பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு குறைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா? ஆய்வில் வெளிவந்த தகவல்!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு குறைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. தினசரி வாகனங்களை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ள நடுத்தர வர்க்க குடும்பத்தினர் எரிபொருள் செலவுக்கு என்று மாதந்தோறும் பெரிய தொகையை ஒதுக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது.

பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் மிகவும் அதிகப்படியான கலால் வரி, வாட் வரி ஆகியவற்றை விதித்து வருகின்றன. இந்தியாவில் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசலை மிகவும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் காணப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம். மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே வரிகளை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கு பெரியளவில் பலன் இல்லை. இந்த சூழலில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் வரிகள் குறித்து இந்திய மக்களிடம் தற்போது ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற 69 சதவீதம் பேர், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அரசு குறைக்க வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளனர். லோக்கல் சர்க்கிள்ஸ் (Local Circles) நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. ''பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அரசு குறைக்க வேண்டும் என விரும்புவதாக மொத்தம் 69 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதில், பெரும்பாலான மக்கள் பெட்ரோல், டீசலின் விலை 20 சதவீதம் அல்லது 6 ரூபாய்க்கும் மேல் குறைய வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளனர்'' என இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 201 மாவட்டங்களில் வசித்து வரும் 9,326 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 71 சதவீதம் பேர் ஆண்கள். எஞ்சிய 29 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருப்பதை இந்த ஆய்வு முடிவுகள் எடுத்து காட்டுகின்றன. எரிபொருள் விலை உயர்வு பிரச்னையை சமாளிப்பதற்காக பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற திட்டமிட்டு வருகின்றனர்.

ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இன்னும் பெரிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை. அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் வேறு அதிகமாக இருக்கிறது. எனவே தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாகனங்களிலேயே பயணிக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு உள்ளது.

எனினும் வரும் காலங்களில் இந்த நிலை படிப்படியாக மாறும். ஏனெனில் மத்திய, மாநில அரசுகள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதுடன், சாலை வரி, பதிவு கட்டணம் ரத்து போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் மானியமும் கொடுக்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








