7 அடி நீளத்தில் காரினுள் அழையா விருந்தாளி... கடைசியில் எப்படி வெளியே கொண்டுவந்தாங்க தெரியுமா?
பொதுவாகவே பாம்புகள் நன்கு இறுக்கமான இடங்களில் தங்குவதற்கே விருப்பப்படுகின்றன. அதற்கு கார் & பைக் போன்ற வாகனங்கள் அவற்றிற்கு மிகவும் ஏற்றவையாக விளங்குகின்றன. இதன் காரணமாகவே, கார் & பைக்குகளில் பாம்புகள் அடைகலம் புகுந்த சம்பவங்களை பலமுறை நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், இங்கு ஒரு 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஹூண்டாய் ஐ10 (Hyundai i10) காரில் அடைகலம் புகுந்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சில தினங்களுக்கு முன்பு, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஒன்றில் சிறிய அளவிலான மலைப்பாம்பு ஒன்று புகுந்ததை பற்றி பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக, ஒடிசாவில் அதேபோன்று ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் ஹூண்டாய் ஐ10 கார் ஒன்றில் புகுந்த நன்கு நீளமான மலைப்பாம்பை பார்க்கலாம்.

மனிதர்களை காட்டிலும் நீளமாக, சுமார் 7 அடி நீளமுள்ள இந்த மலைப்பாம்பு ஹூண்டாய் ஐ10 காரினுள் டேஸ்போர்டிற்கு அடியில் ஏசி சிஸ்டத்திற்குள் புகுந்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், அந்த ஹூண்டாய் ஐ10 கார் ஷோரூம் ஒன்றிற்கு வெளியே நிற்பதையும், பாம்பை காண மக்கள் கூட்டம் காரை சுற்றி நிற்பதையும் காணலாம்.
முதற்கட்டமாக, காரின் டேஸ்போர்டை அகற்றி உள்ளனர். மிக நீளமான மலைப்பாம்பு ஒன்று காரின் ஏசி சிஸ்டத்திற்குள் இருப்பதை அங்கிருந்தவர்கள் உறுதி செய்து கொண்டனர். ஆனால், பாம்பின் பாதி உடலும், வால்பகுதியும் மட்டுமே வெளியே தெரிந்துள்ளது. தலைப்பகுதியை பார்க்க முடியவில்லை. அதன்பின் சில முயற்சிகளுக்கு பின்னரே, பாம்பு காரின் ஏசி சிஸ்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இதனால் வேறு வழியில்லாமல், காரில் இருந்து ஏசி சிஸ்டத்தை தனியாக கழற்ற வேண்டி இருந்துள்ளது. இதன்படி, அது கழற்றப்பட்டு வெளியே எடுக்கப்பட்ட போது, ஏர் பாக்ஸினுள் பாம்பின் தலை உள்ளதை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து, சில பல முயற்சிகளுக்கு பின் ஒருவழியாக அந்த மலைப்பாம்பு காரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
இதில் இருந்து அந்த மலைப்பாம்பு எந்த அளவிற்கு வலிமையானது என்பதை அறியலாம். மலைப்பாம்புகளுக்கு விஷம் கிடையாது. இதனால், அவை கடித்தாலும் பெரியதாக எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அவற்றின் உடல் வலிமை மிகவும் அதிகம். இரையை பிடித்து இறுக்கி அதனை சாகடித்து உண்ணும் பழக்கத்தை கொண்டது. மலைப்பாம்பின் இந்த செயல்களால் மனிதர்களும் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இத்தகைய மலைப்பாம்பை இந்த ஹூண்டாய் ஐ10 காரில் இருந்து வெளியே எடுத்த உடன் அதனை ஒரு பையில் அடைத்துவிட்டனர். ஏற்கனவே கூறியதுபோல், மலைப்பாம்புகள் இவ்வாறு வாகனங்களுக்குள் தஞ்சம் புகுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. மலைப்பாம்பு மட்டுமின்றி, கட்டுவிரியன் போன்ற கடும் விஷம் கொண்ட பாம்புகளும் கார் & பைக்குகளில் அடைகலம் புகுந்த சம்பவங்களை இதற்குமுன் பார்த்துள்ளோம்.
இதற்கு காரணம், பாம்புகளின் இரத்தம் குளிர்ச்சியானவை. ஆதலால், அவை சூடான மற்றும் ஆக்ஸிஜன் குறைவாக கிடைக்கக்கூடிய பகுதிகளையே விரும்பும். கார் & பைக்குகளில் என்ஜினினால் கிடைக்கும் வெப்பம் அவற்றின் விருப்பத்திற்கு ஏற்றவையாக உள்ளன. குறிப்பாக, மலைப்பகுதிகளில் மழைக்காலங்களில் இவ்வாறு அவை வாகனங்களுக்குள் தஞ்சம் புகுவதை அதிகளவில் பார்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாம்புகள் இவ்வாறு வாகனங்களுக்குள் நுழைவதை தவிர்க்க வேண்டுமெனில், வாகனங்களை அவ்வப்போது ஆயில், க்ரீஸ்களை போட்டு சுத்தம் செய்து பராமரிப்பது அவசியமாகும். ஏனெனில், ஆயில், க்ரீஸ்களின் வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது. அதேபோல், வாகனத்தை நீண்ட நாட்களுக்கு ஓரங்கட்டி வைக்காதீர்கள். ஏனெனில், வாகனங்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும்போது ஏற்படும் அதிர்வுகளும் அவற்றை அங்கிருந்து செல்ல வைத்துவிடும்.


Click it and Unblock the Notifications








