வாழ்ந்தா இப்படி வாழனும்யா! ரத்தன் டாடாவை ஊரே புகழ என்ன காரணம் தெரியுமா?
டாடா குழுமத்தின் சேர்மேனாக இருந்த ரத்தன் டாடா தனது 86வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும், நம் மனதை விட்டு பிரியாத அளவுக்கு பல்வேறு விதமான நற்செயலை செய்து விட்டு சென்றுள்ளார். முக்கியமாக ஆட்டோமொபைல் துறையில் இவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இப்படியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திலும் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கும் ரத்தன் டாடா செய்த மறக்க முடியாத சில விஷயங்களைப் பற்றி தான் இங்கே காண போகிறோம்.
கடந்த 1937ம் ஆண்டு மும்பையில் ரத்தன் டாடா, டாடா குடும்பத்தில் பிறந்தார். இவர் படித்து பட்டம் பெற்று டாடா குழுமத்தின் தொழிலுக்கு வரும்போது டாடா குழுமம் தனது முகத்தையே மற்றும் அளவுக்கு பெரிய மாற்றங்களை எல்லாம் செய்தார். முக்கியமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் கமர்சியல் வாகனங்கள் மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் இவர் வந்த பிறகுதான் பயணிகள் வாகனங்கள் எஸ்யூவிகள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை எல்லாம் தயாரிப்பதற்கான முயற்சிகளை எடுத்து அதில் வெற்றியும் பெற்றார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு செய்த மிகப்பெரிய காரியம் என்றால் சர்வதேச அளவில் உள்ள சில முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியதுதான். ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை ஃபோர்டு நிறுவனத்தில் இருந்து டாடா குழுமம் கடந்த 2008ம் ஆண்டு வாங்கியது. இது ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை வாங்கிய பிறகுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டது. இதன் மூலம் தொழில்நுட்ப பகிர்வு மற்றும் மற்ற பல்வேறு விஷயங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பகிரப்பட்டதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரமான தயாரிப்புகளை தயாரிக்க துவங்கியது. அது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரும் டாடா நிறுவனத்திற்கு கிடைத்தது. இவர் இந்த நிறுவனங்களை மட்டுமல்லாமல் மற்ற சில நிறுவனங்களையும் வாங்கியுள்ளார்.

அடுத்த மிகப்பெரிய சாதனை என்றால் டாடா நானோ என்ற காரை அறிமுகப்படுத்தியதுதான். கடந்த 2003 ஆம் ஆண்டு ரத்தன் டாடா சாலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு குடும்பம் மழையில் நனைந்து கொண்டே ஸ்கூட்டரில் பகைத்துக் கொண்டிருந்தது. அதை பார்த்த ரத்தன் டாடாவிற்கு இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் காரை தயாரித்து வழங்க வேண்டும் என திட்டமிட்டார்.
அதன்படி டாடா நிறுவனம் உலகிலேயே குறைவான விலையில் வாகனத்தை தயாரித்து விற்பனைக்காக அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு டாடா நானோ என பெயர் வைத்தது. இந்த கார் இந்தியாவில் கார் வாங்கும் கனவில் உள்ள பல குடும்பங்களின் கனவை நினைவாக்கியது என்றே சொல்ல வேண்டும். டாடா நிறுவனம் புதுமை மற்றும் குறைந்த விலையில் வாகனம் தயாரிப்பதற்கு சிறந்த நிறுவனம் என்ற பெயரை பெற்றது.

இதற்கிடையில் ரத்தன் டாடா தான் இந்தியாவிலேயே முதன்முதலாக தயாரிக்கப்பட்ட பயணிகள் கார் என டாடா இண்டிகா காரை இந்தியாவில் வடிவமைத்து இந்தியாவிலேயே முழுமையாக தயாரித்து விற்பனைக்காக கொண்டு வந்தார். இது முழுவதும் நடுத்த மக்களை டார்கெட் செய்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட காராகும். இந்த காரும் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் பிரபலமானது. முக்கியமாக வாடகை கார் செக்மெண்டில் பல குடும்பங்களுக்கு இந்த கார் வாழ்வாதாரமாக இருந்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.
டாடா நிறுவனம் கடந்த 1998ம் ஆண்டு இந்தியாவில் டாடா சஃபாரி என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் எஸ்யூவி கார் என்றால் அது இதுதான். இந்திய சாலை கண்டிஷனுக்கு ஏற்ப ஒரு எஸ்யூவி காரை தயாரித்து இந்திய மக்களுக்கு சிறந்த காரை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த காரை அந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெட்ரோல் ,டீசல் காருக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க துவங்கிய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை எலெக்ட்ரிக் வாகனம் பக்கம் திருப்பிய பெயர் ரத்தன் டாடாவுக்கு தான் கிடைக்கும். இன்று இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனம் தான் விற்பனை செய்து வருகிறது என்றால் அதற்கு இவர் செய்த முயற்சி மிக முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ரத்தன் டாடா தொழில் வளர்ச்சியில் மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியிலும் பங்காற்றினார். கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு என்ற பெயரில் இவர் தனது நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தில் அதிகமான பணத்தை பொதுமக்களுக்கு உதவியாகவும் நன்கொடையாகவும் வழங்கினார். இதனால் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது என்றே சொல்ல வேண்டும். சுமார் 50 ஆண்டுகாலம் இவர் பணியாற்றிய பிறகு தனது ஓய்வு அறிவித்தாலும், இவர் ஓய்வு பெற்றும் அந்நிறுவனத்திற்கு சேர்மனாக இருக்கும் அந்தஸ்தையும் பெற்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் அசைக்க முடியாத நிறுவனமாக டாடா நிறுவனம் வளர்ந்துள்ளதற்கு ரத்தன் டாடா மிக முக்கியமான காரணமாக இருக்கிறார். இவர் எடுத்த ஒவ்வொரு முடிவுகளும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்துள்ளது. இவரது பிரிவு டாடா மோட்டார்ஸ் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ஒரு பெரும் இழப்புதான்.


Click it and Unblock the Notifications









