ஒரே ஸ்கூட்டரில் 7 பேர், அத்தனை பேரும் சிறுவர்கள்!! உரிமையாளரை கொத்தாக தூக்கிய போலீஸார்
ஒரே ஒரு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சுமார் 7 சிறுவர்கள் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவினை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

தகுந்த வயது நிரம்பாதவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது என்பது ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே இருக்கும் விதியாகும். இந்த சட்டத்தினை அவ்வப்போது மத்திய அரசாங்கம் கடுமையாக்கி கொண்டு தான் வருகிறது.
இருப்பினும் இவ்வாறான குற்றங்களை முற்றிலுமாக களையெடுப்பது இப்போது வரையில் முடியாத காரியமாகவே இருந்து வருகிறது. ஏனெனில் சமீபத்தில் கூட சட்டிஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் சிறுவர்கள் சிலர் ஒரே ஸ்கூட்டரில் பயணம் செய்து போலீஸாரை அதிர்ச்சியாக்கியுள்ளனர்.
இதுகுறித்து வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். ராய்பூரில் ரிங் ரோடு எனப்படும் சாலையில் அரங்கேறியுள்ள இந்த சம்பவத்தில், பொது சாலையில் ஸ்டண்ட் செய்ய திட்டமிட்ட சிறுவர்கள் அவர்களில் ஒரு சிறுவனின் தந்தையின் ஆக்டிவா ஸ்கூட்டரை பயன்படுத்தியுள்ளனர்.

இதனாலேயே வைரலான இந்த வீடியோவை வைத்து விசாரிக்க துவங்கிய போலீஸார் ஸ்கூட்டரை வைத்து அதன் உரிமையாளரை கண்டறிந்து அவர் மீது சாலை ஒழுங்கை சீர்க்குலைத்ததற்காக நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அபராதத்தை விதித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவரது ஆக்டிவா ஸ்கூட்டரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

பார்ப்போரை மிரள வைக்கும் இந்த வீடியோவில் ஒரே நேரத்தில் ஒரு வாலிபர் உள்பட மொத்தம் 7 சிறுவர்கள் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்தவாறு ஸ்கூட்டரில் பயணித்துள்ளனர். ஆக்டிவா ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாகவே மூன்று பேர் தான் (இருவர் மட்டுமே அமர வேண்டும் என்கிறது சட்டம்) அமர முடியும்.

ஆனால் இவர்கள் சிறுவர்கள் என்பதால் இருக்கையில் நான்கு பேர் அமர்ந்துள்ளனர். மீதி மூன்று பேரில் ஒருவர் ஓட்டுனருக்கு முன்பக்கத்தில் கீழேயேயும், மற்ற இருவர் பேருந்து, இரயிலில் புட்போர்டு அடிப்பது போன்று ஸ்கூட்டரின் பக்கவாட்டில் நின்று கொண்டும் பயணம் செய்துள்ளனர்.

இதில் ஒருவர் தலையில் கூட ஹெல்மெட் இல்லை. இது உண்மையில் மிகவும் அபாயகரமான செயல். இந்த ஒரு வீடியோ மட்டுமின்றி இந்த சிறுவர்களின் பயணத்தை சாலையில் பார்த்த பலரும் தங்களது போனில் படம் பிடித்திருப்பர். ஆனால் ஒன்று மட்டும் தான் இணையத்தில் வெளியாகியுள்ளது.

காரில் சென்றவர்கள் படமாக்கியுள்ள இந்த வீடியோவில், வேறொருவர் நம்மை பார்க்கிறார் என தெரிந்தவுடனே ஸ்கூட்டரில் ஒருவரையொரு ஒருவர் இடித்து கொண்டு பயணம் செய்யும் இந்த சிறுவர்களின் முகத்தில் ஒரு வித மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது.

இதில் இருந்து இவ்வாறு பயணம் செய்வது தவறு என்பதே அவர்களுக்கு தெரியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு வைரலாகும் வீடியோக்களினாலேயே பலர் போலீஸாரிடம் சிக்கி கொள்கின்றனர். அவர்களை எப்படியோ அடையாளம் கண்டுக்கொள்கின்ற போலீஸார் மிக அதிக தொகையை அபராதமாக விதிக்கின்றனர்.

இந்த சம்பவத்திலும் ஸ்கூட்டரின் உரிமையாளருக்கு சுமார் ரூ.40,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பு தெரிவிக்கின்றது. பறிமுதல் செய்த ஸ்கூட்டரை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ள போலீஸார் நீதிமன்ற அழைப்பின்போது வரவேண்டும் எனவும் ஸ்கூட்டரின் உரிமையாளரிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர். நீதிமன்றம் இன்னும் தனது தீர்ப்பை வழங்கவில்லை.

இந்த வழக்கில் ஸ்கூட்டரின் உரிமையாளருக்கு அதிகப்பட்சமாக 3 ஆண்டு சிறைத்தண்டனை வரையில் விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். சட்டத்திற்கு புறமாக சிறுவர்களை இவ்வாறு வாகனத்தை ஓட்ட அனுமதித்தாலோ அல்லது பயணித்து கொண்டு சென்றாலோ வாகனத்தின் உரிமையாளருக்கோ அல்லது சிறுவர்களின் பெற்றோர்களுக்கோ தான் தண்டனை விதிக்கப்படும்.

இதற்கு உதாரணமாக சம்பவங்கள் பலவற்றை இதற்கு முன் பார்த்துள்ளோம். ஏனெனில் வாகனம் ஓட்டுவதற்கான வயதிற்கு குறைவான வயது உடையவர்களை வாகனங்களை ஓட்டி சென்று அவர்களுக்கோ அல்லது அவர்களினால் மற்றவர்களுக்கோ பெரிய அளவிலான விபத்தில் ஏற்பட்டால் போலீஸாரின் தலை தான் உருளும்.
இதனாலேயே மைனர் ட்ரைவிங்கை போலீஸார் எந்தவொரு சூழலிலும் அனுமதிப்பதில்லை. இதற்கு முன்பு கூட தொடர்ச்சியாக தனது மகனை மோட்டார்சைக்கிள்களை ஓட்ட அனுமதித்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு போலீஸார் கடும் எச்சரிக்கையை தெரிவித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications








