முதியவரின் உயிரை பறித்த அரசு அதிகாரிகளின் அலட்சியம்.. கண்ணீருடன் நடுத்தெருவில் நிற்கும் குடும்பம்
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பம் தற்போது கண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது.
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பம் தற்போது கண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள டஸ்டூர் மெஹர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஷீத் ரஸ்டம் இரானி. 60 வயதாகும் இரானி, பிரபலமான பேக்கரி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இரானியிடம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஒன்று இருந்தது.

இந்த ஸ்கூட்டரில்தான் இரானி தினசரி பேக்கரிக்கு சென்று வருவார். இதன்படி கடந்த 14ம் தேதி காலை 6.30 மணியளவில், தனது ஆக்டிவா ஸ்கூட்டரில், அவர் பேக்கரிக்கு சென்று கொண்டிருந்தார். தாதிகுட்டா சௌக்-முந்த்வா இடையேயான சாலையில்தான் இரானி வேலை செய்து வந்த பேக்கரி அமைந்துள்ளது.

எனவே அந்த சாலையில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் குடிநீர் பைப் லைன் ஒன்றை சரி செய்வதற்காக அந்த சாலையில் குழி தோண்டப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக அந்த குழியில் சிக்கி, ஸ்கூட்டரில் இருந்து இரானி தவறி விழுந்தார்.

இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் இரானி பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக புனே போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது பரபரப்பான தகவல்கள் வெளிவந்தது.

பைப் லைன் சரி செய்யும் ஒப்பந்தத்தை சௌரோ செஸ்ரோ காகடே என்ற ஒப்பந்ததாரருக்கு புனே மாநகராட்சி நிர்வாகம் வழங்கியிருந்தது. இரானி உயிரிழக்க காரணமான குழி இவரால் தோண்டப்பட்டதுதான்.

சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என ஒப்பந்ததாரர் சௌரோ செஸ்ரோ காகடேவுக்கு பல முறை அறிவுறுத்தப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் ரோந்து சென்ற போலீசார் கூட அவரிடம் இதனை வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால் அவர் எதையும் காதில் வாங்கி கொள்ளவே இல்லை. அது மட்டுமல்லாமல் அங்கு குழி உள்ளது என்பதை அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் விதமாக எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை.

இதுவே விபத்துக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. எனவே ஒப்பந்ததாரர் சௌரோ செஸ்ரோ காகடேவை போலீசார் உடனடியாக கைது செய்தனர். அத்துடன் இந்திரஜித் வசன்ட்ரோ தேஷ்முக் என்ற ஜூனியர் இன்ஜினியரும் கைது செய்யப்பட்டார்.

இவர் குடிநீர் வழங்கல் துறையில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் சேர்த்து உத்ரேஸ்வர் மோகன் நரசிங்கே என்ற சூப்பர்வைசரும் கைது செய்யப்பட்டுள்ளார். இரானி உயிரிழந்த வழக்கில் மொத்தம் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இவர்களது அலட்சியத்தால்தான் எவ்வித தவறும் செய்யாத இரானி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனால் விபத்து நிகழ்ந்தபோது இரானி ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தரமான ஹெல்மெட்டை அணிந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க கூடும்.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, இரானிக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். அவர்களை எல்லாம் தவிப்பில் ஆழ்த்திவிட்டு இரானி உயிரிழந்துள்ளார். யாரோ செய்த தவறு தற்போது இரானியின் குடும்பத்தை வெகுவாக பாதித்துள்ளது.

இந்தியா முழுக்க இது போன்று குண்டும், குழியுமான சாலைகள் நிறைந்துள்ளன. குடிநீர், மின் வாரியம் என பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சாலையில் குழிகளை பறிக்கின்றனர். ஆனால் பணிகளை உடனடியாக முடித்து விட்டு சாலையை மீண்டும் சீரமைப்பது இல்லை.

அப்படியே கிடப்பில் போட்டு விடுகின்றனர். ஒரு வேளை பணிகள் முடிவடைந்தாலும் சாலை மீண்டும் சீரமைக்கப்படுவது இல்லை. அப்படியே குண்டும், குழியுமாகதான் கிடக்கிறது. இதுபோன்ற தவறுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
More from DriveSpark
மஹிந்திரா அல்டுராஸ் ஜி-4 எஸ்யூவி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








