சீன வெடிவிபத்தில் 5,800 ஜேஎல்ஆர் கார்களை இழந்துவிட்டோம்: டாடா மோட்டார்ஸ்
சீனாவின், தியாஜின் துறைமுகத்தில் சமீபத்தில் நடந்த வெடிவிபத்தில் 5,800 ஜாகுவார்- லேண்ட்ரோவர் கார்கள் சேதமடைந்துவிட்டது," என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 11ந் தேதி சீன துறைமுகத்தில் நடந்த மிகப்பெரிய ரசாயன வெடிவிபத்தில், பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெடிவிபத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில், ஆயிரக்கணக்கான கார்கள் சேதமடைந்துவிட்டன.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான கார்கள் சேதமடைந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, இந்த விபத்தில் ஜாகுவார்- லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான கார்கள் கருகி நாசமடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் தகவல்
இங்கிலாந்தை சேரந்த ஜாகுவார்- லேண்ட்ரோவர் நிறுவனத்தின் தாய் நிறுவனமான இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்திருக்கும் தகவலில், சீன துறைமுக வெடிவிபத்தில் 5,800 ஜாகுவார்- லேண்ட்ரோவர் கார்களை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

இழப்பு
வெடிவிபத்து ஏற்பட்ட பகுதிகள் சீலிடப்பட்டிருப்பதால், இழப்பு குறித்து உடனடியாக ஆய்வு செய்ய இயலாத நிலை இருக்கிறது. எனவே, உண்மையான இழப்பு குறித்து உடனடியாக தகவல் அளிக்க இயலவில்லை என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய துறைமுகம்
சீனாவில், வாகனங்களை இறக்குமதி செய்யும் வசதியுடை மூன்று முக்கிய துறைமுகங்களில் தியாஜின் துறைமுகம் ஒன்று. குறிப்பாக, கார் தயாரிப்பாளர்கள் இந்த துறைமுகத்தின் வழியாகத்தான் அதிக அளவில் கார்களை இறக்குமதி செய்து, அங்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அந்தளவுக்கு, அங்கு மிகப்பெரிய ஸ்டாக்யார்டும் உள்ளது.

பெரும் நாசம்
இந்த வெடி விபத்தில் 10,000க்கும் அதிகமான கார்கள் இதுவரை நாசமடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வெடிவிபத்தின் காரணமாக சீனாவில் வர்த்தகம் செய்து வரும் வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பும், கார்களை டெலிவிரி கொடுப்பதில் நடைமுறை சிக்கல்களும் எழுந்துள்ளன.

பாதிக்கப்பட்ட நிறுவனங்கள்
அந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 15,000க்கும் அதிகமான கார்கள் சேதமடைந்துவிட்டதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஃபோக்ஸ்வேகன், ஜாகுவார்- லேண்ட்ரோவர், ஹூண்டாய், ரெனோ மற்றும் கியா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் இந்த தீவிபத்தில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மதிப்பு
இந்த வெடிவிபத்தில் ஒரு பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் ரூ.6,500 கோடி மதிப்புடைய கார்கள் சேதமடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

கூட்டணி
சீனாவின் செர்ரி ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து, ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் அங்கு கார் விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








