீசரையும் வெளியிட்டுள்ளனர். அடுத்த 15 முதல் 20 நாட்களில் இந்த சாகசப் பயண வெப் சீரிஸ் துவங்க இருக்கிறது. இதற்காக, முன்னணி ஓடிடி தளங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக நிகில் காஷ்யப் தெரிவித்துள்ளார். மொத்தம் 21 எபிசோடுகளாகவும், ஒவ்வொரு எபிசோடும் 5 முதல் 7 நிமிடங்கள் ஓடும் வகையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

இந்த சாகசப் பயண வெப் சீரிஸ் இந்தியாவின் பைக் பிரியர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், எதிர்பார்ப்புகளையும், பயணத் திட்டத்திற்கும் ஏதுவான பல்வேறு விஷயங்களை கொண்டதாக இருக்கும் என்று நிகல் காஷ்யப் தெரிவித்துள்ளார். இதனால், இந்த பைக் சாகசப் பைக் பயணத்தின் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








