68 வயதில் கெத்தான சம்பவம்... நாட்டையே ஆச்சரியப்பட வைத்த மூதாட்டி... அப்படி என்ன செய்தார் தெரியுமா?
68 வயது மூதாட்டி ஒருவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஊரடங்கு மிகவும் தீவிரமாக இருந்த மாதங்களில், பேருந்து, ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே அவசர பயணங்களை மேற்கொண்டாக வேண்டிய சூழலில் இருந்தவர்கள், தங்கள் சொந்த வாகனங்களில் பயணித்தனர்.

இதில், ஒரு சிலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தொலைவை சைக்கிள் மூலமாக கடந்ததை நம்மால் காண முடிந்தது. குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் பலர் சைக்கிள் மூலமாக பயணம் மேற்கொண்டனர். இன்னும் சிலரோ, ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால், சைக்கிள் மூலமாகவே தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஆனால் தற்போது நிலைமை கிட்டத்தட்ட சீரடைந்து விட்டது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயங்குகின்றன. ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸிகளுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் இன்னமும் ஒரு மூதாட்டி சைக்கிள் மூலமாக பயணம் செய்து வருகிறார். அவர் கடக்கவுள்ள தொலைவு சுமார் 2,200 கிலோ மீட்டர்கள்.

இதை விட ஆச்சரியம் அவரது வயதுதான். ஆம், அவருக்கு தற்போது 68 வயதாகிறது. இந்த வயதில் இவ்வளவு நீண்ட நெடிய பயணத்தை சைக்கிள் மூலமாக அவர் தற்போது மேற்கொண்டு வருவதற்கு காரணம் பக்தி. மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இந்த மூதாட்டி, ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குதான் தற்போது சைக்கிள் மூலமாக சென்று கொண்டுள்ளார்.

அவரது பெயர் ரேகா தேவ்பங்கர். துணிச்சல் மிக்க இந்த மூதாட்டி கடந்த ஜூலை 24ம் தேதியே தன் சைக்கிள் பயணத்தை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் அவர் தினமும் 40 கிலோ மீட்டர் வரை சைக்கிள் ஓட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கூடிய விரைவில் அவர் வைஷ்ணவி தேவி கோயிலை சென்றடைவார் என நாம் நம்பலாம்.

தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ரேகா தேவ்பங்கரின் காணொளியை, ரத்தன் ஷர்டா என்ற டிவிட்டர் பயனர் வெளியிட்டுள்ளார். ரேகா தேவ்பங்கரின் பயணம் குறித்த பதிவை அவர் டிவிட்டரில் கடந்த 19ம் தேதி வெளியிட்டார். உடனடியாக அந்த காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவ தொடங்கி விட்டது.

காணொளியுடன் கூடிய அந்த டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: மஹாராஷ்டிராவை சேர்ந்த 68 வயது பெண்மணி, சைக்கிள் மூலம் தனியாக வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பயணம் செய்து கொண்டுள்ளார். காம்கயோனில் இருந்து 2,200 கிலோ மீட்டர்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. காம்கயோன் என்பது மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும்.
தற்போது இந்த மூதாட்டிக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவரது துணிச்சல் மற்றும் மன உறுதியை பலர் பாராட்டி வருகின்றனர். வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதை இந்த மூதாட்டி நிரூபித்து விட்டார். அதே நேரத்தில் அவரது பாதுகாப்பு தொடர்பாகவும் ஒரு சிலர் சமூக வலை தளங்களில் கவலை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








