மாஸான காரியத்தை செய்த ஜெகன்... கெத்து காட்டும் ஆந்திரா... ஏக்கமாக பார்க்கும் மற்ற மாநில மக்கள்...
முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசு, அடுத்ததாக ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் (கோவிட்-19) கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் ஆந்திர பிரதேசமும் ஒன்று. ஆந்திர மாநிலத்தில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில், ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் முக்கியமானவர்கள். கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களின் வாழ்வாதாரம் முடங்கியது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு விட்டாலும் கூட, ஆட்டோ, டாக்ஸிகளை இயக்குவதற்கு கடுமையாக கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்களும் விரும்புவதில்லை. அதற்கு பதிலாக கார், பைக் போன்ற சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதனால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களுக்கு போதிய வருமானம் இல்லை.

இந்த சூழலை புரிந்து கொண்ட முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசு ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்திற்கான நிதியை 4 மாதங்களுக்கு முன்னதாகவே விடுவித்தது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 2.62 லட்சம் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தற்போது கொரோனா வைரஸ் பிரச்னையை எதிர்கொள்ள அதிக ஆம்புலன்ஸ்கள் தேவைப்படும் சூழலில், நடப்பு ஜூலை மாத தொடக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆம்புலன்ஸ்களை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நடவடிக்கைகள் ஆந்திராவை கடந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கவனம் ஈர்த்தன.

இந்த சூழலில் நடமாடும் கோவிட்-19 பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை ஆந்திரா தற்போது இரட்டிப்பாக்கியுள்ளது. ஆந்திர பிரதேச மாநில அரசு பஸ்களை மாடிஃபிகேஷன் செய்து கோவிட்-19 பரிசோதனைகளை செய்து வருகிறது. பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் அந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 50 பஸ்கள் கோவிட்-19 பரிசோதனைகளை செய்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக 52 புதிய பஸ்களை ஆந்திர பிரதேச அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நடமாடும் கோவிட்-19 பரிசோதனை கூடங்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆந்திர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பரிசோதனைகளை அதிகரித்து, தொற்று ஏற்பட்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதுதான் கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழியாக பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப பரிசோதனை செய்வதற்கான வசதிகளை அதிகரித்துள்ள ஆந்திர பிரதேச அரசின் நடவடிக்கை பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இதுகுறித்து ஆந்திர சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், ''மிகப்பெரிய அளவில் பரிசோதனைகளை நடத்துவதற்காக, 102 சிறப்பு பேருந்துகள் ஆந்திர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளில் ஒரே நேரத்தில் 10-12 மக்களுக்கான பரிசோதனைகளை செய்ய முடியும். இதன் மூலம் மக்கள் கூடுவதையும் தவிர்க்க முடியும்.

ஒவ்வொரு பஸ்ஸிலும் 10 கவுன்டர்கள் இருக்கும். ஒவ்வொரு கவுன்டரிலும் சுகாதார ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்'' என்றனர். மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட பஸ்களை நிலைநிறுத்துவதை தவிர, கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்காக, சுகாதார பணியாளர்களை அதிகளவில் பணியமர்த்தவும் ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திர முதல் அமைச்சர் ஜெகன் மோகனின் அதிரடியான திட்டங்கள் வெளி மாநில மக்களையும் கவர்ந்து வருகின்றன. ஜெகன் மோகனை போல் ஒரு முதல்வர் கிடைக்க வேண்டும் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிடுவதை அதிகம் காண முடிகிறது.


Click it and Unblock the Notifications








